முலைகள்


முலைகள்
சதுப்புநிலக் குமிழிகள்
பருவத்தின் வரப்புகளில்
மெல்ல அவை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்

எவரோடு எதுவும் பேசாமல்
என்னோடே எப்போதும்
பாடுகின்றன
விம்மலை
காதலை
போதையை....

மாறிடும் பருவங்களின்
நாற்றங்கால்களில்
கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை

தவத்தில்
திமிறிய பாவனையையும்
காமச்சுண்டுதலில்
இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன

ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்
சிசு கண்ட அதிர்வில்
குருதியின் பாலையும்
சாறெடுக்கின்றன

ஒரு நிறைவேறாக் காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த்துளிக்ளாய்த் தேங்கித்
தளும்புகின்றன.

-குட்டி ரேவதி

விதையுறக்கம்


ஆகவே விளிம்புநிலையைப் பற்றிக்கொண்டுத்
தொங்குகிறேன்

இனி ஒரு பொழுதும் உனைத் தேடாதிருப்பேனாக
நீர்நிலையைத் தேடும் பறவையைப்போல்
இரவின் உச்சத்தில் கனவு
கல்லெறிந்ததால் உண்டான வட்டங்களாய் விரிகிறது
அதன் ஒளிபரப்பில் உன் புன்னகையால்
எனைத் தேற்றுகிறாய்; தேற்றுகிறாய்

சிறார்கள் தமது உறுப்புகளை
மறைவுகளில் கண்டறிவதுபோல்தான்
நான் உன்னைக் கண்டறிந்தேன்
உடல், விதைக்கவோ வளர்க்கவோ
யாருமேயிலாது
பாழ்நிலமாய் உலர்ந்து வெடிக்கிறது
எச்சத்தில் ஊறிய விதையைப்
பறவைகள் வெளிக்கிட்டுப் பறக்கின்றன
ஒரு மழையின் ஸ்பரிசத்தால் குளிராதவரை
வெடிப்பில் வீழ்ந்த விதை
உறக்கம் தழுவிக்கொண்டிருக்கும்

இனி ஒருபொழுதும் உனைத் தேடாதிருப்பேனாக


-குட்டி ரேவதி

சூல் கொண்ட பாம்பு


பாம்போடு பாம்பு பிணையும்
அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும்
வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும்
உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ
முட்டை மீது முட்டையடுக்கி அவயம் காக்கும்
மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு
உடல் விரித்து ஆனந்திக்கும்
உயிரிழுத்துப் போட்ட பின்னும்
கண் துஞ்சாமல் சூல் கொள்ளும்
பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும்
உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும்
ஆணொன்று விரட்டிப் புணர
உடலெல்லாம் கருக்கொள்ளும்
வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத்
தாய் மரிக்கும்
உடலின் சிறகடியில் நினைவு குவித்து
முட்டைகள் அவயம் காக்கும்
கண்ணில் புத்துயிரின் வெறி
நெஞ்சில் பெருஞ்சுவாசம்
நிலைதாங்கி நின்றக்கால் கரு காலாட்டும்
பூக்களின் மீது வண்ணாத்தியாய்க்
காற்றில் மிதக்கும்
கரப்பானின் புற்றுக்குள்
குஞ்சுகள் பொரியுமட்டும்
சீறிக் காவல் காக்கும்
இரத்தச் சகதியில் கால் எழும்பி நிற்பதற்காய்
ஈரநாவால் நக்கி நக்கி உயிர்கூட்டும்
மெல்ல நினைவின் கண் திறந்து
கல்லுக்குள் பதுங்கும் முன்
கழுகொன்று கொத்திப்போகும்
புலம் பெயர்ந்த மண் பிறக்கும்
திசைகள் அறியும்
கனவுகளை அடக்கி
முட்டைகளாய் ஊதும்
நிலவொளியில் உடலைப் புரட்டி
உயிர்கொள்ளும் .

-குட்டி ரேவதி

நுரைத்துப் பொங்கும் காதல்


நீ நிரம்பி வழியும் கடலின்
கரையொதுங்கிய சிறு தாவரமாய்
அலைவுறுகின்றேன்
ஓராயிரம் ஓங்கரிப்புகளுடைய
உன் அன்பின் அடிவாரத்தில்
காலூன்றி களித்திருந்த நாட்களில்
நீ கரைந்த உன்னில்
பருவம் பருவமாய் மூழ்கி
காதலின் முத்துகளைச் சேமிக்கிறேன்
குளிரும் சுழலும் உள்குமைந்து
உன்னை உருமாற்றிய கணத்திலும்
அலை இதழ்களால் என்னை
முத்தமிட்டுச் சென்றிருக்கிறாய்
உன்னையும்
நுரைத்துப் பொங்கும் காதலையும்
இழத்தல் என்பது
ஒப்பீடுகளற்றது என்னும் தருணத்தில்
காலத்தின் நங்கூரம்
என் வேர்களைப் பறிக்கிறது
உன்னிலிருந்து கிளம்பி
உன்னிலேயே பயணித்து
உன் கரையிலேயே ஒதுங்கிய
என் காதலின் பெருவாழ்வு
இன்னொரு முறை வாய்க்கட்டும்

-சுகிர்தராணி

சில கரித்துண்டுகள் !!


வழக்கொழிந்த காட்சியகத்தில்
புழுத்தநெடி வீசும் தாழிஒன்று
அகழ்ந்தெடுக்கப் படுகிறது
கனவுகளைச் சேமித்து வைக்கும்
மனதின் கலயத்தைப் போலிருக்கும்
அதன் உட்சுவரில் கரிய
சித்திரங்கள் தீட்டப் பட்டிருக்கின்றன
மாறிய பருவத்தின் போதெல்லாம்
பூக்களைச் சிருஷ்டித்துத் தந்த
விருட்சங்களும்
கள்ளிப் பாலாய் திரண்டிருக்கும்
காட்டுப் பழங்களும்
சர்ப்பத்தின் நீண்டிருக்கும் நாவெனச்
சாட்டையைச் சொடுக்கும் ஆண்களுமாய்
வரையப்பட்டவை பிரமிப்பூட்டும் வேளையில்
உள்ளிருக்கும் உதிர்ந்த எலும்புகளுக்குள்
மின்னுகின்றன சில கரித்துண்டுகள்

-சுகிர்தராணி-

பட்டையுரிந்த காதல்!!


பருவம் கழிந்தொரு விருட்சமாய்
பூத்துக் கொண்டிருக்கிறேன்
அருகம்புற்கள் கிளைத்திருக்கும்
வரப்பின் விளிம்புகளில் நின்று
இருகை நீட்டி அழைக்கிறாய்
மரமாகவே நிற்கிறேன்
காதலின் இனிப்பு திரவம்
உன்னிலிருந்து உருகி வழிந்து
என்னை நனைக்கிறது
அள்ளிப் பருக முடியாமல்
கைகள் புதைந்திருக்கின்றன
சிறு தலையசைப்பின் மூலம்
சில பூக்களை உதிர்த்து
உன் நாட்பட்ட காதலை
ஏற்கலா மெனினும்
காற்றும் பித்துப் பிடித்தாற்போல்
இடம் பெயர்ந்து விட்டிருக்கிறது
யாது செய்வேன்
என் அன்பை யாசித்து யாசித்துக்
கடும்பாலையைக் கடந்து போகிறாய்
திரும்பி வரும்போது புரிந்து கொள்
உன் பெரும்அன்பால் தீய்ந்துபோய்
பட்டையுரிந்து மொட்டைமரமாய் நிற்கும்
என் காதலையும்

-சுகிர்தராணி-

நானும் நின் பசியும்


1
கதிர்உச்சியில் வீழும்
வன்பசிப் பொழு தொன்றில் நிகழ்ந்தது
நம் முதற்காணல்.

அகாலத்தில் நுழைந்த காயசண்டிகையாய்
நூற்றாண்டின் பட்டினிக் கரமேந்தியபடி
என்முன் நீ.

எனதுணவை நினக்களித் தோம்பினேன்
என் காற்றும் நீரும் நீயே கொண்டாய்.
எனது டைமைகள் யாவும்
வழங்கியபின்னும் பசியாறாது

2
என் விந்தின் அடர்சுவையில்
(ஒருவேளை) உனது நாவின் பசியடங்கு மெனும்
நின் மாறா வேண்டலின் பொருட்டு
நான் தன்னின்பத்தில் திளைத்துக் களைத்தேன்.

ஒருப்போதில் பசியின் உக்கிரத்தினூடாக
என் கறியுங்குருதியும் கலந்துண்டாய்
பின்னரென் குருத்தெலும்புகளின் மென்மையை
கலவாய் சுரக்க
விரும்பிச் சுவைக்கலானாய்.

இங்கணமாய்............ இவ்விதமாய்...........
என் ஊனுண்டு உயிர் சுவைத்தாய்.

என்னை யெரியூட்டிய
மூன்றாம் கரிநாளில்
என் சுடலையின் சாம்பலை
வாரிக் கோரித் தின்றபின்னும்
தீராமல் தொடருமுன் பெரும்பசி.

பசிப்பிணியின் ஆயிரமாயிரம் உருக்கொண்டு
நீளுமுன் கைகளில் இட்டுநிரப்ப (ஏதுமின்றி)
இன்னுமின்னும் எனத் தேடியவாறு
சூன்யத்தில் அலைவுறு மென் உயிர்த்துகள்

மாதங்கி

அவள்தான் மலைகளுக்கப்பால் என்னுயிரை வைத்திருக்கிறாளாம் !


ஆத்ம தோழி
புரவியின் மினுமினுப்போடு
என்னை முத்தமிட்டு எழுப்புவாள்

குளிப்பாட்டி என்னுடல் முழுக்க
அலங்காரப் பூச்சிடுவாள்
எங்கிருந்து வருகிறாள்
எங்குபோகிறாள் தெரியவில்லை

அவள்தான் மலைகளுக்கப்பால்
என்னுயிரை வைத்திருக்கிறாளாம்

அப்பள்ளத்தாக்குகளின் முரட்டுச்சுவர்களில்
பட்டுத்திரும்பும் குரல்
என்னுடையதாம்.

மலைப்பயணம் குறித்தான ஆவலை
வெளியிடும் போதெல்லாம்
ஆற்றங்கரை மண்மேடுகளையும்
கிளைகளில் தொங்கும் காற்றையும்
சொல்லித் திசைத் திருப்புவாள்

காலடியில் நழுவும் குழிகளும்
கெட்டித்துப் போன சொற்களும்
என் கேவலை அதிகரிக்கின்றன

தடித்தயென் துக்கம் தாளாது
தொலைவிலிருக்கும் மலைப்பாதையை
அடையாளம் காட்டுகிறாள்

ஒருவேளை
நீங்களிதைப் படித்து முடிக்கும்போது
என்னை நான் அடைந்திருக்கலாம்.

சுகிர்தராணி

பெரும்பாம்பு



கூடலின் பிந்தைய அமைதியை
துடைத்தெறிந்து ஒலிக்கிறது தொலைபேசி

விரல்களால் பற்றி காதோடு இழைக்கிறேன்
அதன் துளைகள் வழியே
பீறிடுகின்றன எண்ணற்ற பாம்புகள்

நொடிப்பொழுதில் சட்டைகளை உரித்துக்
கண்ணியொன்றைப் பின்னுகின்றன
பிளவுப்பட்ட நாக்குகளால்
உறுப்புகளைத் துழாவி ருசிக்கின்றன

என்னுடலெங்கும்
பிசுபிசுப்பான செதில்தடங்கள் பரவ
முட்டையிடவும் குட்டியீனவும்
இடம்தேடித் திரிகின்றன

கலவியுறாத செழித்த பாம்புகள்
என் கருத்த தசைகளின் மேல்
பற்களை அழுத்துகின்றன

விஷத்தில் குளித்த எழுத்துக்கள்
நீலம்பூத்த என் தோலிலிருந்து
நுரைத்துப் பொங்க

எல்லாப் பாம்புகளையும் விழுங்குகின்றேன்
நானே பெரும்பாம்பாகி.

-சுகிர்தராணி

மணப்பெண்


மாலை நேரக்காற்று
முன்னிற்க
மணநாளில் பவ்யமாய்
விடை பெறுகிறாள்
மணப்பெண்

அவளது பர்தாவுக்குள்
முகம் புதைத்தபடி
மலர்களின் வாசனையோடிணைந்த
புணர்ச்சியைப் போதிக்கிறாள்
தமக்கை.

தானே அறிந்திராத
தடித்த புத்தகத்தின் பக்கங்களை
துரிதகதியில் புரட்டுகிறாள்
எந்த நாளில் புணர்ந்து
கருவைத் தள்ளிவைக்கலாம் எனவும்
ஹராமாக்கப்பட்டதெனவும்*
கூடவே
புணர்ச்சிக்குப் பிந்தைய
சுத்த பத்தங்களையும்

தன் குள்ள உருவத்திற்கேற்ற
குற்றக் கண்களில் குறுக்கிடுகிற
வாழ்வின் சுகவீனங்களையும்
நைந்து போன புணர்ச்சியின்
வெற்றுச் சூத்திரங்களையும்
தனக்குள்ளாக ஒளித்தபடி

அவ்வப்போது
வெட்கத்தில் துவண்டு
விழுகிற வார்த்தைகளை
சிறுமியின் அசட்டுத் தன்னம்பிக்கையுடன்
துடிப்போடு கடிவாளமிட்டபடி

தன் காதுத் தொங்கட்டானில்
சிக்கி மடங்கிய ஆலோசனைகளை
நீவி எடுத்து

அன்றைய முழு இரவுக்குமாக
படுக்கையில் படர்த்துகிறாள்
புது மணப்பெண்

-சல்மா.

புணரும் மிருகமாய் நீ


அந்த நிமிடங்களில் நீ
நீயாக இருக்கவில்லை
உன்னுள் இருந்த மதுபோதை
ஒருபுறம் காமப் பசி மறுபுறம்
இரண்டின் வெளிப்பாட்டில்
நீ புணரும் மிருகமானாய்
காதலுக்கு மட்டுமே கசிகின்ற என் யோனி
உன் ஆவேசத்திற்கு கசிய மறுத்தது
உன் விடாப்படியான போராட்டதினூடே
என் வறண்ட யோனிக்குள்
தாகம் தீர்க்க முயன்றது உன் ஆண்குறி
ஒன்று...இரண்டு....மூன்று என
என் யோனித் துவாரத்தை
நீ ஊடறுக்கும் ஒவ்வொரு முறையும்
உடலை விட மனது வலித்தது
உன் வேகம் அதிகரிக்க
என்னில் கண்ணீர் தயாரானது
வழமையின் காதலில் கசிந்து
உன்னைக் கட்டியணைத்து
முத்தமிடும் எனக்கு
உன் மூச்சுக் காற்றின்
மது நெடி சாட்டையடித்தது...
எங்கிருந்தோ வந்து
அம்மாவின் முகம்
மனதில் நிழலாடியது
இதைத்தானா
"பெண் பொறுப்பதற்கு
பிறந்தவள்" என்றாய் அம்மா?
உன் உயிரின் கடைசிச் சொட்டு
பலம் வரை பொறுத்திருந்தேன்
அப்பாடா..
உன் நீர் கசிந்து
நீ மனிதனாய்
என்ன உணர்ந்தாயோ
"பசிக்குதா?" என்றாய்
முழுதாய் உனது பசி தீர்ந்த பின்
குரல் தழும்ப
"வலிக்குது" என்றேன்
எந்தப் பதற்றமும் இல்லாமல்
"ஸாரிடா செல்லம்" என்றாய்...
உருண்டு திரண்டிருந்த
என் கண்ணீர்த்துளிகள்
மெளனமாய் வழிந்தன...
சில நிமிட மெளனங்கள்...
எங்கே என் தலை கோதி
என்னை வருடிக் கொடுப்பாயோ
என எதிர்பார்த்த எனக்கு
உன் குறட்டை ஒலி
உயிரை வதைத்தது...
உன் தாகம்
உன் தேவை- தீர்ந்ததால்
உனக்கு உறக்கம்
என் வலி
என் அழுகை-ஓயாமல்
விழி மூடி விழித்திருந்தேன்.

-மாதுமை சிவசுப்ரமணியம்

வல்லூறுகளை அழைப்பவன் !


சப்பணம் போட்டு உட்கார்ந்து
குரல்வளையிலிருந்து வல்லூறுகளை அழைக்கிறான்
கூட்டம் கூட்டமாக
அவனை வட்டமிடுகின்றன
இரை கிடைக்கும் ஆவலில்

இது வரையிலும் எந்த இறைச்சியையும்
வழங்கியதில்லை
ஆத்திரமடைந்த வல்லூறுகள்
கண்ணாடி ஜன்னல்களின் மீது விழுகின்றன

மொழி தெரிந்தவன்
கண்ணாடியில் மோதிச் சரியும்
அந்தப் பெரும் பறவையை
தற்பெருமையுடன் பார்க்கிறான்

தொண்டைக்குள் வளர்த்துவைத்திருக்கும்
குரல் வித்தையில்
அவனிடம் அந்த மலைநகரமே
நடுங்குகிறது

அவனுக்கு எதுவும் தர
யாராவது மறுக்கிறபோது
அவர்கள்மீது வல்லூறுகளை
கொத்தவிடுவதாகப் பயத்தை விதைக்கிறான்

பயந்தவர்கள்
வல்லூறுகளைத் தொண்டைக்குள் வைத்திருப்பவனிடம்
இறைச்சிகளைத் தந்துகொண்டிருக்கிறார்கள்.