மதியம் வெள்ளி, நவம்பர் 23, 2007

பயணம்

நிச்சயிக்கப்பட்ட பயணத்திலெல்லாம்
அவ்வீட்டை கடந்து செல்கிறேன்

காய்ந்த முற்றத்தில் காகிதப்பூக்கள்
கொட்டிக் கிடக்கின்றன.

தென்னையின் உலர்ந்த இலையொன்று
தரைதொட்டு அசைந்தாடுகிறது
நீரறியா தொட்டிகளில்
கழுவேறுகின்றன இரண்டு மலர் செடிகள்

கனத்தப் பூட்டினை இறுக்க்கியபடி
மூச்சற்று நிற்கிறது கதவு

மருந்திடாத காயத்தைப் போல்
புரையோடி யிருக்கின்றன சன்னல்கள்

தளர்ந்த கொடிகம்பியில்
உள்ளாடையின் சாயலோடு
துணியொன்று ஆடிக்கொண்டிருக்கிறது

அமர நிழலற்ற தவிட்டுக்குருவிகள்
இடவலமாய் பறந்து செல்கின்றன

ஒருநாள்
கதவு திறந்திருக்க
வெட்டப் பட்டிருக்கின்றன
காகிதப்பூ செடிகள்

பின்
பயணம் வாய்க்கவில்லை அவ்வழியே.

-சுகிர்தராணி

0 comments: