வல்லூறுகளை அழைப்பவன் !


சப்பணம் போட்டு உட்கார்ந்து
குரல்வளையிலிருந்து வல்லூறுகளை அழைக்கிறான்
கூட்டம் கூட்டமாக
அவனை வட்டமிடுகின்றன
இரை கிடைக்கும் ஆவலில்

இது வரையிலும் எந்த இறைச்சியையும்
வழங்கியதில்லை
ஆத்திரமடைந்த வல்லூறுகள்
கண்ணாடி ஜன்னல்களின் மீது விழுகின்றன

மொழி தெரிந்தவன்
கண்ணாடியில் மோதிச் சரியும்
அந்தப் பெரும் பறவையை
தற்பெருமையுடன் பார்க்கிறான்

தொண்டைக்குள் வளர்த்துவைத்திருக்கும்
குரல் வித்தையில்
அவனிடம் அந்த மலைநகரமே
நடுங்குகிறது

அவனுக்கு எதுவும் தர
யாராவது மறுக்கிறபோது
அவர்கள்மீது வல்லூறுகளை
கொத்தவிடுவதாகப் பயத்தை விதைக்கிறான்

பயந்தவர்கள்
வல்லூறுகளைத் தொண்டைக்குள் வைத்திருப்பவனிடம்
இறைச்சிகளைத் தந்துகொண்டிருக்கிறார்கள்.

0 comments: