வாழ்ந்ததை உணர்த்திய மரணம்


(1)

வியட்நாமில், ஆப்கானிஸ்தானில்,
ருவண்டாவில், ருசியாவில்,
ஈரானில் ஈராக்கில்
இனப்படுகொலைகள் நடந்ததெல்லாம்..
நமக்கு வெறும் செய்தி.

சாப்பாடு மேசையில் புரட்டிப் பார்த்துவிட்டு
தூக்கி எறிந்துவிடும் செய்தி.
உலகச் செய்திகளில்
வாரத்திற்கு ஒரு முறை வாசிக்கப்பட்ட செய்தி.
அதுவே இலங்கையில் நடந்தபோது....
செய்திகள் வாழ்க்கையானது.

அவர்களின் முகம் தெரியாதுதான்.
தொடர்புகள் இல்லைதான். ஆனாலும்
அவர்கள் வாழ்க்கையில்
அவர்கள் போராட்டத்தில்
அவர்கள் ரத்தத்தில்
அவர்கள் வெற்றியில் அவர்கள் தோல்வியில்
நாமும் இருந்தோம். இருக்கிறோம்.

அவர்கள் வாழ்க்கை நம்முடையதாக இல்லை எனினும்
அவர்கள் மரணம் நம்முடையதானது.
பிறப்பில் தான் உறவுகள் நிச்சயிக்கப்படுவதாகவும்
தொடர்வதாகவும் சொல்கிறார்கள்,.
ஆனால்
அவர்கள் இறப்பில் தான்
அவர்களுக்கும் நமக்குமான உறவு நிலம் விளைந்தது.

அவர்கள் மரணத்தில் தான்
நாம் நம்மை நம் வாழ்க்கையை கற்றுக்கொண்டோம்.
அவர்களின் ரத்தம் தோய்ந்த போராட்டத்தின் கதைகளின் ஊடாகவே
நாம் போராளிகளின் முகங்களை வரைந்தோம்.

மண்ணம்பேரியும் கோணேஸ்வரியும்
நம் ஆதித்தாயின் புதல்வியர் என்பதை
உணர்ந்த தருணங்களில் தான்
முலைப் பிடுங்கி எறிந்த கண்ணகியின் ஆவேசத்தைக்
கற்பனையில்லை என்றுணர்ந்தோம்.
சுயம்புவாக முளைத்த பெண்ணியத்தை கோணேஸ்வரியின்
யோனியில் வெடித்த கிரனைட் வெடிச்சிதறல்கள் தான் நம்மில் விதைத்தன.

(2)

சித்திரவதை முகாம்களில்
காணாமல் போனவர்கள் பட்டியலில்
வன்மத்தின் இரத்த வாடை
வேட்டைநாயின் இரத்த நெடி
ரத்தக் கறைப்படிந்த சுவர்களில்
மனித ஆன்மாவின் சித்திரங்கள்.

கனவில் கத்திகள் பாய்ந்தக் கவிதைகளை
ரசிக்கும் படி எழுதிக்குவித்த
எம் கவிஞர்கள்
எப்போதும் எழுதியதில்லை
காலம் காலமாய்
வரப்போகும் தலைமுறை தலைமுறையாய்
நம்மை நம் சந்ததிகளைத்
துரத்திக்கொண்டிருக்கும்
மரணத்தின் ஓசையை.

(3)

மரணம் மட்டுமே அறிந்த
எம் விளைநிலத்தில்
குருதியின் நிறத்தில்
பூக்கும் மலர்களில் கூட
வீச்சமடிக்கும்
இனவாத எலும்புத்துண்டுகளின் வாடை.

எங்கள் குழந்தைகள் மட்டுமல்ல
உங்கள் குழந்தைகளும்
குழந்தைகளாக வளரவில்லை.
வெடிகுண்டுகளும்
பீரங்கி ஓசைகளும்
பாலூட்டிய
பதுங்குகுழிகளின்
மழலை விரல்களில்
பிறக்கும் போது
பதிந்துவிட்டது
ரத்தம் தோய்ந்த
வன்மத்தின் வாடை.

யுத்த வெறியில்
உன்மத்தம் பிடித்த
நாய்களுக்குத் தெரிவதில்லை
நடுவீட்டிலும்
புதைக்கப்பட்ட
கண்ணிவெடிகளின் காட்சி.
சிங்களத்தாயின் அடிவயிற்றிலும்
ஜனிக்கக்கூடும்
கம்சன்களை வதைச் செய்யும்
கண்ணனின் அவதாரம்.

(4)

மக்களின் மரணத்தை
கைதட்டிக் கொண்டாடியது ஒரு கூட்டம்
மனிதம் மரணித்து போனதை
மவுனமாக பதிவு செய்தது
அந்த நீண்ட இரவு.

தப்பித்ததாக சொன்னார்கள்.
நலமாக இருப்பதாக
நம்பிக்கையுடன சொன்னார்கள்
இல்லை இல்லை
எல்லாம் முடிந்ததென்றும்
எரித்துவிட்டதாகவும்
சாம்பலைக் கூட
இந்தியக்கடலின் மடிநிறைக்க
கரைத்துவிட்டதாகவும்
காற்றில் கலந்துவிட்டதாகவும்
மீண்டும் மீண்டும் சொல்லுகிறார்கள்..

மரணத்தை மீறியும்
தனி மனிதர்களின் வளையத்தைத் தாண்டியும்
வாழ்க்கையும் உண்டு
போராட்டங்களும் உண்டு

தன் பெண்டு தன் பிள்ளை
தன் மனைவி தன்துணைவி
தன் பேரன் தன் சுற்றம்
இவர்களையே மந்திரிகளாக்கும்
வித்தைகள் அறிந்த
நம் தலைவர்கள்
அறிந்ததில்லை
நிலத்தடியில் உதிக்கும்
சூரியக்குஞ்சுகளை.

(சங்கரியின் கவிதை "இருப்பும் இறப்பும்"
கவிதை வரிகள். தொகுப்பு : சொல்லாத சேதிகள்)

- புதிய மாதவி, மும்பை (puthiyamaadhavi@hotmail.com)

தாள்களின் நிர்வாணம்


என் கறுத்த ஆழங்களில்
உன் கசடுகள் படிந்தபின்
உறங்கிப் போகிறாய்
உன் அடியிலிருந்து உருகி
மழுங்கிய அலைகளின் பரப்பில்
தீர்ந்த கதைகளை எழுதுகிறேன்
உரத்த மஞ்சள் நிறத்தில்
எழுத்துகளின் மை ஒளிர்கிறது
முதுகின் கசகசப்பில்
புரண்டு படுத்தவன்
என் மின்னலின் அதீதத்தால்
தாக்குண்டு எழுகிறாய்
இயல்பாய் அத்தியாயங்கள் இடம்மாற
கருமுட்டையிலிருந்து
திருத்தங்கள் ஆரம்பிக்கின்றன
வார்த்தைகளின் முதுகு
ஒடிக்கப்படுகிறது
சொற்களின் அர்த்தங்கள்
பதுக்கப்படுகின்றன
உன் வஞ்சனை நீரால்
பெரும்பள்ளங்கள் நிரம்புகின்றன
ஒருவாறு உன்னமிலங்கள் வடிந்ததும்
எல்லம் அடிக்கோடிட்டு
அழிக்கப் பட்டிருக்கின்றன
குறட்டை ஒலியோடு உறங்கும் உன்னை
ஏளனமாய் பார்க்கிறது
அத்தாள்களின் நிர்வாணம்.

- சுகிர்தராணி

நாய் பொம்மைகள்


1. சாவிக் கொடுத்தவுடன்

குதிக்கும், தவ்வும், நடக்கும்

குரைக்கும், முன்கால் நீட்டி

மடங்கும் பொம்மையை

ஆச்சர்யத்துடன் பார்க்கும்

மனிதனுக்கு மேலதிகாரி

அழைப்புவர செல்போனோடு

நகர்கிறான் பதற்றமாய்



2. வெண்பட்டு பஞ்சு பொம்மையை

காதலிக்கு தேர்வு செய்தவன்

ஏ.டி.எம் செ‌ன்று திரும்புவதற்குள் அது

இன்னொருவன் பின்னால்

வாலாட்டி சென்றிருந்தது



3. பிச்சைக்காரனொருவன்

பிளாட்பாரத்திலிருந்து வெறிக்கிறான்

ஷோகேஸ் பொம்மையை

நாய்போல நடந்தும், குரைத்தும்

‌ விளையா‌ட்டு காட்டுகிறான்

அவன் குழந்தைக்கு



4. நாற்பது வயது‌ மனிதரின்

முன் தலைகுனிந்து நடக்கும்

இள‌ம்மனைவியின்

இரண்டு கைகளிலும்

நாய் பொம்மைகள்.



5. வாலறுந்து உடைந்த

நன்றி கெட்ட நாயொன்று

மறுநாள் குப்பைத்தொட்டியில்

விழுந்தது சுவாரஸ்யமற்று



6. நடைபாதை கடைக்காரன்

தேனீரருந்தி திரும்புவதற்குள்

அவசரமாக புணர்ந்து

முடிந்திருந்தது

நாய்பொம்மைகள் இரண்டு



7. நாலடி நாய்பொம்மையோடு

வந்தவன் மேல்

வன்மமாய் பாய்கிறது

வீட்டில் வளர்க்கும்

விசுவாச ஜீவனொன்று




- என். விநாயக முருகன் ( navina14@hotmail.com

நாய்களே உங்கள் சண்டையில் என்னை வம்புக்கு இழுக்காதீர்கள் (REPEATED HITS)


வலப்பக்கத்து வீட்டு கருப்பு நாயும்,
இடப்பக்கத்து வீட்டு சாதி நாயும்
முக்கை நக்கிக் கொள்ளும் அளவுக்கு
நெருங்கிய நண்பர்களாகத்தான் இருந்தன !

எனக்கு நாய்கள் என்றால் பிடிக்கும் ,
என் வீட்டில் எந்த நாயும் இல்லை.
ஆனால் என் வீட்டுக்கு
நாய்கள் வந்து போவதுண்டு.


இருவீட்டு நாய்களும் எலும்பு அதிகம்
கிடைக்கும் போது முறைத்துக் கொண்டாலும்
அடுத்த தெரு நாய் கவ்விக் கொண்டு
சென்றுவிடக் கூடாதே என்ற 'பாசத்தால்'
ஒரு காலத்தில் சேர்ந்து எலும்புதுண்டை
பங்கு போட்டுக் கொண்டன !

ஒரு நாள், சாதி நாய், கருப்பு நாய்க்கு தான்
சாதி நாய் என்ற பெருமையை கூற
இதைப்பிடிக்காத கருப்பு நாய்,
சாதியைச் சொல்லி திட்டி குறைக்க,
சாதி வெறி கொண்ட நாய் நன்கு தெரிந்த
நாய்களை கூட்டிக் கொண்டு வந்துவிட்டது.
என்னால் முடிந்த அளவுக்கு சண்டையை
விலக்கி நாய்களை
சமாதானமாகப் போகச் சொன்னேன் !

எந்த நாயும் கேட்பதாக தெரியவில்லை
சாதி நாய் தனது நண்பர்கள் நாயிடம் சொல்ல
அந்த நாய்கள் என்ன ஏது என்றே கேட்காமல்
குறைக்க ஆரம்பித்துவிட்டன.

அதுமட்டுமின்றி இந்த கருப்பு நாய் தான் சொறிநாய்
இது பலரையும் கடித்துவிட்டது,
கல்லால் அடிக்க வேண்டும் என்று ஊரே கேட்கும் படி
அனைத்து நாய்களும் குறைத்து வைத்தன.

நாய்கள் அடித்துக் கொள்ளட்டுமே, ஆனால்
எனக்கு பழக்கமாக கருப்பு நாய் இருப்பதற்காக
அதை வெட்டிவிடு என்கிறது சாதிநாயும்
அதற்கு ஆதரவான மற்ற நாய்களும் !

இந்த நாய் சண்டையின் குறைப்பின்
சத்தத்தில் உயர் சாதி நாய்களும்
உற்சாகமாக குலைக்கின்றன.
என்ன எழவவாவது ஆகட்டும்,

நாய் சண்டை நமக்கெதுக்கு என்று
ஒதுங்கிப் போக நினைக்கிறேன் !
நாய்களே உங்கள் சண்டையில்
என்னை வம்புக்கு இழுக்காதீர்கள்
நாய்களே!

மாதவிலக்கான பெண்கள்


வடநாட்டின் குளிருக்கு
கால்சராயும் பூட்சோடும் பூசாரி
மோட்டார் போட்டாகிவிட்டது
பெருமாக் கோயில் தேருக்கு
திருப்பதிக்குப் போகமுடியாவிட்டால்
தி.ந்கர் கிளையில் காணிக்கைச் செலுத்தலாம்
மூணுநாள் விரதம்
ஐயப்பனுக்குப் போதும்
அரே ராமாவில்
ஆங்கிலேய அர்ச்சகர்
இந்தோனேசியக் கோவிலில்
செருப்புப் போட்டுக் கொள்ளலாமாம்
கணேசனுக்கும்
கோழிக்கறிப் படையல்
சட்டம் எழுதியாயிற்று
எல்லா சாதியும்
கோயிலுக்கு வ்ர
என்னாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்கான பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை.

- கவிஞர் கனிமொழி.

என் முனியம்மா..


பாரதிக்கு
கண்ணன் என் சேவகன் மாதிரி
எனக்கு எங்கள் முனியம்மா.

காய்கறி நறுக்குவது முதல்
துணிமடிப்பது வரை
எல்லாம் அவள் செய்வதாகத்தான் ஒப்பந்தம்
ஆனால் ஒப்பந்தங்களை மீறுவதில்
நாங்கள் இருவருமே
இந்தியாவும் இலங்கையும் மாதிரி.

ஆனால் எங்கள் ஒப்பந்தங்களில்
எழுதப்படாத ஷரத்துகள்
எங்கள் இருவருக்குமே
ரொம்பவும் முக்கியமானவை
அதைத் தொடர்வதால்தான்
என்றும் தொடர்கிறது
எங்கள் இருவருக்குமான
கைகுலுக்கல்கள்.

எல்லார் வீட்டு செய்திகளையும்
அவள் சொல்லச்சொல்ல
நான் விருப்பத்துடன் கேட்பது போல
ம்ம் கொட்ட வேண்டும்.
பதிலுக்கு நான் சொல்லும்
இலக்கிய அரசியல் கதைகளை
அவளுக்குப் புரியாவிட்டாலும்
அவள் கேட்டாக வேண்டும்.

இப்போதெல்லாம் நம் தமிழர்
எழுச்சிக்கதைகளை
முத்துக்குமரன்களின்
உயிர்த்தியாகங்களை
ஈழத்தமிழருக்காய்
நடக்கும் கூட்டங்களை
பேரணிகளை
மனிதச்சங்கிலிகளை
நித்தமும் நித்தமும்
நம் தலைவர்கள் பேசிய
வீரவசனங்களை
சொல்லிச்சொல்லி
பூரித்துப்போனேன்.
தேர்தல் வந்தது
கூட்டணி பிறந்தது.

முனியம்மா கேட்கிறாள்
என்னமா இது..?
யாரு கூட யாரெல்லாம்?
ஈழத்தமிழர் போராட்டம்
அது இதுனு சொன்னீகளே
இவுக மாறிமாறி
அங்கேயும் இங்கேயுமா
நிக்கத பார்த்த..
ஏ தாயி...
அண்ணன் தம்பி செத்தாலும் பரவால்லேனு..
இந்த ஆட்டம் ஆடுதானுகளே..
இவனெல்லாம்
சோத்துலே உப்பு போட்டு தின்னான
இல்ல..

முனியம்மா அடுக்கிக்கொண்டே
இருக்கிறாள்
நான் மவுனமாய்...
வழக்கம் போல
ம்ம்ம் கொட்டிக்கொண்டு.

- புதிய மாதவி, மும்பை

ஆணுறை


கண்ணைப் பாம்புகள் கொத்தும்
கதைகளின் திசைகளிலிருந்து
விடுவித்துக்கொண்டாள் அரசி.
கண்ணாடியின் நீர்மவெளியில்
திகைப்பூட்டிய தனது உடலைப் பொத்தி மறைப்பதில்லை
அரசனின் ஆணைகள் வரிந்த ஓலையையும் வாசலையும்
திறந்துவைப்பதில்லை

ஆனால், அரசி கற்க நிறைய கலைகள் பிறந்தன
பனிபூமியின் மீது அது எழுப்பும் மூச்சைப்போல
உலவப் பயின்றாள்
முழுநிலவின் இரவுகளில் உடலைப்
பிணமெரியும் வாசனையோடு மலர்த்தினாள்.
நட்சத்திரங்களின் மொழியைப் பயின்றாள்
புற்களுக்கு உயிரூட்டக் குழந்தைகளுக்குக் கற்பித்தாள்
பெண் மூட்டும் தீ
ஏற்கனவே உருவாக்கப்பட்ட சொற்களைச்
சாம்பலாக்கவே என்றறிந்தாள்

என்றாலும் இரவு, பகலுக்கு முன்பாய் விடிந்தது
காவலர்கள் அவள் கண்அவிழ்க்கக் காத்திருந்தனர்
பேரேடுகள் அறைவாயிலை அடைத்தன.
தளபதிகள்
ஓலை வாங்கிட அரசியைத் தேடினர்.
ஆடை மாற்றும்
மறைப்பு தேடிக் காத்திருப்பாள் அரசி.
காலத்தின் கோடுகள்
அவளது முகத்தில் வரைபடங்களாயின.
அரசனோ ஓர் இரவும்
ஆணுறையை எடுத்துவர மறப்பதில்லை.

- குட்டி ரேவதி