நானும் நின் பசியும்


கதிர்உச்சியில் வீழும்
வன்பசிப் பொழு தொன்றில் நிகழ்ந்தது
நம் முதற்காணல்.

அகாலத்தில் நுழைந்த காயசண்டிகையாய்
நூற்றாண்டின் பட்டினிக் கரமேந்தியபடி
என்முன் நீ.

எனதுணவை நினக்களித் தோம்பினேன்
என் காற்றும் நீரும் நீயே கொண்டாய்.
எனது டைமைகள் யாவும்
வழங்கியபின்னும் பசியாறாது

2
என் விந்தின் அடர்சுவையில்
(ஒருவேளை) உனது நாவின் பசியடங்கு மெனும்
நின் மாறா வேண்டலின் பொருட்டு
நான் தன்னின்பத்தில் திளைத்துக் களைத்தேன்.

ஒருப்போதில் பசியின் உக்கிரத்தினூடாக
என் கறியுங்குருதியும் கலந்துண்டாய்
பின்னரென் குருத்தெலும்புகளின் மென்மையை
கலவாய் சுரக்க
விரும்பிச் சுவைக்கலானாய்.

இங்கணமாய்............ இவ்விதமாய்...........
என் ஊனுண்டு உயிர் சுவைத்தாய்.

என்னை யெரியூட்டிய
மூன்றாம் கரிநாளில்
என் சுடலையின் சாம்பலை
வாரிக் கோரித் தின்றபின்னும்
தீராமல் தொடருமுன் பெரும்பசி.

பசிப்பிணியின் ஆயிரமாயிரம் உருக்கொண்டு
நீளுமுன் கைகளில் இட்டுநிரப்ப (ஏதுமின்றி)
இன்னுமின்னும் எனத் தேடியவாறு
சூன்யத்தில் அலைவுறு மென் உயிர்த்துகள்

-மாதங்கி

கோடைத்துயில்


பருவங்களென எப்பொழுதும்
உனது நிகழ்வுகளை

பெய்தும் பொய்த்தும்
பூத்தும் காய்ந்தும்
உறைந்தும் தழுவியும்

எனது உடம்பு
தளும்பியும் நுரைத்தும்
பாய்த்தும் தேங்கியும்
வறண்டும்

எல்லாக் கோடையிலும்
உனது வரவை எதிர்நோக்கி
என் உடம்பில்
முட்டைகளையும் விதைகளையும்
பாதுகாத்தபடி

வசந்தத்தின் முதல் மழைக்கே
மண் நனைந்து
முலைகள் மொட்டவிழந்து விடுகின்றன
மீன் குஞ்சுகள்
உடம்பில் உள்நிரம்பி மொய்க்கின்றன

- மாலதி மைத்ரி

தீப்பற்றி எரியும் நிர்வாணம்

நஞ்சருந்தியோ சுருக்கிட்டோ
தற்கொலைக்கு முனையும் பெண்கள்
முன் எச்சரிக்கையுடன் உள்ளாடைகளை
மறக்காமல் அணிந்துக்கொள்கின்றனர்
சொந்த உறவுகளால் தற்கொலைபோல்
கொல்லப்படும் பெண்கள்
இதில் விதிவிலக்கு

மரணத்திற்குப் பின்னான
தங்கள் நிர்வாணத்தை நினைத்து
அஞ்சும் அவர்களை
ஆடை ஒருபோதும் காப்பதில்லை
ஏனைய உறவுகளைப் போலவே
அவையும் துரோகம் இழைக்கின்றன

பிரேதப் பரிதோசனை வளாகத்தில்
சூன்யத்தை வெறித்தபடி கிடக்கிறது
மாண்ட பெண்ணின் சடலம்
காட்சிப்பொருளாய் கடை விரியும்
அழகியப் பெண்ணின் நிர்வாணம்
வக்கிரத்தின் விஷக் கொடி
சுவரெங்கும் படர்கிறது
கருத்தப் பச்சையுடன்
பிணவறைக் காப்பாளருக்கு
பொன் முட்டைகளைப் பரிசளிக்கும்
சிறப்பு விருந்தாளியான
நடிகையின் சில்லிட்ட சதை

தன் உடலுக்குத் தானே எரியூட்டி
மாளும் பெண் நெஞ்சுரத்துடன்
நிர்வாணத்துக்கும் வக்கிரத்துக்கும்
சேர்த்தே எரியூட்டுகிறாள்

- மாலதி மைத்ரி

திரைச்சீலைகள்


வீரகாவியங்களில் பெண்கள் அறைகளுக்கு நடுவே ஆடும்
திரைச்சீலைகளைப் போன்றவர்கள்
இருளும் வெளிச்சமும் இரு முகங்கள்
ஆண்களின் கட்டில்களுக்கு மறைப்பு தருபவை
பல உறவுகளின் சுமையெடுத்து
நரையெய்து எறியப்படுவார்கள்
தரையிறங்கி நடந்து வெளியேற இயலாதவை
கதவுகளைப்போல உரிமை கோருவதில்லை
திரைச்சீலைகள் தாசிகளையொத்தவை
ஆளில்லா அரண்மனையைக்கூட
ஆர்ப்பாட்டமாய் அலங்கரிப்பவை
காலையொளியில் வசீகரமாய் அசைந்து
மாலையில் பருவப்பெண்ணைப்போலக் குதூகலித்து
இரவின் வாயிலில்
துக்கம் அடைத்த தொண்டையுடன் தொங்குபவை
கிசுகிசுப்பையும் அழுகையொலிகளையும் தாங்குபவை
மெத்தென்ற தமது உடலைப்
பஞ்சணைக்கு எப்பொழுதோ விரித்தவை
குஞ்சங்கள் தொங்கச் சலங்கை பூட்டிய பெண்களைப்போல
வாசலோடு பரவசப்பட்டுக்கொள்பவை
விடுதலைக்காய்ப் போராடி
விளக்குத்திரியைப் பற்றி எரிந்துபோனவை
அரண்மனைகள்தாம் திரைச்சீலைகளை வேண்டுகின்றன

- குட்டி ரேவதி

அய்யனாரு சாவதில்லை


முட்ட வந்த கெடாவ
எட்டி உதைக்கப் போன என்னைய
தடுத்துவிட்டு
ஆத்தா சொல்லுச்சி
"கூடாதய்யா அது ஐய்யனாரு"

கூழு ஊத்தின நாளப்போ
அப்புச்சி அதைய வெட்டி போட்டிருச்சி

"ஆத்தா ஐய்யனாரு
செத்துப் போச்சுன்னேன்"

"இல்ல மவராசா
அந்தா பாரு"ன்னு
குங்க மஞ்ச தடவி வச்சுருந்த
கருப்பாயி வீட்டு சேவலுக்கு நேரா
கைய நீட்டிச்சி என் ஆத்தா

-கண்ணன்

சக்கரம் - தஸ்லிமா நஸ்ரின் கவிதை!


அவர்கள் சிவப்பு ஆடைகளை
அவளுக்குக் கொடுத்தார்கள்
ஏனெனில் சிவப்புதான்
கண்ணைப் பறிக்கும் நிறம்,
அவளின் கழுத்தில் தொண்டையில்
நெக்லஸ் போட்டிருக்கிறார்கள்,
கழுத்தில் சுற்றியுள்ள நெக்லஸ்
நாயின் கழுத்தில் போடப்படும்
வார்ப்பட்டையைப்போல இருந்தது.
அதை விருந்துகளுக்கும்
விழாக்களுக்கும் அணிந்துகொள்கிறார்கள்.
அவளின் காதுகளும், மூக்கும்
கூர்மையானவை.
காதிலும், மூக்கிலும்
அணிகலன்களைப் போட்டிருக்கிறார்கள்;
ஏனெனில் அவளே சிறிது ஒளிர்கிறாள்,
அணிகலன்கள் வரை வைடூர்யங்களாலும்
இன்னும் ஒளிர்கிறாள்
அவளுடைய மெருகு கூடுதலாகிறது.
அவளுடைய கரங்களுக்கு
வளையல் போட்டிருக்கிறார்கள்
அவை விலங்கின் வடிவத்திலமைந்து
கைகளை அசைக்க முடியாமல் செய்கின்றன
கணுக்கால்களுக்குக் கிணுகிணுக்கும்
காப்புகள் அணிவித்திருக்கிறார்கள்
இதனால் அவள் எங்கேயிருக்கிறாள்
என்பதை எளிதில் அறிய முடிகிறது.
முகத்தில் அழகுபடுத்தும் பொருள்களை
வண்ணப்பூச்சுகளைத் தடவிக்கொள்கிறாள்.
கண்களுக்கு, கழுத்திற்கு,
உதடுகளுக்குப் போன்ற இடங்களுக்கும்
மேலும் கூடுதலான பூச்சுகளைத்
தேவையான அளவிற்குப் போடுகிறாள்.
ஒரு விற்பனைச் சரக்கைப்போல மாறினாள்.
கிராமங்களில், நகரங்களில்
நடைபாதைகளில், தெருக்களில்
சேரிகளில், உயர்குடியினர் வகிக்குமிடங்களில்
உள்நாட்டில், வெளிநாட்டில்
எல்லா இடங்களிலும் அவள்
விற்பனைச் சரக்கானாள்.
பல்வேறு வழிகளில், பல விலைகளில்
அவள் விற்கப்படுகிறாள்.
அவள் தொடர்ந்து விற்கப்படுகிறாள்.
வெளிப்படையாக விற்கப்படுகிறாள்.
சில இடங்களில் விற்பனையை
நவீனமயமாக்கியிருக்கிறார்கள்.
பெண்ணின் வளர்ச்சியென்ற போர்வையில்
நவீனமயமாக்கப்பட்டதாகப் பாராட்டுவார்கள்.
பெரும்பாலான முட்டாள் பெண்கள்
சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள், தங்கள் ஆசைகளை
நிறைவேற்றிக்கொள்வதற்காக
விலங்குகளை மாட்டிக்கொள்கிறார்கள்.
இந்த விலங்குகளை உடைப்பதற்குச்
சிலர் உருவாகுகிறார்கள்;
அவர்களும்கூட இந்தச் சிக்கல்களில்
சில தடவைகள் வந்து
வலையில் சிக்கிக்கொள்கிறார்கள்
அல்லது சிலர்
வேறு வழியில் இந்தப்
பொறியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
-தஸ்லிமா நஸ்ரின்

பெய்ய மறந்த மழை


உரோமக் கண்களுடனான
மெய் சிலிர்த்ததில் நான்
வாழையின் நிழல் நடனம்
என் விரல்களில் குருதி பார்க்க
பற்களை நீட்டியபடி நண்டுகள்…
அலைகளின் வால் முடிச்சுக்களை
கரைகளின் துணிக்கை இடை வெளிகளுடன்
பின்னிக் கொண்டிருக்கின்றன

சோதரனே!
உன் உணர்வுகள் பொய்மையூட்டப்பட்டு
உய்த்தலில், உடல்களின்
கலங்களின் வேண்டுதல்களில்
ஒவ்வொரு(கு)புகையையும் உறிஞ்சி
நீ வாழ்...
அது பொய் - அவள் சொல்வது
என் கவிதைகளின் புரியாமை பற்றி

பேனைக் குருதியின் ஒவ்வொரு செல்களிலும்
என் அங்கங்களை தோயவிட்டு
கருக்கூட்டப் பார்க்கிறேன்...
என் எண்ணங்கள் மதர்த்து
கவிதைகளின் கழுத்துக்களை
கொல்ல...இல்லை --- பாவமவை

என்னை துரோகித்து விட்டதாக
நீயும் அவளும்....
நான்: மீண்டெழ ஒற்றை வால்ப் பறவை
கூவியழைத்து விரலிடுக்குகளில்
உயிர் பற்றி
தூக்கிப் பறக்க
உன் எதிரொளி என்னவாகும்?
கல்லெறிவாயா
எனை ஊசிக்குளிரில்
நிர்வாணப் படுத்தி
கொட்டுப் பூச்சிகளை மேயவிடுவாயா?
அல்லது
நீயே என்னை மிருகித்து விடுவாயா?
பிணத்துடனான புணர்தல் - உனை
பூரணப்படுத்தாத
நிர்வாணப்படுக்கையே....

-சலனி(இலங்கை)