மாதவிலக்கான பெண்கள்


வடநாட்டின் குளிருக்கு
கால்சராயும் பூட்சோடும் பூசாரி
மோட்டார் போட்டாகிவிட்டது
பெருமாக் கோயில் தேருக்கு
திருப்பதிக்குப் போகமுடியாவிட்டால்
தி.ந்கர் கிளையில் காணிக்கைச் செலுத்தலாம்
மூணுநாள் விரதம்
ஐயப்பனுக்குப் போதும்
அரே ராமாவில்
ஆங்கிலேய அர்ச்சகர்
இந்தோனேசியக் கோவிலில்
செருப்புப் போட்டுக் கொள்ளலாமாம்
கணேசனுக்கும்
கோழிக்கறிப் படையல்
சட்டம் எழுதியாயிற்று
எல்லா சாதியும்
கோயிலுக்கு வ்ர
என்னாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்கான பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை.

- கவிஞர் கனிமொழி.

என் முனியம்மா..


பாரதிக்கு
கண்ணன் என் சேவகன் மாதிரி
எனக்கு எங்கள் முனியம்மா.

காய்கறி நறுக்குவது முதல்
துணிமடிப்பது வரை
எல்லாம் அவள் செய்வதாகத்தான் ஒப்பந்தம்
ஆனால் ஒப்பந்தங்களை மீறுவதில்
நாங்கள் இருவருமே
இந்தியாவும் இலங்கையும் மாதிரி.

ஆனால் எங்கள் ஒப்பந்தங்களில்
எழுதப்படாத ஷரத்துகள்
எங்கள் இருவருக்குமே
ரொம்பவும் முக்கியமானவை
அதைத் தொடர்வதால்தான்
என்றும் தொடர்கிறது
எங்கள் இருவருக்குமான
கைகுலுக்கல்கள்.

எல்லார் வீட்டு செய்திகளையும்
அவள் சொல்லச்சொல்ல
நான் விருப்பத்துடன் கேட்பது போல
ம்ம் கொட்ட வேண்டும்.
பதிலுக்கு நான் சொல்லும்
இலக்கிய அரசியல் கதைகளை
அவளுக்குப் புரியாவிட்டாலும்
அவள் கேட்டாக வேண்டும்.

இப்போதெல்லாம் நம் தமிழர்
எழுச்சிக்கதைகளை
முத்துக்குமரன்களின்
உயிர்த்தியாகங்களை
ஈழத்தமிழருக்காய்
நடக்கும் கூட்டங்களை
பேரணிகளை
மனிதச்சங்கிலிகளை
நித்தமும் நித்தமும்
நம் தலைவர்கள் பேசிய
வீரவசனங்களை
சொல்லிச்சொல்லி
பூரித்துப்போனேன்.
தேர்தல் வந்தது
கூட்டணி பிறந்தது.

முனியம்மா கேட்கிறாள்
என்னமா இது..?
யாரு கூட யாரெல்லாம்?
ஈழத்தமிழர் போராட்டம்
அது இதுனு சொன்னீகளே
இவுக மாறிமாறி
அங்கேயும் இங்கேயுமா
நிக்கத பார்த்த..
ஏ தாயி...
அண்ணன் தம்பி செத்தாலும் பரவால்லேனு..
இந்த ஆட்டம் ஆடுதானுகளே..
இவனெல்லாம்
சோத்துலே உப்பு போட்டு தின்னான
இல்ல..

முனியம்மா அடுக்கிக்கொண்டே
இருக்கிறாள்
நான் மவுனமாய்...
வழக்கம் போல
ம்ம்ம் கொட்டிக்கொண்டு.

- புதிய மாதவி, மும்பை

ஆணுறை


கண்ணைப் பாம்புகள் கொத்தும்
கதைகளின் திசைகளிலிருந்து
விடுவித்துக்கொண்டாள் அரசி.
கண்ணாடியின் நீர்மவெளியில்
திகைப்பூட்டிய தனது உடலைப் பொத்தி மறைப்பதில்லை
அரசனின் ஆணைகள் வரிந்த ஓலையையும் வாசலையும்
திறந்துவைப்பதில்லை

ஆனால், அரசி கற்க நிறைய கலைகள் பிறந்தன
பனிபூமியின் மீது அது எழுப்பும் மூச்சைப்போல
உலவப் பயின்றாள்
முழுநிலவின் இரவுகளில் உடலைப்
பிணமெரியும் வாசனையோடு மலர்த்தினாள்.
நட்சத்திரங்களின் மொழியைப் பயின்றாள்
புற்களுக்கு உயிரூட்டக் குழந்தைகளுக்குக் கற்பித்தாள்
பெண் மூட்டும் தீ
ஏற்கனவே உருவாக்கப்பட்ட சொற்களைச்
சாம்பலாக்கவே என்றறிந்தாள்

என்றாலும் இரவு, பகலுக்கு முன்பாய் விடிந்தது
காவலர்கள் அவள் கண்அவிழ்க்கக் காத்திருந்தனர்
பேரேடுகள் அறைவாயிலை அடைத்தன.
தளபதிகள்
ஓலை வாங்கிட அரசியைத் தேடினர்.
ஆடை மாற்றும்
மறைப்பு தேடிக் காத்திருப்பாள் அரசி.
காலத்தின் கோடுகள்
அவளது முகத்தில் வரைபடங்களாயின.
அரசனோ ஓர் இரவும்
ஆணுறையை எடுத்துவர மறப்பதில்லை.

- குட்டி ரேவதி

மரணித்தவனின் மிச்சம்

மழைக்காலத்தில் குரலெழுப்பும்
தவளையின் காற்றுப்பையாய்
துயரத்தால் பெருத்திருக்கிறது
மரணித்தவன் வீடு.

வாழ்ந்த பொழுதுகளில்
அவனது கழிவிரக்கமும்
முற்றிய கொடுங்கோன்மையும்
இரத்தமுறைந்த முதுகின் பின்புறம்
அலசப் படுகின்றன.

விதவிமான குரல்களில்
உருகி வழிகின்றன
உயிரின் இழப்புகள்.

அசைவற்றவனின் ஆன்மா
சூடேறிய புகைவளையமாய்
காலவெளிக்குள் பயணிக்கிறது
ஒளிவேகத்தில்.

இறுதி ஊர்வலத்தின்
சிந்திய பூக்களில்
அறுந்து தொங்குகிறது
வாழ்வின் இரகசியம்

உள்ளறையிலிருந்து
கழுவித் தள்ளும்
முற்றத்து நீரில்
தளும்பித் தெறிக்கிறது
மரணித்தவனின் மிச்சம்.
- சுகிர்தராணி

ஒளியை அறுவடை செய்யும் பெண்கள்


நதி கலைந்த கருவெனப் பிசுபிசுத்துக்கிடக்க
நிலவை மறைத்து நிற்கும் தாழங்காடு

இருளை முக்காடிட்டு
அரிவாளும் சுரடுமாக நடப்பர்
ஆற்றங்கரைக்கு

பாம்பு தீண்டி இறந்தவளின்
நினைப்பு வந்தாலும்
அல்லாவே என்றபடிதான்
தாழையை இழுத்தறுக்கிறார்

புதர் அசைய அசைய
முள் கீறி நீரில் சிதைந்து கசியும் நிலா
தாழையோடு நிலவை அறுத்துக் கட்டி
தாயைக் காவல் வைத்து
மறைவில் மலம் கழிக்கும் மகள்

இரவுக் காற்றில்
பாம்பென நெளிந்து அசையும் தலையுடன்
வாழ்ந்த கதை இழந்த கதை பேசித்திரும்புகிறார்

சிலர் பறி முடைய
பகலைக் கண்டு அறியாத
மணமாகாப் பெண்கள் நிலவைக் கிழித்து
பாய்பின்னி மஞ்சள் ஒளியை
அறைக்குள் நிரப்பி உறங்குகிறார்
- மாலதிமைத்ரி

காகிதக்கப்பல்


பெரியவர்கள் மயங்கி உறங்கும்
மதியக்கிறக்கவேளையில்
நான் தனியே அனுப்பிய காகிதக்கப்பல்
வழிமறித்த தீவில்
கரையொதுங்கியிருக்கக்கூடும்
நீந்திக் களைப்புற்ற மீன்கள்
அக்கப்பலேறி மறுகரை சென்றிருக்கலாம்
கடற்பரல் அலைக்கழிக்க
சில கணங்களாவது அதன் தலைசுற்றியிருக்கலாம்
திசைமாறிப் போகாது
காற்று தன் கைகளைத் துடுப்பாய் வலித்திருக்கலாம்
வானத்தின் வண்ணம் தூவிய முகத்தைத்
தன் நீரால் கழுவும்
கடலின் மறுகரைக்குச் சென்றிருக்கலாம்
சூரியன் கால் அலம்பும் நேரத்தில்
ஒய்யாரமாய்க் கரைதட்டியிருக்கலாம்

- குட்டி ரேவதி

மௌனத்தின் காரணங்கள்


புரிந்துகொள்ள முயற்சித்தேன்
பலரின் மவுனங்களை.
காரணங்கள் தேடித் தேடி
களைத்து விட்டது
கபாலத்தின்
மண்டை ஓடுகள்.
நட்பு என்றும் காதல் என்றும்
கொள்கை என்றும் தோழமை என்றும்
தமிழன் என்றும் இந்தியன் என்றும்
உறவுகள் என்றும்
உன்னதமாக போற்றிப் புகழப்பட்ட
தருணங்கள்
வெறும் கனவுகள் அல்ல
மீண்டும் மீண்டும்
எத்தனையோ சமாதானங்களை
எடுத்து வைத்து
காத்திருக்கும் போது
பளிச்சென
இருண்டவானத்தில்
இடியுடன் விழுகிறது
எரிதழலாய் மின்னல்
என் முப்பாட்டன்
நந்தனை எரித்த
தீயின் மிச்சமாய்.
பலரின் மவுனங்களுக்கான
காரணங்களைப் புரியவைக்க!.


- புதிய மாதவி,