நாய்களும் நானும்!!!(repeated Hits :)


வலப்பக்கத்து வீட்டு கருப்பு நாயும்,
இடப்பக்கத்து வீட்டு சாதி நாயும்
முக்கை நக்கிக் கொள்ளும் அளவுக்கு
நெருங்கிய நண்பர்களாகத்தான் இருந்தன !

எனக்கு நாய்கள் என்றால் பிடிக்கும் ,
என் வீட்டில் எந்த நாயும் இல்லை.
ஆனால் என் வீட்டுக்கு
நாய்கள் வந்து போவதுண்டு.


இருவீட்டு நாய்களும் எலும்பு அதிகம்
கிடைக்கும் போது முறைத்துக் கொண்டாலும்
அடுத்த தெரு நாய் கவ்விக் கொண்டு
சென்றுவிடக் கூடாதே என்ற 'பாசத்தால்'
ஒரு காலத்தில் சேர்ந்து எலும்புதுண்டை
பங்கு போட்டுக் கொண்டன !

ஒரு நாள், சாதி நாய், கருப்பு நாய்க்கு தான்
சாதி நாய் என்ற பெருமையை கூற
இதைப்பிடிக்காத கருப்பு நாய்,
சாதியைச் சொல்லி திட்டி குறைக்க,
சாதி வெறி கொண்ட நாய் நன்கு தெரிந்த
நாய்களை கூட்டிக் கொண்டு வந்துவிட்டது.
என்னால் முடிந்த அளவுக்கு சண்டையை
விலக்கி நாய்களை
சமாதானமாகப் போகச் சொன்னேன் !

எந்த நாயும் கேட்பதாக தெரியவில்லை
சாதி நாய் தனது நண்பர்கள் நாயிடம் சொல்ல
அந்த நாய்கள் என்ன ஏது என்றே கேட்காமல்
குறைக்க ஆரம்பித்துவிட்டன.

அதுமட்டுமின்றி இந்த கருப்பு நாய் தான் சொறிநாய்
இது பலரையும் கடித்துவிட்டது,
கல்லால் அடிக்க வேண்டும் என்று ஊரே கேட்கும் படி
அனைத்து நாய்களும் குறைத்து வைத்தன.

நாய்கள் அடித்துக் கொள்ளட்டுமே, ஆனால்
எனக்கு பழக்கமாக கருப்பு நாய் இருப்பதற்காக
அதை வெட்டிவிடு என்கிறது சாதிநாயும்
அதற்கு ஆதரவான மற்ற நாய்களும் !

இந்த நாய் சண்டையின் குறைப்பின்
சத்தத்தில் உயர் சாதி நாய்களும்
உற்சாகமாக குலைக்கின்றன.
என்ன எழவவாவது ஆகட்டும்,

நாய் சண்டை நமக்கெதுக்கு என்று
ஒதுங்கிப் போக நினைக்கிறேன் !
நாய்களே உங்கள் சண்டையில்
என்னை வம்புக்கு இழுக்ககதீர்கள்
நாய்களே!

போருக்குத் தயாராகிறேன் !


மீன்கள் புரளும் கழிமுகத்தைப் போல்
குறுவாள்கள் நிறைந்திருக்கின்றன
என் பாசறையில்
இரத்தம் பார்க்கக் காத்திருக்கும்
பசித்த புலியின் பற்களென
ஒன்றையொன்று குத்தி
வெறியேற்றிக்கொள்கின்றன
கற்களும் உலோகங்களும்
உரசிக்கொள்ளும் அச்சத்தம்
ருசி கொண்ட பேரொலியை ஒத்திருக்கின்றது
தசைப் பிசிறு உலர்ந்த வாள்களின்
கண்ணீர்க் கதைகள்
ஏதேன் நதிநீரால் கழுவப்படுகின்றன
என்னுடலைக் கீறிக் கீறி
ஒவ்வொன்றாய்ச் சோதனையிடுகிறேன்
அவற்றின் கூர்மை
பிஞ்சுப் பெண்ணொருத்தியின்
முளைத்த மார்புபோலத்
திருப்தியூட்டுகிறது
தூரத்தில் தீவட்டி ஏந்திய
மனிதர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்
போருக்குத் தயாராகிறேன்
குறுவாள் ஒன்றை
யோனிக்குள் மறைத்துக்கொண்டு..

-சுகிர்தராணி

இரண்டாம் சாமங்களின் கதை


குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய
இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்பதியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை

பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான் அருவெறுப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்

நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மைதான்
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்

இதற்கு முன்னும்கூட
உன் குழந்தைகள் வேறு எங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்

நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புறிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை

முதல் ஸாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது
கனவுகள் பெருகும் இரண்டாம் ஸாமம்

சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஸாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

-சல்மா

கானல்வரி


தண்டவாளங்கள் திறக்கின்ற பாதையில்
நில்லாது ஓடிக்கொண்டிருக்கிறது
மனிதகதி

ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும்
ஒரு குறிப்பிட்ட நிறஒளியும் சோம்பலும்

நிறம் இறுகிய ஒரு மனிதன்
அடிக்கடி தென்படுகிறான்

அவனது உறக்கத்திற்குள்
நிறைய ரயில் வண்டிகள் நுழைந்து செல்லும்போலும்

உடலைப் பிசையும் இளமையைச்
சந்திக்கும் ஒரு பூங்காவாக

எல்லா ரயில்நிலையங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன

கடைசியாய் அவரோடு ரயிலுக்காகக்
காத்திருந்தபோதுதான்
கொடூரமான ஊளையுடன் ரயில் வந்து நின்றது

எல்லோரும் அறியவும் காணவும்
தனது மார்பின் திறந்தவெளியில்
என்னை அணைத்து முத்தமிட்டார்

பின் எப்பொழுதுமே
அவரை அங்கு சந்திக்கவில்லை

-குட்டிரேவதி

நினைவின் மேடு


அலைகள் சரியும் கடலில் அவள்
உடல் நிமிர்த்தி நடந்தாளாம்
வண்டியில் சிக்கி நாயினுடல் கிழிந்து விழ
மண்ணைப் பூசி உயிர் தந்தாளாம்
நூறு நூறு ஆண்டுகளின் வாசனையை
ஒரு தாமரையைப்போல் சுமந்தாளாம்
நீர் சுரக்கும் கண்களால்
நடுநிசியெல்லாம் பாடினாளாம்
வாதை பீடித்த உடல்களை
மருந்தின் ஆற்றில் முக்கி எடுத்தாளாம்
மழையில் மழையில் நனைந்தவாறு
கடலையே இமைக்காமல் நோக்கியிருந்தாளாம்
‘உடம்பெல்லாம் மயிர், ஆம்பிளை மாதிரி
இங்குதான் அவள் கண் மூடினாள்’ எனப்
பூக்கள் விழித்த புதரைக் காட்டினர்
அழுதுவிட்டேன் நான்



- குட்டி ரேவதி

வேசியின் வீடு


உனது நிலைப்பாடுகளில் பருவமடைகிறது
எழுதப்படாதயென் காவியங்கள்
எனினும் புத்தம்புதிய ராகஸ்வரங்களைப் பரிசளிப்பேன்
பூமியாகி வெடித்தணைத்துக் கொல்லவும்
உடலெங்கும் காற்றாகி
ஊதி வெடிக்கச் செய்யவும்
ஆழி கவ்வும் உலகில் அந்தரமாக்கவும்
குறுக்கிடுகளற்று விளம்பினாய்
இந்த மாலைப்பொழுது ஒரு மரணத்தை
உரிஞ்சும் பளிங்கென
இலைகளிலும் கிளைவெளிகளிலும்
பூத்துக்கிடந்த சூரியன் நஞ்சுறவுகளாய்
சுவாசம் உதிர்க்கும் துர்ச்சகுணத்தில்
வழியும் கோழைகளில் காடெங்கும்
காமவாசம் வீச
தாய்மையடைந்தாள்
சிறகு வளர்ந்த வேர்கள்
நடுவாசலில் நின்று தேம்பியழுவதை
நோக்கும் கண்களுக்கப்பால் தெரிவது
இராப் பிச்சைக்காரியின் முனகல் அல்லது
அற்றைப் பரிசக்காரியின் இந்திரஜாலம்
பெயரிடப்படாத ராகஸ்வரங்களைத்
துய்த்துணர்ந்த வேசியன் வீடெங்கிலும்
புனையப்பட்டுள்ளவை
தாய்மையின் அடிவயிறுகள்
தொண்டைக்குழியில்
துருத்தி அடைத்து நகர்ந்தபோது
மீன் செதில்களெனத் தரையெங்கும் வெண்தூள்
மிதங்கிக்கொண்டிருந்தன
புற்றின் மேற்புற நீண்டுகிடக்கும்
வாய்மூடிய பாம்புகளைச் சிதைத்தெரிய
காய்ந்த மாட்டுத்தோலினைப் போல்
மயிர்களுதிர்ந்த மைதானம்
சௌகர்யமாயிற்று
வலிகளை வரித்துச்சொல்லி அழத்தெரியாத
கண்ணாடி தேவதையின் உறைந்த பாதரசம்
ஒரு வெற்றுத்தாளென
வெளியெங்கும் விரைத்து நிற்க
வாழ்தலின் அடிவயிற்றை
வருடிக்கொண்டிருந்த பீதாம்பரம்
உயிரினைக் குவித்து பிதுங்கி பீய்ச்சியடித்த
மாத்திரத்தில்
மாறுதலற்ற பருவமாகிய
பருவக்கோடையதைக் கடந்துகொண்டிருக்கிறாள்
கடவுளின் கன்னியாஸ்திரி.

-கு.உமாதேவி

இன்றைய பகல் பொழுது என்னுடையது


உயர்ந்த நெற்குதிர்போலிருக்கும்
இரவின் ஆளுகையிலிருந்து
காற்றின் கயிறேறித் தப்பிக்கிறேன்
வெளிச்சத்தின் நதியில் மூழ்கி எழ
படீரென்று திறந்துகொள்கின்றன
என் உடலின் கண்கள்
எவ்வளவு சுகங்களை இழந்திருக்கிறேன்
செம்பழுப்பான முத்தச் சுவட்டைக்
கன்னத்தில் இடுகிறது சூரியன்
கண்ணிமைக்கும் நேரத்தில்
பறவையாகிப் பறக்கின்றேன்
உரசிப் புணர நெருங்கி வருகிறது
ஒரு நிஜப் பறவை
கீழிறங்கி வனங்களில் திரிகின்றேன்
விலங்குகளோடு ஓடுகின்றேன்
இலையுதிர்ந்து நிற்கும் மரங்களில்
முத்தங்களைக் கட்டித்
தொங்க விடுகிறேன்
நெடுநாள் தவித்த மழையின் கொடிகளை
என்மீது படர விடுகின்றேன்
முலையழுந்த என் நண்பனைத் தழுவுகையில்
பகலின் குளிகை தீர்ந்துபோகிறது
வருகின்ற இரா எப்படியோ
இன்றைய பகல் பொழுது என்னுடையது.

-சுகிர்தராணி

ஒற்றை சாட்சி


கிரணங்கள் கரைந்து வழியும்
பின்மாலை வேளையில்
என் அத்தனை பலவீனங்களையும்
சுருட்டி ஒளித்தபடி
அவ்விடத்தை அடைகிறேன்
பகலின் ஒளி துடைக்கப்பட்டு
மின்னும் அவ்விடத்தின் பேரமைதி
மிருகத்தின் ரோமத்தால் பின்னப்பட்ட
ஒரு போர்வையாகி என்னைப் போர்த்துகிறது
எத்தனை பாதச் சுவடுகள்
எத்தனை கிசுகிசுப்பான வார்த்தைகள்
பாதரசத் திவலைகள்போல்
காலடியில் உருண்டு ஓடுகின்றன
சொல்லாமல் விடப்பட்ட காதலை
மரக்கன்று ஒன்றை நடுவதன் மூலம்
சொல்லிவிட முடியாதுதான் என்றாலும்
இதுநாள் வரை நீருற்றிக் காத்துவந்த
வாகைமரம் பூத்து உதிர்க்கும்
வெளிறிய பூக்களின் நெடி
உன்னை நோக்கி நீள
ஏதாவது விருட்சத்தின் அடியில்
நீயும் நின்றுகொண்டிருக்கலாம்
நிராகரிப்பின் ஒற்றைச் சாட்சியாய்.

-சுகிர்தராணி

ஆதித் தாயின் கைரேகை


ஒளியூடல் கொண்ட அப்பிரதேசத்தில்
என்பெயர் அழைக்கப்பட்டவுடன்
முகத்திலறையும் காற்றைப்
பருகியபடி நுழைகிறேன்
பாம்புகள் இணைந்தடங்கும்
ஓசையினும்
மெலிந்துவிடுகிறது என்குரல்
ஆழ்கடலின் குளிர்நீரோட்டத்தை
ஒத்தாயிருக்கிறது
என் நடையின் சாயல்
ஆடைக்கிழிசலைக் கையால்
மறைக்க முயன்று தோற்கும்
சிறுவனின் மருட்கை
என் தோலில் படிந்திருக்கிறது
கொடிகள் பின்னிய வழி
முற்றுப்பெற நிமிர்ந்து பார்க்கிறேன்.
கல்லாய் சமைந்து நிற்கிறது
ஆசிர்வதிக்கப்பட்ட அவ்விருட்சம்
ஆயிரமாயிரம் காலஅழுத்தம்
அதன் கண்களில் வழிகிறது
உடல் முழுவதும்
காலொடிந்த குகை ஓவியங்கள்.
குறிப்பெடுத்துக் கொண்டு திரும்பும்
என் கைகளில் சிவந்த பழமொன்று.
அதில் அழுத்தமாய் படிந்திருந்தது
ஆதித்தாயின் கைரேகை.

-சுகிர்தராணி

இரட்டைக்கால் சிலுவை


இரட்டைக் கால்களுடன் நிற்கிறது
விநோதமாய் சிலுவைமரம்
கயிறுகளைக் கொண்டு உயர்த்தப்படும்
என் தலையில் சுற்றப்பட்டிருக்கிறது
உபயோகமற்ற லங்கோட்டுத்துணி
உதடுகளில் சிவப்பு வண்ணம்.
என்கால்களும் விரிக்கப்பட்டு
கிளைமுறியும் விசையுடன்
இறக்கப்படுகின்றன ஆணிகள்
நெருப்புக் குழம்பெனப் பரவுகிறது
செஞ்சூடான இரத்தம்
நான் எதையும் முணுமுணுக்கவில்லை
மலையின் நெளிந்த பாதையில்
நீண்டிருக்கிறது வரிசை
அவரவர் விரும்பியபடி
ஆணிகளால் நிரப்பப்படுகிறது
என்னுடல்.
நிர்வாணம் கரைந்த புளிப்புநீர்
வாயில் பட்டதும்
என் திரைச்சீலை இரண்டாகக் கிழிகிறது
திருப்தியுடன் திரும்பிச் செல்லும்
உம்மை எதிர்கொள்கின்ற
சந்ததியின் குறிகளிலெல்லாம்
ஆணித் தழும்புகள்.

-சுகிர்தராணி

கூடல் எங்கேயும் சாத்தியம்.


என் அறைக்குள் பிரவேசிக்கும்
உன் விழித்திரையில் பதிகிறது
வியப்பின் பிம்பம்
நாற்புறமும் சுவர்களற்ற
அறையும் அமையக்கூடுமென்பதில்
குழப்பமுறுகிறாய்
உன் வருகையின் வெளிச்சம்
கதவுகளெவையும்
பொருத்தப்படாததை அறிவிக்கிறது
கூரையிலிருந்து
நட்சத்திரங்கள் கொட்டுகின்றன
நாயின் தோலாய் வழுக்குகிறது
காலடியில் தரை.
உன் செல்களின் உட்கருக்கள்
நீளத் தொடங்குகையில்
தும்பிகள் திரியும் வெளி
உன்னை வெட்கமூட்டுகிறது
உயிருள்ள மரங்களால்
அலங்கரிக்கப்பட்ட என்னை
குளிர்விக்கப்பட்ட கண்ணாடித் திரவம்
திரைச்சீலையாய் தொங்கும்
உன்னிருப்பிடத்திற்கு அழைக்கிறாய்
முகச்சதை அதிரச் சிரிக்கிறேன்
தெருவோரக் கல்லில்
குறியைக் கூர்தீட்டிக் கொள்ளுமுனக்கு
கூடல் எங்கேயும் சாத்தியம்.
-சுகிர்தராணி

பருவகால வண்ண உடைகள்


மழைக்காலங்களில்
தெருவில் அலையும் சிறுமிகள்
வெண்ணிற மழையையும்

வேனிற் காலங்களில்
வியர்வையை உரித்தெடுத்தபடியே
மஞ்சள் வெயிலையும் உடுத்துகிறார்கள்

தினமும் கருப்பு இரவுகளை உடுத்தி
தெருக்கோடி மூலைகளிடமும்
டூரிங் டாக்கீஸ் மணல் வெளிகளிடமும்
நட்போடு கிசுகிசுக்கிறார்கள்

தம் கட்டற்ற செயல்களால்
பருவங்களை வண்ண உடையாக்கி
காலம் இன்னும் செப்பனிடாத
குட்டி முலைகளின் மீது
உடுத்துகிறார்கள்

பிறகொரு நாளில் மொத்த பருவங்களும்
மொத்த நிறங்களும்
ஒரே நிறமாய் உருப்பெற்று

யோனிக் கிண்ணத்திலிருந்து
உருகி வழிய
அவ்வர்ணத்தை வியந்து சமைகிறார்கள்
சிறுமிகள்

-சல்மா