ஒளியை அறுவடை செய்யும் பெண்கள்


நதி கலைந்த கருவெனப் பிசுபிசுத்துக்கிடக்க
நிலவை மறைத்து நிற்கும் தாழங்காடு

இருளை முக்காடிட்டு
அரிவாளும் சுரடுமாக நடப்பர்
ஆற்றங்கரைக்கு

பாம்பு தீண்டி இறந்தவளின்
நினைப்பு வந்தாலும்
அல்லாவே என்றபடிதான்
தாழையை இழுத்தறுக்கிறார்

புதர் அசைய அசைய
முள் கீறி நீரில் சிதைந்து கசியும் நிலா
தாழையோடு நிலவை அறுத்துக் கட்டி
தாயைக் காவல் வைத்து
மறைவில் மலம் கழிக்கும் மகள்

இரவுக் காற்றில்
பாம்பென நெளிந்து அசையும் தலையுடன்
வாழ்ந்த கதை இழந்த கதை பேசித்திரும்புகிறார்

சிலர் பறி முடைய
பகலைக் கண்டு அறியாத
மணமாகாப் பெண்கள் நிலவைக் கிழித்து
பாய்பின்னி மஞ்சள் ஒளியை
அறைக்குள் நிரப்பி உறங்குகிறார்
- மாலதிமைத்ரி

0 comments: