சக்கரம் - தஸ்லிமா நஸ்ரின் கவிதை!


அவர்கள் சிவப்பு ஆடைகளை
அவளுக்குக் கொடுத்தார்கள்
ஏனெனில் சிவப்புதான்
கண்ணைப் பறிக்கும் நிறம்,
அவளின் கழுத்தில் தொண்டையில்
நெக்லஸ் போட்டிருக்கிறார்கள்,
கழுத்தில் சுற்றியுள்ள நெக்லஸ்
நாயின் கழுத்தில் போடப்படும்
வார்ப்பட்டையைப்போல இருந்தது.
அதை விருந்துகளுக்கும்
விழாக்களுக்கும் அணிந்துகொள்கிறார்கள்.
அவளின் காதுகளும், மூக்கும்
கூர்மையானவை.
காதிலும், மூக்கிலும்
அணிகலன்களைப் போட்டிருக்கிறார்கள்;
ஏனெனில் அவளே சிறிது ஒளிர்கிறாள்,
அணிகலன்கள் வரை வைடூர்யங்களாலும்
இன்னும் ஒளிர்கிறாள்
அவளுடைய மெருகு கூடுதலாகிறது.
அவளுடைய கரங்களுக்கு
வளையல் போட்டிருக்கிறார்கள்
அவை விலங்கின் வடிவத்திலமைந்து
கைகளை அசைக்க முடியாமல் செய்கின்றன
கணுக்கால்களுக்குக் கிணுகிணுக்கும்
காப்புகள் அணிவித்திருக்கிறார்கள்
இதனால் அவள் எங்கேயிருக்கிறாள்
என்பதை எளிதில் அறிய முடிகிறது.
முகத்தில் அழகுபடுத்தும் பொருள்களை
வண்ணப்பூச்சுகளைத் தடவிக்கொள்கிறாள்.
கண்களுக்கு, கழுத்திற்கு,
உதடுகளுக்குப் போன்ற இடங்களுக்கும்
மேலும் கூடுதலான பூச்சுகளைத்
தேவையான அளவிற்குப் போடுகிறாள்.
ஒரு விற்பனைச் சரக்கைப்போல மாறினாள்.
கிராமங்களில், நகரங்களில்
நடைபாதைகளில், தெருக்களில்
சேரிகளில், உயர்குடியினர் வகிக்குமிடங்களில்
உள்நாட்டில், வெளிநாட்டில்
எல்லா இடங்களிலும் அவள்
விற்பனைச் சரக்கானாள்.
பல்வேறு வழிகளில், பல விலைகளில்
அவள் விற்கப்படுகிறாள்.
அவள் தொடர்ந்து விற்கப்படுகிறாள்.
வெளிப்படையாக விற்கப்படுகிறாள்.
சில இடங்களில் விற்பனையை
நவீனமயமாக்கியிருக்கிறார்கள்.
பெண்ணின் வளர்ச்சியென்ற போர்வையில்
நவீனமயமாக்கப்பட்டதாகப் பாராட்டுவார்கள்.
பெரும்பாலான முட்டாள் பெண்கள்
சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள், தங்கள் ஆசைகளை
நிறைவேற்றிக்கொள்வதற்காக
விலங்குகளை மாட்டிக்கொள்கிறார்கள்.
இந்த விலங்குகளை உடைப்பதற்குச்
சிலர் உருவாகுகிறார்கள்;
அவர்களும்கூட இந்தச் சிக்கல்களில்
சில தடவைகள் வந்து
வலையில் சிக்கிக்கொள்கிறார்கள்
அல்லது சிலர்
வேறு வழியில் இந்தப்
பொறியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
-தஸ்லிமா நஸ்ரின்

பெய்ய மறந்த மழை


உரோமக் கண்களுடனான
மெய் சிலிர்த்ததில் நான்
வாழையின் நிழல் நடனம்
என் விரல்களில் குருதி பார்க்க
பற்களை நீட்டியபடி நண்டுகள்…
அலைகளின் வால் முடிச்சுக்களை
கரைகளின் துணிக்கை இடை வெளிகளுடன்
பின்னிக் கொண்டிருக்கின்றன

சோதரனே!
உன் உணர்வுகள் பொய்மையூட்டப்பட்டு
உய்த்தலில், உடல்களின்
கலங்களின் வேண்டுதல்களில்
ஒவ்வொரு(கு)புகையையும் உறிஞ்சி
நீ வாழ்...
அது பொய் - அவள் சொல்வது
என் கவிதைகளின் புரியாமை பற்றி

பேனைக் குருதியின் ஒவ்வொரு செல்களிலும்
என் அங்கங்களை தோயவிட்டு
கருக்கூட்டப் பார்க்கிறேன்...
என் எண்ணங்கள் மதர்த்து
கவிதைகளின் கழுத்துக்களை
கொல்ல...இல்லை --- பாவமவை

என்னை துரோகித்து விட்டதாக
நீயும் அவளும்....
நான்: மீண்டெழ ஒற்றை வால்ப் பறவை
கூவியழைத்து விரலிடுக்குகளில்
உயிர் பற்றி
தூக்கிப் பறக்க
உன் எதிரொளி என்னவாகும்?
கல்லெறிவாயா
எனை ஊசிக்குளிரில்
நிர்வாணப் படுத்தி
கொட்டுப் பூச்சிகளை மேயவிடுவாயா?
அல்லது
நீயே என்னை மிருகித்து விடுவாயா?
பிணத்துடனான புணர்தல் - உனை
பூரணப்படுத்தாத
நிர்வாணப்படுக்கையே....

-சலனி(இலங்கை)

பயணம்

நிச்சயிக்கப்பட்ட பயணத்திலெல்லாம்
அவ்வீட்டை கடந்து செல்கிறேன்

காய்ந்த முற்றத்தில் காகிதப்பூக்கள்
கொட்டிக் கிடக்கின்றன.

தென்னையின் உலர்ந்த இலையொன்று
தரைதொட்டு அசைந்தாடுகிறது
நீரறியா தொட்டிகளில்
கழுவேறுகின்றன இரண்டு மலர் செடிகள்

கனத்தப் பூட்டினை இறுக்க்கியபடி
மூச்சற்று நிற்கிறது கதவு

மருந்திடாத காயத்தைப் போல்
புரையோடி யிருக்கின்றன சன்னல்கள்

தளர்ந்த கொடிகம்பியில்
உள்ளாடையின் சாயலோடு
துணியொன்று ஆடிக்கொண்டிருக்கிறது

அமர நிழலற்ற தவிட்டுக்குருவிகள்
இடவலமாய் பறந்து செல்கின்றன

ஒருநாள்
கதவு திறந்திருக்க
வெட்டப் பட்டிருக்கின்றன
காகிதப்பூ செடிகள்

பின்
பயணம் வாய்க்கவில்லை அவ்வழியே.

-சுகிர்தராணி

கடிதங்கள் !!


ஊர்வன சுமந்துசெல்லும் மண்ணாங்கட்டிகளைப்போல
உருட்டிப்புரட்டிக்கொண்டும்
பலசமயங்களில் தரையோடு அழுத்தும் சுமைகளில்
இழுபட்டுக்கொண்டும்
என்னுள் கிளர்ந்தெழுந்து உன்னை வந்துசேர்ந்துகொண்டேயிருக்கிற
நுரைக்கும் வாசகங்கள்
அதீதக் காமம் பொதிந்த சொற்களையும்
வெறுமையின் கதவுகளைச் சிதைக்கும் உத்திகளையும்
நீ தரமறுக்கும் உணர்வின் பேதலிப்புகளைக் கோரியும்

பிரித்துப்பார்க்கத் துணியாமல் நீ மூலைகளில் விசிறும்போதுகூட
அவை உயிர்கொண்டு முனகுவதில்லை
கல்லறைக்குள் போய் இறங்கியதைப்போல்
சொற்கள் கண்திறந்தவண்ணம்
வண்ணத்துப்பூச்சிகைளத் தேனருந்த அழைத்தவண்ணம்
பிறந்துகொண்டேயிருக்கின்றன

பாலுணர்ச்சி விழித்துக்கொண்ட சொற்களை
அடைக்காமல் அனுப்பும் கடிதங்களையும்
முகர்ந்துபார்க்கிறாய் நீ
மல்லிகையின் கமழும் நாற்றமும்
இதயப்பாலையில் நிர்வாணமுறுத்துகிறது என்னை

உணர்ச்சியின் பிளிறல் கிளப்பும் ஒளிக்கம்பத்தில்
சுழலும் கதிரெழு துகள்களினும்
உன் உருவத்தை எனக்குத் தரமறுத்தாய்

-குட்டிரேவதி

சிலம்புகள் ஏதுமற்ற அவள்


இதழ்சிதையா செங்கழுநீர் மாலை
மார்பிலே தவழ்ந்திருக்க
வெந்நிறமான அகில்புகை
கூந்தலிலிருந்து மேலெழும்புகிறது

கரும்பும் வல்லியும் வரையப்பட்ட
அகன்ற தோள்கள்
சந்தனப் பூச்சினால் பளபளக்கின்றன.

உயர்ந்த இளங் கொங்கையின்மேல்
மெல்லிய பற்தடங்கள் அமிழ்கின்றன

பொற்கலத்தின் வெண்சாதத்தை
பிசைந்து அவள் ஊட்டுகிறாள்
மெருகேறிய கரும்பாறை முற்றத்தில்
குழந்தைகளிரண்டு விளையாடுகின்றன

தூரத்தில்
காமம் தீர்ந்த ஒருவன்
வனப்பழிந்து வந்து கொண்டிருக்கிறான்

நெருங்கியவன்
சவுக்குப் படலில் கையூன்றி
கண்களால் துழாவ

சிலம்புகள் ஏதுமற்ற அவள்கால்கள்
அவனைச் பரிகசிக்கின்றன

இரட்டைமுலைகள் அதிர
அவள் இதழ்களில் தெறிக்கிறது
ஊழிப்புன்னகை.

-சுகிர்தராணி

கடவுளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்


ஒளியைத் தின்று பருக்கிறது
காந்தாரி வளர்க்கும் இருள்

தடவியறியும் பழைய பொருட்களின் ஞாபகங்கள்
அவள் மார்பில் இரகசியமாய்ச் சீறியடிக்கின்றன,
அவற்றின் கிளர்ச்சி தாளாமல்
கண்கட்டை யவிழ்த்து ஒரு முத்தம்
ஒளியை வணங்குதல் போலே

கணவன் அவ்வப்பொழுது வினவுகிறான்
தொலைவில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

உறங்க மாட்டாமல் தவிக்கின்றன
அவள் அறிந்த புல்வெளிகளும்,
தாமரைக் குளங்களும் நதியின் பயணங்களும்

உறக்கங்களின் பொழுது எழுந்து
கனவுகளின் அழுத்தத்தை
முடிச்சுகளை இளக்கி வெளியேறுகிறான்

தனது அரண்மனைத் தோட்டத்து மழை
விரகத்தில் புரள்கிறது என்பாள்

முந்தானையின் எல்லையில் தொங்கும்
அலங்காரக் குஞ்சம் கணவன், என நினைப்பாள்

இருளின் சதையைக் குறுவாளால் அரிந்து
பெருகும் குருதியே சூரியனின் இரத்தம்,
ஒரே கனவு அடிக்கடி

ஒரு நாள் கண்கட்டை யவிழ்த்துவிட்டு,
"கடவுளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்" என்றாள்.


-குட்டி ரேவதி

அவள் நிர்வாணத்தை எறும்புகள் கடிக்கும்


தேசிய நெடுஞ்சாலை
சிக்னலுக்கு அருகில்
இரவு நேர கால்செண்டர்
பகலெல்லாம் தூங்குகிறது
அவள்வீட்டு சூரியன்.

தாயின் அகாலமரணத்தில்
அவளுக்காக ஒதுக்கப்பட்டது
இந்த அலுவலகத்தில்
தாயின் இருக்கை.
கேள்விகளுக்கு விடைதெரியாத
அவள் வினாத்தாள்களே
அவளுக்கு
இந்த வேலைக்கான
உத்தரவாதமானது.
நேர்முகத் தேர்வில்
மொழி தெரியாத அவள் முகம் கூட
வேலையில்லை என்றவளை
விரட்டவில்லை.

இந்த வேலையில்
அவளுக்கு வருத்தமில்லை.
ஆனால்-
எப்போதாவது அவள் நிர்வாணத்தை
எறும்புகள் கடிக்கும்
"இவனில் எவனாவது
அப்பனாக இருந்தால்.?."

-புதியமாதவி

அருவருப்பான கவிதை!


யோனி
தின்பண்டத்தைக்
கணவன் கடித்துண்ணுவதற்குப் பதிலாக
அரிந்துண்ணலாம்
எவருக்கும் அவனாக உண்ணக்கொடுத்தும்
களிப்புறலாம்
முலைகளோ பண்டமன்று
கண்ணாடிக்குடுவையில் நிரம்பி வழியும்
மதுபானம்
விதவிதமான மதுபானங்கள் நுரையோடு வழிவதைப்
பருகாத இரவுகளில் கனவுகள் வருவதில்லை.
உடலோ ஒரு வெள்ளைக் காகிதம்
உறங்கிய பின்போ
வாங்கிய கனவிலோ சொல்லின் கீறலோ
துளியும் சிந்திவிட்டால்
கற்பின் கிரீடத்தில் ஒளி மங்கும்
அயல்நாட்டிலிருந்து திரும்பும் கப்பலாய்
வழி மாறிக் கடலில் திரியும்
காலை முதல் இரவு வரை
இடத்தைப் பொறுத்து முத்தம் விலை என்றாலும்
யோனி தின்பண்டமன்று

-குட்டி ரேவதி

விதைகளைப் புணர்ந்த கதை


விரகத்தின் இழைகளால் நெய்யப்பட்ட
இரவாடையை நான் அணிந்திருக்கிறேன்

விபத்தொன்றில் கணவனை இழந்த
அபலையின் இசைப்பாடல்
முதல்புணர்வின் வலியருந்தி மிதந்து வருகிறது

வாயில் பாலொழுகும் குட்டிகள் தொடர
பருத்த முலைகளை வீசியபடி
தெருக்களில் அலைகிறது முதிர்நாயொன்று

கனியின் தோல்பிரித்து
விதைகளைப் புணர்ந்த கதையை
வெட்கமில்லாமல்
என்னிடம் பகிர்ந்து கொள்கிறது காற்று

வண்ணமற்ற ஒளியின் கட்டுறாத கைகள்
என் அடியாழங்களில் பயணிக்க
கோபத்தின் முலாம் பூசிய சொற்பறவைகள்
எங்கிருந்தோ பறந்து வருகின்றன.

நான் எழுத ஆரம்பிக்கிறேன்

அந்தரத்தில் தொங்கியவாறு
என்னைப் பரிகசிக்கிறது
சீம்பாலின் அடர்த்தியாய் திரண்ட மை

தூக்கம் தன் கண்களைத்
தழுவிக்கொள்ளும் அகாலத்தில்

இறுக மூடியிருந்த என் உள்ளங்கைப்பிரித்து
புன்னகைத்தபடி வெளியேறுகிறது தனிமை.



-சுகிர்தராணி

தலைகுனிந்த அகதிகள்


"முகங்கள் சிதைந்து
யோனிகள் கிழிந்து
சவக்குழிகளிலும்,
திருகப்பட்ட முலைகளோடும்,
நசுக்கப்பட்ட விதைகளோடும்
முழங்காலிட்டு
சொந்த மண்ணிலும்,

குட்டப்பட்டு
தலைகுனிந்த அகதிகளாக
உலகத் தெருவிலும்
ஏன் எங்களுக்கு இவ்விதம் எழுத்து
ஏன் எம் நெஞ்சில் இத்தனை நெருப்பு?"

- வ. ஐ. ச. ஜெயபாலன்

உடலெழுத்து



வெறுங்கால்களால் கடக்க முடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக் கோப்பைகள்
பற்றப்பட வாகாய் காத்திருந்தன
பனித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத் தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது.

-சுகிர்தராணி

குல தெய்வம்


இன்று அதிகாலையின் முதல் கிரணத்தில்
மாலை சூடிய தெய்வங்களாய் நின்றிருந்த
செங்கற்களில் அவளும் ஒருத்தி
அரை நிர்வாணமாய் இடுப்பிற்குக் கீழ்
நிலம் பரவிய சிவப்புப் பட்டும் பின் பெய்த
மழையின் நனைந்த பாவாடையுடன்
அறையின் இறுக்கத்திலிருந்து
புல்வெளிகளின் வழியே சிவப்பு வண்ணாத்தியாய்
வானம் எம்பினாள்
காட்டுக்குள் வெளிக்குச் சென்ற இளம் பெண்ணை
இழுத்து வைத்துப் புணர்ந்தவனை
இரத்தம் கக்கச் செய்தாள்
சிறு சிரிப்பின் ஒலியோடு
காட்டோடு நின்று போனாள்
இரவெல்லாம் காடு சிரிக்கும்
இரட்டை மின்மினிகளாய்
அவள் கண் அலையும்
பெண்களின் உடல் ஒளிய
காட்டின் வெளி என்றாள்
செங்கற்களில் ஒன்றானாள்.

-குட்டி ரேவதி

பெண்கள் விடுதி


வரையறுக்கப்பட்ட நுழைவாசலையும்
உயரமான சுவர்களையும் கொண்டதொரு நெடிய அறையில்
சன்னல்கள் வானின் விழிகளைப்போல திறந்திருந்தன.
ஏழு கட்டில்களும் அவற்றின் மீது வெண்ணிற மெத்தைகளும் இருந்தபடியால்
உறங்குவதற்கான வசதிகளையும் ஆயத்தங்களையும்
மட்டுமே கொண்டிருந்தன.
ஒருவரையொருவர் காணாத கணத்தில்
உலகச் சந்தையின் கவர்ச்சியான உள்ளாடைகளைக்
கழற்றிக் கொக்கிகளில் மாட்டிவிட்டுத்
தமது நிர்வாணத்தை உரித்து படுக்கையில் கிடத்திவிடுவர்
முழு இரவும் நிர்வாணம் கனவுகளோடு புணர்ந்து சிரிக்கும்
ஆண்மைய உடல்கள் கொக்கிகளில் சிக்கிச்
சுவர்களில் ஆடி உரசும்
விழுங்கிய பிளாஸ்டிக் கோட்பாடுகளைக் குதப்பி வெளியேற்றிவிட்டுக்
காமத்தின் குமைச்சலைக் சுயபுணர்ச்சியால் தீர்த்துவிட்டு
விடியும் முன் மாடியிலிருந்து குதித்துத்
தற்கொலை செய்து கொள்வர்
முகம்பார்க்கும் கண்ணாடியில் அணிவித்துத் துக்கித்த
ஆண்களின் வரைவாடைகள்
கண்ணடாடிக்குள்
உடலின் மீது அசைவதுபோல்
எதிர்ச்சுவரில் அசையும்

-குட்டி ரேவதி

புறக்கணிப்பின் வெறுமை


இவ்விடம்
அதிகம் பரிச்சயமில்லையெனினும்
இங்கிருந்து கிளம்புவதென்பது
வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது

நீ என்னைத்
தீவினையின் எல்லையில் விட்டு
முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து
தடைசெய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன்

இடங்களும் மனிதர்களும் உருவாக்கும்
இந்த உறவும் பிரிவும்
படர்வதற்குள் கிளம்புகிறேன்
என் ஆதிகாலக் குகை வாழ்விற்கு

எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல
ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை
விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை

-சல்மா

மணல் !! தசாவதாரக் கவிதை


‘மணல்
கூழாங்கற்களின்
குழந்தை--!

நீங்கள்
மண்ணை வெட்டுவது
எங்கள் மழலையை
வெட்டுவதற்குச் சமம்-!

அடுத்தவனுக்குப்
பள்ளம் தோண்டியே
அடையாளப்பட்டவனே...
எங்கள்
மண்ணையும் தோண்டிப்
பூமியை புதைத்துவிடாதே!

சோறு போடும்
நிலத்தைக்
கூறு போடும் நீ
விந்துக்குப் பிறந்தவனா?
சிறுநீருக்குப் பிறந்தவனா?

மணல் தரையை
நீங்கள்
மாமிசமாய் அறுத்துத் தின்றால்
எங்கள்
பாவாடை சட்டைக்காரிகள்
எங்கே
பாண்டி ஆடுவது?

எங்கள் மழலைகள் எங்கே
மணல் வீடு கட்டுவது?

கோவண மனிதர்கள்
எங்கே
கொல்லைக்குப் போவது?

நாங்கள்
ஒத்தையடிப்பாதையில்
எப்படி
ஊர் போய்ச் சேருவது?

வேரறுந்த மரத்தின் கீழ்
எப்படி
வெயில் இளைப்பாறுவது?

அகதியாய்ப் போன
பறவைகளை
யார் அழைப்பது?

உங்கள்
சிகரெட் புகையில்
மழை வரும்
என்பதற்காக
எங்கள்
தாகத்தைத்
தள்ளிப்போட முடியாது!

திருட்டுத்தொழிலை விட்டுவிடு
திருடிய மண்ணைக்
கொட்டி விடு!

இனிமேல் திருட நினைத்தால்...
இவனைஇரண்டு துண்டாய்
வெட்டிவிடு!’

-கபிலன் தசாவதாரம் படத்தில்

ஒளிந்திருந்த முலைகள்


கீழே விழுந்துவிட்ட ஐம்பது பைசாவை
குனிந்து எடுத்த நொடியில்
என் உள்ளாடையில் படிந்துவிட்டிருந்தன
சில பார்வைகள்
கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த என் முலைகளைத்
தேடிக் கொண்டிருந்தன
சில பார்வைகள்
கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறேன்

"முன்னாலே போமா" என்று
பின்னாலே தடவிவிட்டு போகும்
நடத்துனர்
கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்
மகளிர் இருக்கையின் இடுக்குகளில்
கூனிக்குறுகி என்னைப் போலவே
சில திரௌபதிகள்
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை

ஆண்டவா!
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்
ஆனால் அடுத்த பிறவியில்
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை...

-முத்தாஸ் கண்ணன்

முகமூடி


அவளது வீட்டின் சுவர்களெங்கும்
அவள் செய்யும் முகங்கள்.

தனது
குருதியிலொரு துளி
மூச்சின் ஒற்றைத் துணுக்கு
மூப்புறுந் தசைத்திரள் சிறிது சேர்த்து
முகங்கள் செய்கிறாள்.

நடு நிசியில் பகலின் வெளிச்சத்தில்
எனது ஊரில்
எங்கோ ஓர் உயிர் இறக்கையிலும்
மற்றொன்று பிறக்கையிலும்
யாரோ ஒருவர் கொல்லப்படுகையில்
கேள்வி கேட்கும் உரிமை தொலைத்து
அவர்கள் தலைகள் தாழ்கையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

ஒரு பெண்ணின் காதல் மறுக்கப்படுகையில்
அவள் பலவந்தமாக இச்சிக்கப்படும்
பொழுதுகளில்
குழந்தைகள் பயந்து அழ மறக்கையில்
வெடிச்சத்தங்கள் பறவைகளின் கூடுகளை
உலுப்புகையில்
காரணமேதுமற்றுக் கடத்தப்பட்டவன்
தன் வாழ்வு பற்றி அச்சமுறுகையில்
வீடொன்று ஆளற்றுத் தனிக்கையில்
கிராமமொன்று கைவிடப்படுகையில்
அங்கே நாயொன்று
உணவின்றி அலைந்து உயிர்விடுங் கணத்தில்
பாலுந் தேனுங் குடிக்கும் எமது கடவுளர்
இல்லை எனத் திட்டப்படுகையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

முகங்களின் மூச்சும்
மூடாத கண்களின் பார்வையும்
குழந்தைகளது என ஏமாந்து
அவள் உயிரூட்டும் முகங்கள் எப்படியோ
அவளது கனவுகளைக் களவாடிவிடுகின்றன
அவ்வப்போது.

-வினோதினி

உடலெங்கும் பயிரான பழுப்புமுடிகள்


இந்த வாழ்க்கை என்னிலிருந்தே உதிக்கிறது

உன் பழுப்பு நிறக்கண்களில் சலம்பும்
பருவவேதனைகளைக் கேட்டிருக்கிறேன்
உன் உடலெங்கும் பயிரான பழுப்புமுடிகள்
எனைத் தம் மென்விரல்களால் வருடுவதை
அனுபவித்திருக்கிறேன்

உலகையே மூழ்கடிக்கும்
சாம்பல்ஒளி உதிர்ந்து
மாலையின் பழுப்புஓளி வாசனை
கிளர்கையில்
என்னுள் நீ மூட்டிய காதலின் அதிர்வும்

என் உடலை வகிரும்
உன் சருமத்தின் பழுப்புக்கதிர்கள்;
அவை உன் தீர்மான அசைவுகளாலும்
அவைமீது விழும் செங்கதிர்களாலும்
ஆனவை

தூக்கத்தில் புரள்பவனைப்போல்
வெற்றுடலால் கதைக்கிறாய்; உன்
புனைவுகளும் கனவுகளும் அசைகின்றன

இந்த வாழ்க்கை
என்னிலிருந்தே உதிக்கிறது

- குட்டி ரேவதி

யோனிகளின் வீரியம்


பலகோடி ஆண்டுகள்
கழிந்தொரு பரிணாமத்தில்
உபயோகமற்று
உன்குறி மறைந்துபோகும்
அக்கணத்தில் புரியும்
உன் சந்ததிகளுக்கு
எம் யோனிகளின் வீரியம்

- குட்டி ரேவதி

வெறி நாய்கள் ஜாக்கிரதை!


நாய்கள் நன்றி உள்ளவை,
ஆனால் தன் இனத்திற்கு ?
அப்படித்தான் ஒரு நாள்
யார் பெரியவன் என்ற போட்டியில்
சில நாய்கள் ஒரு நாயை
குதறி வைத்தது ?
நாயே நீயும் நாய்தானே ?
என்று கேட்ட கடிபட்ட
நாய் உங்க தெரு பக்கமே
வரமாட்டேன் என்று விலகி
ஓடியது ?
கடித்த நாய்களுக்கோ
வெறிப் 'பிடிக்க'
நாய் இரத்தம் குடித்த
நாய்கள் சும்மா இருக்குமா ?
போவோர் வருவோரெல்லாம்
கடித்து வைத்தது !

நாய்களுக்கு நட்பெல்லாம் தெரியாது !
யார் எலும்பு துண்டு போடுகிறார்களோ
அவர்களுக்கு வாலாட்டும்
அவர்களால் ஏவிவிடப்படும் நாய்கள்
எவ்வளவவு நல்லவராக இருந்தாலும்
கடித்துவைக்கும் !

நாய்களை அடித்துக் கொள்வது
பாவம் தான் !
ஆனால் நாய்களோ,

வெறிநாய்கள் இருக்கும்
தெருவில் எச்சரிக்கை அவசியம் !

இல்லை என்றால் எவரும் கடிபடும்
அபாயம் இருக்கிறது !

முலைகள்


முலைகள்
சதுப்புநிலக் குமிழிகள்
பருவத்தின் வரப்புகளில்
மெல்ல அவை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்

எவரோடு எதுவும் பேசாமல்
என்னோடே எப்போதும்
பாடுகின்றன
விம்மலை
காதலை
போதையை....

மாறிடும் பருவங்களின்
நாற்றங்கால்களில்
கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை

தவத்தில்
திமிறிய பாவனையையும்
காமச்சுண்டுதலில்
இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன

ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்
சிசு கண்ட அதிர்வில்
குருதியின் பாலையும்
சாறெடுக்கின்றன

ஒரு நிறைவேறாக் காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த்துளிக்ளாய்த் தேங்கித்
தளும்புகின்றன.

-குட்டி ரேவதி

விதையுறக்கம்


ஆகவே விளிம்புநிலையைப் பற்றிக்கொண்டுத்
தொங்குகிறேன்

இனி ஒரு பொழுதும் உனைத் தேடாதிருப்பேனாக
நீர்நிலையைத் தேடும் பறவையைப்போல்
இரவின் உச்சத்தில் கனவு
கல்லெறிந்ததால் உண்டான வட்டங்களாய் விரிகிறது
அதன் ஒளிபரப்பில் உன் புன்னகையால்
எனைத் தேற்றுகிறாய்; தேற்றுகிறாய்

சிறார்கள் தமது உறுப்புகளை
மறைவுகளில் கண்டறிவதுபோல்தான்
நான் உன்னைக் கண்டறிந்தேன்
உடல், விதைக்கவோ வளர்க்கவோ
யாருமேயிலாது
பாழ்நிலமாய் உலர்ந்து வெடிக்கிறது
எச்சத்தில் ஊறிய விதையைப்
பறவைகள் வெளிக்கிட்டுப் பறக்கின்றன
ஒரு மழையின் ஸ்பரிசத்தால் குளிராதவரை
வெடிப்பில் வீழ்ந்த விதை
உறக்கம் தழுவிக்கொண்டிருக்கும்

இனி ஒருபொழுதும் உனைத் தேடாதிருப்பேனாக


-குட்டி ரேவதி

சூல் கொண்ட பாம்பு


பாம்போடு பாம்பு பிணையும்
அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும்
வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும்
உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ
முட்டை மீது முட்டையடுக்கி அவயம் காக்கும்
மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு
உடல் விரித்து ஆனந்திக்கும்
உயிரிழுத்துப் போட்ட பின்னும்
கண் துஞ்சாமல் சூல் கொள்ளும்
பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும்
உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும்
ஆணொன்று விரட்டிப் புணர
உடலெல்லாம் கருக்கொள்ளும்
வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத்
தாய் மரிக்கும்
உடலின் சிறகடியில் நினைவு குவித்து
முட்டைகள் அவயம் காக்கும்
கண்ணில் புத்துயிரின் வெறி
நெஞ்சில் பெருஞ்சுவாசம்
நிலைதாங்கி நின்றக்கால் கரு காலாட்டும்
பூக்களின் மீது வண்ணாத்தியாய்க்
காற்றில் மிதக்கும்
கரப்பானின் புற்றுக்குள்
குஞ்சுகள் பொரியுமட்டும்
சீறிக் காவல் காக்கும்
இரத்தச் சகதியில் கால் எழும்பி நிற்பதற்காய்
ஈரநாவால் நக்கி நக்கி உயிர்கூட்டும்
மெல்ல நினைவின் கண் திறந்து
கல்லுக்குள் பதுங்கும் முன்
கழுகொன்று கொத்திப்போகும்
புலம் பெயர்ந்த மண் பிறக்கும்
திசைகள் அறியும்
கனவுகளை அடக்கி
முட்டைகளாய் ஊதும்
நிலவொளியில் உடலைப் புரட்டி
உயிர்கொள்ளும் .

-குட்டி ரேவதி

நுரைத்துப் பொங்கும் காதல்


நீ நிரம்பி வழியும் கடலின்
கரையொதுங்கிய சிறு தாவரமாய்
அலைவுறுகின்றேன்
ஓராயிரம் ஓங்கரிப்புகளுடைய
உன் அன்பின் அடிவாரத்தில்
காலூன்றி களித்திருந்த நாட்களில்
நீ கரைந்த உன்னில்
பருவம் பருவமாய் மூழ்கி
காதலின் முத்துகளைச் சேமிக்கிறேன்
குளிரும் சுழலும் உள்குமைந்து
உன்னை உருமாற்றிய கணத்திலும்
அலை இதழ்களால் என்னை
முத்தமிட்டுச் சென்றிருக்கிறாய்
உன்னையும்
நுரைத்துப் பொங்கும் காதலையும்
இழத்தல் என்பது
ஒப்பீடுகளற்றது என்னும் தருணத்தில்
காலத்தின் நங்கூரம்
என் வேர்களைப் பறிக்கிறது
உன்னிலிருந்து கிளம்பி
உன்னிலேயே பயணித்து
உன் கரையிலேயே ஒதுங்கிய
என் காதலின் பெருவாழ்வு
இன்னொரு முறை வாய்க்கட்டும்

-சுகிர்தராணி

சில கரித்துண்டுகள் !!


வழக்கொழிந்த காட்சியகத்தில்
புழுத்தநெடி வீசும் தாழிஒன்று
அகழ்ந்தெடுக்கப் படுகிறது
கனவுகளைச் சேமித்து வைக்கும்
மனதின் கலயத்தைப் போலிருக்கும்
அதன் உட்சுவரில் கரிய
சித்திரங்கள் தீட்டப் பட்டிருக்கின்றன
மாறிய பருவத்தின் போதெல்லாம்
பூக்களைச் சிருஷ்டித்துத் தந்த
விருட்சங்களும்
கள்ளிப் பாலாய் திரண்டிருக்கும்
காட்டுப் பழங்களும்
சர்ப்பத்தின் நீண்டிருக்கும் நாவெனச்
சாட்டையைச் சொடுக்கும் ஆண்களுமாய்
வரையப்பட்டவை பிரமிப்பூட்டும் வேளையில்
உள்ளிருக்கும் உதிர்ந்த எலும்புகளுக்குள்
மின்னுகின்றன சில கரித்துண்டுகள்

-சுகிர்தராணி-

பட்டையுரிந்த காதல்!!


பருவம் கழிந்தொரு விருட்சமாய்
பூத்துக் கொண்டிருக்கிறேன்
அருகம்புற்கள் கிளைத்திருக்கும்
வரப்பின் விளிம்புகளில் நின்று
இருகை நீட்டி அழைக்கிறாய்
மரமாகவே நிற்கிறேன்
காதலின் இனிப்பு திரவம்
உன்னிலிருந்து உருகி வழிந்து
என்னை நனைக்கிறது
அள்ளிப் பருக முடியாமல்
கைகள் புதைந்திருக்கின்றன
சிறு தலையசைப்பின் மூலம்
சில பூக்களை உதிர்த்து
உன் நாட்பட்ட காதலை
ஏற்கலா மெனினும்
காற்றும் பித்துப் பிடித்தாற்போல்
இடம் பெயர்ந்து விட்டிருக்கிறது
யாது செய்வேன்
என் அன்பை யாசித்து யாசித்துக்
கடும்பாலையைக் கடந்து போகிறாய்
திரும்பி வரும்போது புரிந்து கொள்
உன் பெரும்அன்பால் தீய்ந்துபோய்
பட்டையுரிந்து மொட்டைமரமாய் நிற்கும்
என் காதலையும்

-சுகிர்தராணி-

நானும் நின் பசியும்


1
கதிர்உச்சியில் வீழும்
வன்பசிப் பொழு தொன்றில் நிகழ்ந்தது
நம் முதற்காணல்.

அகாலத்தில் நுழைந்த காயசண்டிகையாய்
நூற்றாண்டின் பட்டினிக் கரமேந்தியபடி
என்முன் நீ.

எனதுணவை நினக்களித் தோம்பினேன்
என் காற்றும் நீரும் நீயே கொண்டாய்.
எனது டைமைகள் யாவும்
வழங்கியபின்னும் பசியாறாது

2
என் விந்தின் அடர்சுவையில்
(ஒருவேளை) உனது நாவின் பசியடங்கு மெனும்
நின் மாறா வேண்டலின் பொருட்டு
நான் தன்னின்பத்தில் திளைத்துக் களைத்தேன்.

ஒருப்போதில் பசியின் உக்கிரத்தினூடாக
என் கறியுங்குருதியும் கலந்துண்டாய்
பின்னரென் குருத்தெலும்புகளின் மென்மையை
கலவாய் சுரக்க
விரும்பிச் சுவைக்கலானாய்.

இங்கணமாய்............ இவ்விதமாய்...........
என் ஊனுண்டு உயிர் சுவைத்தாய்.

என்னை யெரியூட்டிய
மூன்றாம் கரிநாளில்
என் சுடலையின் சாம்பலை
வாரிக் கோரித் தின்றபின்னும்
தீராமல் தொடருமுன் பெரும்பசி.

பசிப்பிணியின் ஆயிரமாயிரம் உருக்கொண்டு
நீளுமுன் கைகளில் இட்டுநிரப்ப (ஏதுமின்றி)
இன்னுமின்னும் எனத் தேடியவாறு
சூன்யத்தில் அலைவுறு மென் உயிர்த்துகள்

மாதங்கி

அவள்தான் மலைகளுக்கப்பால் என்னுயிரை வைத்திருக்கிறாளாம் !


ஆத்ம தோழி
புரவியின் மினுமினுப்போடு
என்னை முத்தமிட்டு எழுப்புவாள்

குளிப்பாட்டி என்னுடல் முழுக்க
அலங்காரப் பூச்சிடுவாள்
எங்கிருந்து வருகிறாள்
எங்குபோகிறாள் தெரியவில்லை

அவள்தான் மலைகளுக்கப்பால்
என்னுயிரை வைத்திருக்கிறாளாம்

அப்பள்ளத்தாக்குகளின் முரட்டுச்சுவர்களில்
பட்டுத்திரும்பும் குரல்
என்னுடையதாம்.

மலைப்பயணம் குறித்தான ஆவலை
வெளியிடும் போதெல்லாம்
ஆற்றங்கரை மண்மேடுகளையும்
கிளைகளில் தொங்கும் காற்றையும்
சொல்லித் திசைத் திருப்புவாள்

காலடியில் நழுவும் குழிகளும்
கெட்டித்துப் போன சொற்களும்
என் கேவலை அதிகரிக்கின்றன

தடித்தயென் துக்கம் தாளாது
தொலைவிலிருக்கும் மலைப்பாதையை
அடையாளம் காட்டுகிறாள்

ஒருவேளை
நீங்களிதைப் படித்து முடிக்கும்போது
என்னை நான் அடைந்திருக்கலாம்.

சுகிர்தராணி

பெரும்பாம்பு



கூடலின் பிந்தைய அமைதியை
துடைத்தெறிந்து ஒலிக்கிறது தொலைபேசி

விரல்களால் பற்றி காதோடு இழைக்கிறேன்
அதன் துளைகள் வழியே
பீறிடுகின்றன எண்ணற்ற பாம்புகள்

நொடிப்பொழுதில் சட்டைகளை உரித்துக்
கண்ணியொன்றைப் பின்னுகின்றன
பிளவுப்பட்ட நாக்குகளால்
உறுப்புகளைத் துழாவி ருசிக்கின்றன

என்னுடலெங்கும்
பிசுபிசுப்பான செதில்தடங்கள் பரவ
முட்டையிடவும் குட்டியீனவும்
இடம்தேடித் திரிகின்றன

கலவியுறாத செழித்த பாம்புகள்
என் கருத்த தசைகளின் மேல்
பற்களை அழுத்துகின்றன

விஷத்தில் குளித்த எழுத்துக்கள்
நீலம்பூத்த என் தோலிலிருந்து
நுரைத்துப் பொங்க

எல்லாப் பாம்புகளையும் விழுங்குகின்றேன்
நானே பெரும்பாம்பாகி.

-சுகிர்தராணி

மணப்பெண்


மாலை நேரக்காற்று
முன்னிற்க
மணநாளில் பவ்யமாய்
விடை பெறுகிறாள்
மணப்பெண்

அவளது பர்தாவுக்குள்
முகம் புதைத்தபடி
மலர்களின் வாசனையோடிணைந்த
புணர்ச்சியைப் போதிக்கிறாள்
தமக்கை.

தானே அறிந்திராத
தடித்த புத்தகத்தின் பக்கங்களை
துரிதகதியில் புரட்டுகிறாள்
எந்த நாளில் புணர்ந்து
கருவைத் தள்ளிவைக்கலாம் எனவும்
ஹராமாக்கப்பட்டதெனவும்*
கூடவே
புணர்ச்சிக்குப் பிந்தைய
சுத்த பத்தங்களையும்

தன் குள்ள உருவத்திற்கேற்ற
குற்றக் கண்களில் குறுக்கிடுகிற
வாழ்வின் சுகவீனங்களையும்
நைந்து போன புணர்ச்சியின்
வெற்றுச் சூத்திரங்களையும்
தனக்குள்ளாக ஒளித்தபடி

அவ்வப்போது
வெட்கத்தில் துவண்டு
விழுகிற வார்த்தைகளை
சிறுமியின் அசட்டுத் தன்னம்பிக்கையுடன்
துடிப்போடு கடிவாளமிட்டபடி

தன் காதுத் தொங்கட்டானில்
சிக்கி மடங்கிய ஆலோசனைகளை
நீவி எடுத்து

அன்றைய முழு இரவுக்குமாக
படுக்கையில் படர்த்துகிறாள்
புது மணப்பெண்

-சல்மா.

புணரும் மிருகமாய் நீ


அந்த நிமிடங்களில் நீ
நீயாக இருக்கவில்லை
உன்னுள் இருந்த மதுபோதை
ஒருபுறம் காமப் பசி மறுபுறம்
இரண்டின் வெளிப்பாட்டில்
நீ புணரும் மிருகமானாய்
காதலுக்கு மட்டுமே கசிகின்ற என் யோனி
உன் ஆவேசத்திற்கு கசிய மறுத்தது
உன் விடாப்படியான போராட்டதினூடே
என் வறண்ட யோனிக்குள்
தாகம் தீர்க்க முயன்றது உன் ஆண்குறி
ஒன்று...இரண்டு....மூன்று என
என் யோனித் துவாரத்தை
நீ ஊடறுக்கும் ஒவ்வொரு முறையும்
உடலை விட மனது வலித்தது
உன் வேகம் அதிகரிக்க
என்னில் கண்ணீர் தயாரானது
வழமையின் காதலில் கசிந்து
உன்னைக் கட்டியணைத்து
முத்தமிடும் எனக்கு
உன் மூச்சுக் காற்றின்
மது நெடி சாட்டையடித்தது...
எங்கிருந்தோ வந்து
அம்மாவின் முகம்
மனதில் நிழலாடியது
இதைத்தானா
"பெண் பொறுப்பதற்கு
பிறந்தவள்" என்றாய் அம்மா?
உன் உயிரின் கடைசிச் சொட்டு
பலம் வரை பொறுத்திருந்தேன்
அப்பாடா..
உன் நீர் கசிந்து
நீ மனிதனாய்
என்ன உணர்ந்தாயோ
"பசிக்குதா?" என்றாய்
முழுதாய் உனது பசி தீர்ந்த பின்
குரல் தழும்ப
"வலிக்குது" என்றேன்
எந்தப் பதற்றமும் இல்லாமல்
"ஸாரிடா செல்லம்" என்றாய்...
உருண்டு திரண்டிருந்த
என் கண்ணீர்த்துளிகள்
மெளனமாய் வழிந்தன...
சில நிமிட மெளனங்கள்...
எங்கே என் தலை கோதி
என்னை வருடிக் கொடுப்பாயோ
என எதிர்பார்த்த எனக்கு
உன் குறட்டை ஒலி
உயிரை வதைத்தது...
உன் தாகம்
உன் தேவை- தீர்ந்ததால்
உனக்கு உறக்கம்
என் வலி
என் அழுகை-ஓயாமல்
விழி மூடி விழித்திருந்தேன்.

-மாதுமை சிவசுப்ரமணியம்

வல்லூறுகளை அழைப்பவன் !


சப்பணம் போட்டு உட்கார்ந்து
குரல்வளையிலிருந்து வல்லூறுகளை அழைக்கிறான்
கூட்டம் கூட்டமாக
அவனை வட்டமிடுகின்றன
இரை கிடைக்கும் ஆவலில்

இது வரையிலும் எந்த இறைச்சியையும்
வழங்கியதில்லை
ஆத்திரமடைந்த வல்லூறுகள்
கண்ணாடி ஜன்னல்களின் மீது விழுகின்றன

மொழி தெரிந்தவன்
கண்ணாடியில் மோதிச் சரியும்
அந்தப் பெரும் பறவையை
தற்பெருமையுடன் பார்க்கிறான்

தொண்டைக்குள் வளர்த்துவைத்திருக்கும்
குரல் வித்தையில்
அவனிடம் அந்த மலைநகரமே
நடுங்குகிறது

அவனுக்கு எதுவும் தர
யாராவது மறுக்கிறபோது
அவர்கள்மீது வல்லூறுகளை
கொத்தவிடுவதாகப் பயத்தை விதைக்கிறான்

பயந்தவர்கள்
வல்லூறுகளைத் தொண்டைக்குள் வைத்திருப்பவனிடம்
இறைச்சிகளைத் தந்துகொண்டிருக்கிறார்கள்.

நாய்களும் நானும்!!!(repeated Hits :)


வலப்பக்கத்து வீட்டு கருப்பு நாயும்,
இடப்பக்கத்து வீட்டு சாதி நாயும்
முக்கை நக்கிக் கொள்ளும் அளவுக்கு
நெருங்கிய நண்பர்களாகத்தான் இருந்தன !

எனக்கு நாய்கள் என்றால் பிடிக்கும் ,
என் வீட்டில் எந்த நாயும் இல்லை.
ஆனால் என் வீட்டுக்கு
நாய்கள் வந்து போவதுண்டு.


இருவீட்டு நாய்களும் எலும்பு அதிகம்
கிடைக்கும் போது முறைத்துக் கொண்டாலும்
அடுத்த தெரு நாய் கவ்விக் கொண்டு
சென்றுவிடக் கூடாதே என்ற 'பாசத்தால்'
ஒரு காலத்தில் சேர்ந்து எலும்புதுண்டை
பங்கு போட்டுக் கொண்டன !

ஒரு நாள், சாதி நாய், கருப்பு நாய்க்கு தான்
சாதி நாய் என்ற பெருமையை கூற
இதைப்பிடிக்காத கருப்பு நாய்,
சாதியைச் சொல்லி திட்டி குறைக்க,
சாதி வெறி கொண்ட நாய் நன்கு தெரிந்த
நாய்களை கூட்டிக் கொண்டு வந்துவிட்டது.
என்னால் முடிந்த அளவுக்கு சண்டையை
விலக்கி நாய்களை
சமாதானமாகப் போகச் சொன்னேன் !

எந்த நாயும் கேட்பதாக தெரியவில்லை
சாதி நாய் தனது நண்பர்கள் நாயிடம் சொல்ல
அந்த நாய்கள் என்ன ஏது என்றே கேட்காமல்
குறைக்க ஆரம்பித்துவிட்டன.

அதுமட்டுமின்றி இந்த கருப்பு நாய் தான் சொறிநாய்
இது பலரையும் கடித்துவிட்டது,
கல்லால் அடிக்க வேண்டும் என்று ஊரே கேட்கும் படி
அனைத்து நாய்களும் குறைத்து வைத்தன.

நாய்கள் அடித்துக் கொள்ளட்டுமே, ஆனால்
எனக்கு பழக்கமாக கருப்பு நாய் இருப்பதற்காக
அதை வெட்டிவிடு என்கிறது சாதிநாயும்
அதற்கு ஆதரவான மற்ற நாய்களும் !

இந்த நாய் சண்டையின் குறைப்பின்
சத்தத்தில் உயர் சாதி நாய்களும்
உற்சாகமாக குலைக்கின்றன.
என்ன எழவவாவது ஆகட்டும்,

நாய் சண்டை நமக்கெதுக்கு என்று
ஒதுங்கிப் போக நினைக்கிறேன் !
நாய்களே உங்கள் சண்டையில்
என்னை வம்புக்கு இழுக்ககதீர்கள்
நாய்களே!

போருக்குத் தயாராகிறேன் !


மீன்கள் புரளும் கழிமுகத்தைப் போல்
குறுவாள்கள் நிறைந்திருக்கின்றன
என் பாசறையில்
இரத்தம் பார்க்கக் காத்திருக்கும்
பசித்த புலியின் பற்களென
ஒன்றையொன்று குத்தி
வெறியேற்றிக்கொள்கின்றன
கற்களும் உலோகங்களும்
உரசிக்கொள்ளும் அச்சத்தம்
ருசி கொண்ட பேரொலியை ஒத்திருக்கின்றது
தசைப் பிசிறு உலர்ந்த வாள்களின்
கண்ணீர்க் கதைகள்
ஏதேன் நதிநீரால் கழுவப்படுகின்றன
என்னுடலைக் கீறிக் கீறி
ஒவ்வொன்றாய்ச் சோதனையிடுகிறேன்
அவற்றின் கூர்மை
பிஞ்சுப் பெண்ணொருத்தியின்
முளைத்த மார்புபோலத்
திருப்தியூட்டுகிறது
தூரத்தில் தீவட்டி ஏந்திய
மனிதர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்
போருக்குத் தயாராகிறேன்
குறுவாள் ஒன்றை
யோனிக்குள் மறைத்துக்கொண்டு..

-சுகிர்தராணி

இரண்டாம் சாமங்களின் கதை


குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய
இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்பதியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை

பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான் அருவெறுப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்

நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மைதான்
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்

இதற்கு முன்னும்கூட
உன் குழந்தைகள் வேறு எங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்

நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புறிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை

முதல் ஸாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது
கனவுகள் பெருகும் இரண்டாம் ஸாமம்

சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஸாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

-சல்மா

கானல்வரி


தண்டவாளங்கள் திறக்கின்ற பாதையில்
நில்லாது ஓடிக்கொண்டிருக்கிறது
மனிதகதி

ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும்
ஒரு குறிப்பிட்ட நிறஒளியும் சோம்பலும்

நிறம் இறுகிய ஒரு மனிதன்
அடிக்கடி தென்படுகிறான்

அவனது உறக்கத்திற்குள்
நிறைய ரயில் வண்டிகள் நுழைந்து செல்லும்போலும்

உடலைப் பிசையும் இளமையைச்
சந்திக்கும் ஒரு பூங்காவாக

எல்லா ரயில்நிலையங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன

கடைசியாய் அவரோடு ரயிலுக்காகக்
காத்திருந்தபோதுதான்
கொடூரமான ஊளையுடன் ரயில் வந்து நின்றது

எல்லோரும் அறியவும் காணவும்
தனது மார்பின் திறந்தவெளியில்
என்னை அணைத்து முத்தமிட்டார்

பின் எப்பொழுதுமே
அவரை அங்கு சந்திக்கவில்லை

-குட்டிரேவதி

நினைவின் மேடு


அலைகள் சரியும் கடலில் அவள்
உடல் நிமிர்த்தி நடந்தாளாம்
வண்டியில் சிக்கி நாயினுடல் கிழிந்து விழ
மண்ணைப் பூசி உயிர் தந்தாளாம்
நூறு நூறு ஆண்டுகளின் வாசனையை
ஒரு தாமரையைப்போல் சுமந்தாளாம்
நீர் சுரக்கும் கண்களால்
நடுநிசியெல்லாம் பாடினாளாம்
வாதை பீடித்த உடல்களை
மருந்தின் ஆற்றில் முக்கி எடுத்தாளாம்
மழையில் மழையில் நனைந்தவாறு
கடலையே இமைக்காமல் நோக்கியிருந்தாளாம்
‘உடம்பெல்லாம் மயிர், ஆம்பிளை மாதிரி
இங்குதான் அவள் கண் மூடினாள்’ எனப்
பூக்கள் விழித்த புதரைக் காட்டினர்
அழுதுவிட்டேன் நான்



- குட்டி ரேவதி

வேசியின் வீடு


உனது நிலைப்பாடுகளில் பருவமடைகிறது
எழுதப்படாதயென் காவியங்கள்
எனினும் புத்தம்புதிய ராகஸ்வரங்களைப் பரிசளிப்பேன்
பூமியாகி வெடித்தணைத்துக் கொல்லவும்
உடலெங்கும் காற்றாகி
ஊதி வெடிக்கச் செய்யவும்
ஆழி கவ்வும் உலகில் அந்தரமாக்கவும்
குறுக்கிடுகளற்று விளம்பினாய்
இந்த மாலைப்பொழுது ஒரு மரணத்தை
உரிஞ்சும் பளிங்கென
இலைகளிலும் கிளைவெளிகளிலும்
பூத்துக்கிடந்த சூரியன் நஞ்சுறவுகளாய்
சுவாசம் உதிர்க்கும் துர்ச்சகுணத்தில்
வழியும் கோழைகளில் காடெங்கும்
காமவாசம் வீச
தாய்மையடைந்தாள்
சிறகு வளர்ந்த வேர்கள்
நடுவாசலில் நின்று தேம்பியழுவதை
நோக்கும் கண்களுக்கப்பால் தெரிவது
இராப் பிச்சைக்காரியின் முனகல் அல்லது
அற்றைப் பரிசக்காரியின் இந்திரஜாலம்
பெயரிடப்படாத ராகஸ்வரங்களைத்
துய்த்துணர்ந்த வேசியன் வீடெங்கிலும்
புனையப்பட்டுள்ளவை
தாய்மையின் அடிவயிறுகள்
தொண்டைக்குழியில்
துருத்தி அடைத்து நகர்ந்தபோது
மீன் செதில்களெனத் தரையெங்கும் வெண்தூள்
மிதங்கிக்கொண்டிருந்தன
புற்றின் மேற்புற நீண்டுகிடக்கும்
வாய்மூடிய பாம்புகளைச் சிதைத்தெரிய
காய்ந்த மாட்டுத்தோலினைப் போல்
மயிர்களுதிர்ந்த மைதானம்
சௌகர்யமாயிற்று
வலிகளை வரித்துச்சொல்லி அழத்தெரியாத
கண்ணாடி தேவதையின் உறைந்த பாதரசம்
ஒரு வெற்றுத்தாளென
வெளியெங்கும் விரைத்து நிற்க
வாழ்தலின் அடிவயிற்றை
வருடிக்கொண்டிருந்த பீதாம்பரம்
உயிரினைக் குவித்து பிதுங்கி பீய்ச்சியடித்த
மாத்திரத்தில்
மாறுதலற்ற பருவமாகிய
பருவக்கோடையதைக் கடந்துகொண்டிருக்கிறாள்
கடவுளின் கன்னியாஸ்திரி.

-கு.உமாதேவி

இன்றைய பகல் பொழுது என்னுடையது


உயர்ந்த நெற்குதிர்போலிருக்கும்
இரவின் ஆளுகையிலிருந்து
காற்றின் கயிறேறித் தப்பிக்கிறேன்
வெளிச்சத்தின் நதியில் மூழ்கி எழ
படீரென்று திறந்துகொள்கின்றன
என் உடலின் கண்கள்
எவ்வளவு சுகங்களை இழந்திருக்கிறேன்
செம்பழுப்பான முத்தச் சுவட்டைக்
கன்னத்தில் இடுகிறது சூரியன்
கண்ணிமைக்கும் நேரத்தில்
பறவையாகிப் பறக்கின்றேன்
உரசிப் புணர நெருங்கி வருகிறது
ஒரு நிஜப் பறவை
கீழிறங்கி வனங்களில் திரிகின்றேன்
விலங்குகளோடு ஓடுகின்றேன்
இலையுதிர்ந்து நிற்கும் மரங்களில்
முத்தங்களைக் கட்டித்
தொங்க விடுகிறேன்
நெடுநாள் தவித்த மழையின் கொடிகளை
என்மீது படர விடுகின்றேன்
முலையழுந்த என் நண்பனைத் தழுவுகையில்
பகலின் குளிகை தீர்ந்துபோகிறது
வருகின்ற இரா எப்படியோ
இன்றைய பகல் பொழுது என்னுடையது.

-சுகிர்தராணி

ஒற்றை சாட்சி


கிரணங்கள் கரைந்து வழியும்
பின்மாலை வேளையில்
என் அத்தனை பலவீனங்களையும்
சுருட்டி ஒளித்தபடி
அவ்விடத்தை அடைகிறேன்
பகலின் ஒளி துடைக்கப்பட்டு
மின்னும் அவ்விடத்தின் பேரமைதி
மிருகத்தின் ரோமத்தால் பின்னப்பட்ட
ஒரு போர்வையாகி என்னைப் போர்த்துகிறது
எத்தனை பாதச் சுவடுகள்
எத்தனை கிசுகிசுப்பான வார்த்தைகள்
பாதரசத் திவலைகள்போல்
காலடியில் உருண்டு ஓடுகின்றன
சொல்லாமல் விடப்பட்ட காதலை
மரக்கன்று ஒன்றை நடுவதன் மூலம்
சொல்லிவிட முடியாதுதான் என்றாலும்
இதுநாள் வரை நீருற்றிக் காத்துவந்த
வாகைமரம் பூத்து உதிர்க்கும்
வெளிறிய பூக்களின் நெடி
உன்னை நோக்கி நீள
ஏதாவது விருட்சத்தின் அடியில்
நீயும் நின்றுகொண்டிருக்கலாம்
நிராகரிப்பின் ஒற்றைச் சாட்சியாய்.

-சுகிர்தராணி

ஆதித் தாயின் கைரேகை


ஒளியூடல் கொண்ட அப்பிரதேசத்தில்
என்பெயர் அழைக்கப்பட்டவுடன்
முகத்திலறையும் காற்றைப்
பருகியபடி நுழைகிறேன்
பாம்புகள் இணைந்தடங்கும்
ஓசையினும்
மெலிந்துவிடுகிறது என்குரல்
ஆழ்கடலின் குளிர்நீரோட்டத்தை
ஒத்தாயிருக்கிறது
என் நடையின் சாயல்
ஆடைக்கிழிசலைக் கையால்
மறைக்க முயன்று தோற்கும்
சிறுவனின் மருட்கை
என் தோலில் படிந்திருக்கிறது
கொடிகள் பின்னிய வழி
முற்றுப்பெற நிமிர்ந்து பார்க்கிறேன்.
கல்லாய் சமைந்து நிற்கிறது
ஆசிர்வதிக்கப்பட்ட அவ்விருட்சம்
ஆயிரமாயிரம் காலஅழுத்தம்
அதன் கண்களில் வழிகிறது
உடல் முழுவதும்
காலொடிந்த குகை ஓவியங்கள்.
குறிப்பெடுத்துக் கொண்டு திரும்பும்
என் கைகளில் சிவந்த பழமொன்று.
அதில் அழுத்தமாய் படிந்திருந்தது
ஆதித்தாயின் கைரேகை.

-சுகிர்தராணி

இரட்டைக்கால் சிலுவை


இரட்டைக் கால்களுடன் நிற்கிறது
விநோதமாய் சிலுவைமரம்
கயிறுகளைக் கொண்டு உயர்த்தப்படும்
என் தலையில் சுற்றப்பட்டிருக்கிறது
உபயோகமற்ற லங்கோட்டுத்துணி
உதடுகளில் சிவப்பு வண்ணம்.
என்கால்களும் விரிக்கப்பட்டு
கிளைமுறியும் விசையுடன்
இறக்கப்படுகின்றன ஆணிகள்
நெருப்புக் குழம்பெனப் பரவுகிறது
செஞ்சூடான இரத்தம்
நான் எதையும் முணுமுணுக்கவில்லை
மலையின் நெளிந்த பாதையில்
நீண்டிருக்கிறது வரிசை
அவரவர் விரும்பியபடி
ஆணிகளால் நிரப்பப்படுகிறது
என்னுடல்.
நிர்வாணம் கரைந்த புளிப்புநீர்
வாயில் பட்டதும்
என் திரைச்சீலை இரண்டாகக் கிழிகிறது
திருப்தியுடன் திரும்பிச் செல்லும்
உம்மை எதிர்கொள்கின்ற
சந்ததியின் குறிகளிலெல்லாம்
ஆணித் தழும்புகள்.

-சுகிர்தராணி

கூடல் எங்கேயும் சாத்தியம்.


என் அறைக்குள் பிரவேசிக்கும்
உன் விழித்திரையில் பதிகிறது
வியப்பின் பிம்பம்
நாற்புறமும் சுவர்களற்ற
அறையும் அமையக்கூடுமென்பதில்
குழப்பமுறுகிறாய்
உன் வருகையின் வெளிச்சம்
கதவுகளெவையும்
பொருத்தப்படாததை அறிவிக்கிறது
கூரையிலிருந்து
நட்சத்திரங்கள் கொட்டுகின்றன
நாயின் தோலாய் வழுக்குகிறது
காலடியில் தரை.
உன் செல்களின் உட்கருக்கள்
நீளத் தொடங்குகையில்
தும்பிகள் திரியும் வெளி
உன்னை வெட்கமூட்டுகிறது
உயிருள்ள மரங்களால்
அலங்கரிக்கப்பட்ட என்னை
குளிர்விக்கப்பட்ட கண்ணாடித் திரவம்
திரைச்சீலையாய் தொங்கும்
உன்னிருப்பிடத்திற்கு அழைக்கிறாய்
முகச்சதை அதிரச் சிரிக்கிறேன்
தெருவோரக் கல்லில்
குறியைக் கூர்தீட்டிக் கொள்ளுமுனக்கு
கூடல் எங்கேயும் சாத்தியம்.
-சுகிர்தராணி

பருவகால வண்ண உடைகள்


மழைக்காலங்களில்
தெருவில் அலையும் சிறுமிகள்
வெண்ணிற மழையையும்

வேனிற் காலங்களில்
வியர்வையை உரித்தெடுத்தபடியே
மஞ்சள் வெயிலையும் உடுத்துகிறார்கள்

தினமும் கருப்பு இரவுகளை உடுத்தி
தெருக்கோடி மூலைகளிடமும்
டூரிங் டாக்கீஸ் மணல் வெளிகளிடமும்
நட்போடு கிசுகிசுக்கிறார்கள்

தம் கட்டற்ற செயல்களால்
பருவங்களை வண்ண உடையாக்கி
காலம் இன்னும் செப்பனிடாத
குட்டி முலைகளின் மீது
உடுத்துகிறார்கள்

பிறகொரு நாளில் மொத்த பருவங்களும்
மொத்த நிறங்களும்
ஒரே நிறமாய் உருப்பெற்று

யோனிக் கிண்ணத்திலிருந்து
உருகி வழிய
அவ்வர்ணத்தை வியந்து சமைகிறார்கள்
சிறுமிகள்

-சல்மா

மலட்டுக் குறிகள்


மின்மினிப் பூச்சிகள் மிகுந்த அடர்வானின்
பச்சை வெளிச்சத்தில்
கூடல்ஒன்று நிகழவிருந்தது.
முன்னர் நிகழ்ந்தவை எல்லாம்
வெம்மையைக் கிளறிவிட்டுப் போகும்
பருவம் தப்பிய மழையின்
சாயலுடையதாகவே இருந்தன.
பருவச் சாற்றில் அரும்பிய மலரென
அவனுடல் மேலெழும்பி நுரைக்கிறது.
மகரந்த நெடி பரவியிருந்த
அவன் தேகம்
வெளுத்த பாளையாய் வசீகரிக்கிறது.
சுழலும் காற்றாடியைப் போல்
எனக்குள் அவனைச் சுழற்றத் தொடங்கினேன்
இறக்கைகளை இழந்து
புள்ளியில் மறைய ஆரம்பித்தோம்
காற்றாடி
வெளியின் நிறத்தொடு கட்டுண்டிருந்தது.
கூடலின் முதல் விதியை
அவனது உடல்குளத்தில் துவக்கினேன்
அவன் திகைத்து விலகி
ஏழுகடல் தாண்டி மரமொன்றின் உச்சியில்
மாட்டியிருந்த மலட்டுக் குறியை
எடுத்துவரக் கிளம்பினான்
பின் எப்போதும் அவன் வரவில்லை.

-சுகிர்தராணி

தோழிமார் நிலம்


ஊடல் நிலமெங்கும்
வளவி ஒலி சிதறக்
கொடியிலிருந்து உதிரும் மண்ணில்

நிலத்திற்குரிய தேவதைகளில்
ஒருத்தியாகிய உன் வாசமும்
காடெங்கும் கடலை வாசமும்
நிறைந்திருக்கும்

அந்தி சிவக்கும் வரை
தோழிமார் கதைகளில்
நீயும் கதை சொல்வாய்

உப்பு பூத்த உன் கழுத்து வியர்வை
என் உணர்நீட்சியில் சுவைநீட்சியின்மீது
தாகத்தை ஏவி விடும்
கறுத்த உன்உடம்பு கரிக்கும்

ஆய்ந்து முடித்து
பெண்டுகளோடு நீ சென்ற பிறகு

குறுக்கொடிய நீ
அமர்ந்த இடத்திற்கு வந்து பார்ப்பேன்

எனக்காகவே இனிக்கும் பிஞ்சுகளும்
உரித்துத் தின்ற கடலைத்தொளும்புகளும்
மிஞ்சிக் கிடக்கும்.

-மௌனன் "காலச்சுவடு"

இரவுகளைப் புணர்ந்து திரியும் கள்ளத்தனமான விலங்கு


இரவுகளைப் புணர்ந்து திரியும்
கள்ளத்தனமான விலங்கினைப் போல
மிகவும் மோசமானவளாக அறியப்படுகிறேன்.
இரண்டாகக் கிழிதலுற்ற என் முகம்
சலனமடங்கிய யுத்த களத்தின்
கந்தலாடையாய் நசிந்திருக்கிறது.
பருவ நாணில் பூட்டப்பட்ட என் குரல்
ரணங்களை மென்று விழுங்கிய
துயரத்தின் ஒலியொடு பயணிக்கிறது.
காம்பிலிருந்து விடுபட்டு
வெடித்துச் சிதறும் துரியன் பழங்களென
நாற்றமெடுக்கின்றன வார்த்தைகள்.
எரிமலையின் நெருப்புக் குழம்பு
இறுகிக் கிடக்கும் கோர வடுவாய்க்
குவிந்திருக்கிறது என் தேகம்
வழக்கொழிந்த வரைபடத்தில்
உறைந்த இரத்தத்தின் மீது
படிந்திருக்கிறது என் இருப்பிடம்
வெயில் வீசும் செங்குத்தான மலைச் சரிவில்
உன்னோடு பகிரவென்றே
செதுக்கப்பட்டிருக்கிறது
என் கற்படுக்கை
என்றாலுங்கூட
என் யோனி மயிர்கள்
வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன.

-சுகிர்தராணி

சுய ரகசிங்கள்


இரகசியங்கள்

அதி அற்புதமானவை.

முத்தத்தின் கசந்த போதையோடு

எப்போதும் என்னிடம்

சேர்ந்துகொண்டே இருக்கின்றன

நிபந்தனைகள் ஏதுமின்றி

எல்லா இரகசியங்களையும்

எல்லோரிடமும் சொல்லிவிடுகிறேன்

உடலினையும் தருணத்திலரும்பியும்

நீலவியர்வையாய்

ஒளிர ஆரம்பிக்கின்றன அவை.

வலியைச் சுழன்றடிக்கும்

மாதத்தின் இரத்தநாட்களைப் போல்

மீண்டும் சில இரகசியங்கள்

மேலெடாய் படிகின்றன

.என் வண்டல் சமவெளியில்.

உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படுமவை

தேமலின் சிவந்த நிறத்தோடு

வெளியேங்கும் சுற்றித் திரிகின்றன

இரகசியங்களெனும் பிரக்ஞையற்று.

ஆனாலும்

விரிசலுற்ற மனத்தாழிக்குள்

ஒளிந்து கிடக்கின்றன

ஓராயிரம் சுயரகசிங்கள்.
-சுகிர்தராணி

புரட்சியும் புண்ணாக்கும் ஏகாதிபத்தியமும்.


விடைதெரியா

கேள்விகளாய்

என் வீடுதேடி வந்த

இரண்டு செஞ்சட்டை

தோழர்கள் போட்டுக்

கொடுத்த ப்ரூ காபியையும்

எடுத்துக் கொடுத்த

இரண்டு ஃபைவ் ஸ்டார்

சாக்குலேட்டுகளையும்

நாக்கில் எச்சிலும்

கண்களில் புரட்சியும்

மின்ன கடைவாய்

பற்களின் சொத்தையில்

சிக்கிவிடாமல் சுவைத்து

உண்ட படி
அமெரிக்க ஏகாதிபத்தியம்

பற்றி பேசியபடியே

குடிதாங்கிக்கும் கொட்டை

தாங்கிக்கும் வித்தியாசம்

தெரியாமல்

தலைவனின் பூனூல்

செஞ்சட்டையை மீறி

தன்முகம் காட்ட வெளியே

பீறிட்டு கிளம்புவதை

கண்டு கால்களில்

மூத்திரம்

ஒழுக அமெரிக்க

ஏகாதிபத்தியம்

ஒழிக

பார்ப்பன ஏகாதிபத்தியம்

ஒழிக

மாமா ஒழிக

என்று கோஷம்

போட்டபடியும்

வேட்டியைக் கூட

எடுக்காமல் ஓடியதில்

கழனித் தொட்டியில்

புண்ணாக்கு

மென்றுகொண்டிருந்த

என்வீட்டு எறுமை

இரண்டு

நாளாய்

பால்கறக்கவில்லை

அகலிகையின் யோனி


ரம்பை ஊர்வசி

இந்திராணி

அந்தப்புரத்தை அலங்கரிக்கும்

ஆயிரம் தேவதைகள்

இருந்தும் கூட

எப்போதும் அகலிகைளின்

அல்குல் தேடி

அலைகிறது

தேவலோகத்து

இந்திரனின் வஜ்ராயுதம்


கிழிந்த யோனிகளுள்

பிணமாக மல்லாந்து கிடக்கும்

மண்ணின் வேர்களைப் பிழிந்து

தாகம் தீர்த்துக் கொள்கின்றன

இந்திரனின் வெள்ளை யானைகள்

கல்லாக இருக்கும் போது

காதலாகி கசிந்துருகிய

அகலிகையின் முலைப்பாலிருந்து

விஷம் கலந்து வடிகிறது

சாபவிமோசனம் கொடுத்தவனைச்

சாகடிக்கும் நாட்களுக்காய்

காத்திருக்கிறது

மனித வெடிகுண்டுகளைப்

பிரசவிக்கும்

அகலிகையின் யோனி.


-புதிய மாதவி

பதினான்கு அம்புகள்


பச்சைக் கள்ளியின் பழநிறத்தில்

கனன்று எரிகிறது தீ

அடர்வனத்தின் மர்மப் புன்னகை

பெருங்காற்றாய்ச் சூழ்ந்து நிற்க

மிகுந்த குலவைச் சத்தங்களும்

துந்துபிகளின் பேரொலியும்

நீராவியைப் போல பரவி மிதக்கின்றன

கடல் சூழ்ந்த நிலத்திலிருந்து

மீட்டுக் கொணர்ந்த என்னை

நெருப்பின் விளிம்பில் நிறுத்துகிறார்கள்

பூக்களால்அலங்கரிக்கப்பட்ட சிவிகையும்

மென்மையாக்கப்பட்ட பாதக் குறடுகளும்

எனக்காகக் காத்திருக்கின்றன

தீயிலிறங்கிக் கரையேறச் சொல்லும்

வில்லேந்திய அவனிடம்

என்னைச் சிறையிட்டவனோடு

செம்மரக் கட்டிலில் சயனித்ததை

இதழ்பிரித்து விளம்புகின்றேன்

காப்புடைத்த என் யோனியிலிருந்து

வெளியேறுகின்றன பதினான்கு அம்புகளும்

பெருந்தீயை அணைக்கப் போதுமான

ஒரு குவளை இரத்தமும்.


-சுகிர்த ராணி