குல தெய்வம்


இன்று அதிகாலையின் முதல் கிரணத்தில்
மாலை சூடிய தெய்வங்களாய் நின்றிருந்த
செங்கற்களில் அவளும் ஒருத்தி
அரை நிர்வாணமாய் இடுப்பிற்குக் கீழ்
நிலம் பரவிய சிவப்புப் பட்டும் பின் பெய்த
மழையின் நனைந்த பாவாடையுடன்
அறையின் இறுக்கத்திலிருந்து
புல்வெளிகளின் வழியே சிவப்பு வண்ணாத்தியாய்
வானம் எம்பினாள்
காட்டுக்குள் வெளிக்குச் சென்ற இளம் பெண்ணை
இழுத்து வைத்துப் புணர்ந்தவனை
இரத்தம் கக்கச் செய்தாள்
சிறு சிரிப்பின் ஒலியோடு
காட்டோடு நின்று போனாள்
இரவெல்லாம் காடு சிரிக்கும்
இரட்டை மின்மினிகளாய்
அவள் கண் அலையும்
பெண்களின் உடல் ஒளிய
காட்டின் வெளி என்றாள்
செங்கற்களில் ஒன்றானாள்.

-குட்டி ரேவதி

பெண்கள் விடுதி


வரையறுக்கப்பட்ட நுழைவாசலையும்
உயரமான சுவர்களையும் கொண்டதொரு நெடிய அறையில்
சன்னல்கள் வானின் விழிகளைப்போல திறந்திருந்தன.
ஏழு கட்டில்களும் அவற்றின் மீது வெண்ணிற மெத்தைகளும் இருந்தபடியால்
உறங்குவதற்கான வசதிகளையும் ஆயத்தங்களையும்
மட்டுமே கொண்டிருந்தன.
ஒருவரையொருவர் காணாத கணத்தில்
உலகச் சந்தையின் கவர்ச்சியான உள்ளாடைகளைக்
கழற்றிக் கொக்கிகளில் மாட்டிவிட்டுத்
தமது நிர்வாணத்தை உரித்து படுக்கையில் கிடத்திவிடுவர்
முழு இரவும் நிர்வாணம் கனவுகளோடு புணர்ந்து சிரிக்கும்
ஆண்மைய உடல்கள் கொக்கிகளில் சிக்கிச்
சுவர்களில் ஆடி உரசும்
விழுங்கிய பிளாஸ்டிக் கோட்பாடுகளைக் குதப்பி வெளியேற்றிவிட்டுக்
காமத்தின் குமைச்சலைக் சுயபுணர்ச்சியால் தீர்த்துவிட்டு
விடியும் முன் மாடியிலிருந்து குதித்துத்
தற்கொலை செய்து கொள்வர்
முகம்பார்க்கும் கண்ணாடியில் அணிவித்துத் துக்கித்த
ஆண்களின் வரைவாடைகள்
கண்ணடாடிக்குள்
உடலின் மீது அசைவதுபோல்
எதிர்ச்சுவரில் அசையும்

-குட்டி ரேவதி

புறக்கணிப்பின் வெறுமை


இவ்விடம்
அதிகம் பரிச்சயமில்லையெனினும்
இங்கிருந்து கிளம்புவதென்பது
வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது

நீ என்னைத்
தீவினையின் எல்லையில் விட்டு
முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து
தடைசெய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன்

இடங்களும் மனிதர்களும் உருவாக்கும்
இந்த உறவும் பிரிவும்
படர்வதற்குள் கிளம்புகிறேன்
என் ஆதிகாலக் குகை வாழ்விற்கு

எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல
ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை
விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை

-சல்மா

மணல் !! தசாவதாரக் கவிதை


‘மணல்
கூழாங்கற்களின்
குழந்தை--!

நீங்கள்
மண்ணை வெட்டுவது
எங்கள் மழலையை
வெட்டுவதற்குச் சமம்-!

அடுத்தவனுக்குப்
பள்ளம் தோண்டியே
அடையாளப்பட்டவனே...
எங்கள்
மண்ணையும் தோண்டிப்
பூமியை புதைத்துவிடாதே!

சோறு போடும்
நிலத்தைக்
கூறு போடும் நீ
விந்துக்குப் பிறந்தவனா?
சிறுநீருக்குப் பிறந்தவனா?

மணல் தரையை
நீங்கள்
மாமிசமாய் அறுத்துத் தின்றால்
எங்கள்
பாவாடை சட்டைக்காரிகள்
எங்கே
பாண்டி ஆடுவது?

எங்கள் மழலைகள் எங்கே
மணல் வீடு கட்டுவது?

கோவண மனிதர்கள்
எங்கே
கொல்லைக்குப் போவது?

நாங்கள்
ஒத்தையடிப்பாதையில்
எப்படி
ஊர் போய்ச் சேருவது?

வேரறுந்த மரத்தின் கீழ்
எப்படி
வெயில் இளைப்பாறுவது?

அகதியாய்ப் போன
பறவைகளை
யார் அழைப்பது?

உங்கள்
சிகரெட் புகையில்
மழை வரும்
என்பதற்காக
எங்கள்
தாகத்தைத்
தள்ளிப்போட முடியாது!

திருட்டுத்தொழிலை விட்டுவிடு
திருடிய மண்ணைக்
கொட்டி விடு!

இனிமேல் திருட நினைத்தால்...
இவனைஇரண்டு துண்டாய்
வெட்டிவிடு!’

-கபிலன் தசாவதாரம் படத்தில்

ஒளிந்திருந்த முலைகள்


கீழே விழுந்துவிட்ட ஐம்பது பைசாவை
குனிந்து எடுத்த நொடியில்
என் உள்ளாடையில் படிந்துவிட்டிருந்தன
சில பார்வைகள்
கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த என் முலைகளைத்
தேடிக் கொண்டிருந்தன
சில பார்வைகள்
கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறேன்

"முன்னாலே போமா" என்று
பின்னாலே தடவிவிட்டு போகும்
நடத்துனர்
கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்
மகளிர் இருக்கையின் இடுக்குகளில்
கூனிக்குறுகி என்னைப் போலவே
சில திரௌபதிகள்
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை

ஆண்டவா!
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்
ஆனால் அடுத்த பிறவியில்
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை...

-முத்தாஸ் கண்ணன்

முகமூடி


அவளது வீட்டின் சுவர்களெங்கும்
அவள் செய்யும் முகங்கள்.

தனது
குருதியிலொரு துளி
மூச்சின் ஒற்றைத் துணுக்கு
மூப்புறுந் தசைத்திரள் சிறிது சேர்த்து
முகங்கள் செய்கிறாள்.

நடு நிசியில் பகலின் வெளிச்சத்தில்
எனது ஊரில்
எங்கோ ஓர் உயிர் இறக்கையிலும்
மற்றொன்று பிறக்கையிலும்
யாரோ ஒருவர் கொல்லப்படுகையில்
கேள்வி கேட்கும் உரிமை தொலைத்து
அவர்கள் தலைகள் தாழ்கையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

ஒரு பெண்ணின் காதல் மறுக்கப்படுகையில்
அவள் பலவந்தமாக இச்சிக்கப்படும்
பொழுதுகளில்
குழந்தைகள் பயந்து அழ மறக்கையில்
வெடிச்சத்தங்கள் பறவைகளின் கூடுகளை
உலுப்புகையில்
காரணமேதுமற்றுக் கடத்தப்பட்டவன்
தன் வாழ்வு பற்றி அச்சமுறுகையில்
வீடொன்று ஆளற்றுத் தனிக்கையில்
கிராமமொன்று கைவிடப்படுகையில்
அங்கே நாயொன்று
உணவின்றி அலைந்து உயிர்விடுங் கணத்தில்
பாலுந் தேனுங் குடிக்கும் எமது கடவுளர்
இல்லை எனத் திட்டப்படுகையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

முகங்களின் மூச்சும்
மூடாத கண்களின் பார்வையும்
குழந்தைகளது என ஏமாந்து
அவள் உயிரூட்டும் முகங்கள் எப்படியோ
அவளது கனவுகளைக் களவாடிவிடுகின்றன
அவ்வப்போது.

-வினோதினி

உடலெங்கும் பயிரான பழுப்புமுடிகள்


இந்த வாழ்க்கை என்னிலிருந்தே உதிக்கிறது

உன் பழுப்பு நிறக்கண்களில் சலம்பும்
பருவவேதனைகளைக் கேட்டிருக்கிறேன்
உன் உடலெங்கும் பயிரான பழுப்புமுடிகள்
எனைத் தம் மென்விரல்களால் வருடுவதை
அனுபவித்திருக்கிறேன்

உலகையே மூழ்கடிக்கும்
சாம்பல்ஒளி உதிர்ந்து
மாலையின் பழுப்புஓளி வாசனை
கிளர்கையில்
என்னுள் நீ மூட்டிய காதலின் அதிர்வும்

என் உடலை வகிரும்
உன் சருமத்தின் பழுப்புக்கதிர்கள்;
அவை உன் தீர்மான அசைவுகளாலும்
அவைமீது விழும் செங்கதிர்களாலும்
ஆனவை

தூக்கத்தில் புரள்பவனைப்போல்
வெற்றுடலால் கதைக்கிறாய்; உன்
புனைவுகளும் கனவுகளும் அசைகின்றன

இந்த வாழ்க்கை
என்னிலிருந்தே உதிக்கிறது

- குட்டி ரேவதி

யோனிகளின் வீரியம்


பலகோடி ஆண்டுகள்
கழிந்தொரு பரிணாமத்தில்
உபயோகமற்று
உன்குறி மறைந்துபோகும்
அக்கணத்தில் புரியும்
உன் சந்ததிகளுக்கு
எம் யோனிகளின் வீரியம்

- குட்டி ரேவதி

வெறி நாய்கள் ஜாக்கிரதை!


நாய்கள் நன்றி உள்ளவை,
ஆனால் தன் இனத்திற்கு ?
அப்படித்தான் ஒரு நாள்
யார் பெரியவன் என்ற போட்டியில்
சில நாய்கள் ஒரு நாயை
குதறி வைத்தது ?
நாயே நீயும் நாய்தானே ?
என்று கேட்ட கடிபட்ட
நாய் உங்க தெரு பக்கமே
வரமாட்டேன் என்று விலகி
ஓடியது ?
கடித்த நாய்களுக்கோ
வெறிப் 'பிடிக்க'
நாய் இரத்தம் குடித்த
நாய்கள் சும்மா இருக்குமா ?
போவோர் வருவோரெல்லாம்
கடித்து வைத்தது !

நாய்களுக்கு நட்பெல்லாம் தெரியாது !
யார் எலும்பு துண்டு போடுகிறார்களோ
அவர்களுக்கு வாலாட்டும்
அவர்களால் ஏவிவிடப்படும் நாய்கள்
எவ்வளவவு நல்லவராக இருந்தாலும்
கடித்துவைக்கும் !

நாய்களை அடித்துக் கொள்வது
பாவம் தான் !
ஆனால் நாய்களோ,

வெறிநாய்கள் இருக்கும்
தெருவில் எச்சரிக்கை அவசியம் !

இல்லை என்றால் எவரும் கடிபடும்
அபாயம் இருக்கிறது !