நானும் நின் பசியும்


கதிர்உச்சியில் வீழும்
வன்பசிப் பொழு தொன்றில் நிகழ்ந்தது
நம் முதற்காணல்.

அகாலத்தில் நுழைந்த காயசண்டிகையாய்
நூற்றாண்டின் பட்டினிக் கரமேந்தியபடி
என்முன் நீ.

எனதுணவை நினக்களித் தோம்பினேன்
என் காற்றும் நீரும் நீயே கொண்டாய்.
எனது டைமைகள் யாவும்
வழங்கியபின்னும் பசியாறாது

2
என் விந்தின் அடர்சுவையில்
(ஒருவேளை) உனது நாவின் பசியடங்கு மெனும்
நின் மாறா வேண்டலின் பொருட்டு
நான் தன்னின்பத்தில் திளைத்துக் களைத்தேன்.

ஒருப்போதில் பசியின் உக்கிரத்தினூடாக
என் கறியுங்குருதியும் கலந்துண்டாய்
பின்னரென் குருத்தெலும்புகளின் மென்மையை
கலவாய் சுரக்க
விரும்பிச் சுவைக்கலானாய்.

இங்கணமாய்............ இவ்விதமாய்...........
என் ஊனுண்டு உயிர் சுவைத்தாய்.

என்னை யெரியூட்டிய
மூன்றாம் கரிநாளில்
என் சுடலையின் சாம்பலை
வாரிக் கோரித் தின்றபின்னும்
தீராமல் தொடருமுன் பெரும்பசி.

பசிப்பிணியின் ஆயிரமாயிரம் உருக்கொண்டு
நீளுமுன் கைகளில் இட்டுநிரப்ப (ஏதுமின்றி)
இன்னுமின்னும் எனத் தேடியவாறு
சூன்யத்தில் அலைவுறு மென் உயிர்த்துகள்

-மாதங்கி

கோடைத்துயில்


பருவங்களென எப்பொழுதும்
உனது நிகழ்வுகளை

பெய்தும் பொய்த்தும்
பூத்தும் காய்ந்தும்
உறைந்தும் தழுவியும்

எனது உடம்பு
தளும்பியும் நுரைத்தும்
பாய்த்தும் தேங்கியும்
வறண்டும்

எல்லாக் கோடையிலும்
உனது வரவை எதிர்நோக்கி
என் உடம்பில்
முட்டைகளையும் விதைகளையும்
பாதுகாத்தபடி

வசந்தத்தின் முதல் மழைக்கே
மண் நனைந்து
முலைகள் மொட்டவிழந்து விடுகின்றன
மீன் குஞ்சுகள்
உடம்பில் உள்நிரம்பி மொய்க்கின்றன

- மாலதி மைத்ரி