மண் அடுக்குகள்-லீனா மணிமேகலை


மண் அடுக்குகள்


நாளையை பலியிட்டிருந்த
விசித்திரமான வீட்டில் தான்
நான் இறந்திருக்கக் கூடும்

மறுக்கப்பட்டவை விடுபட்டவை
லட்சியங்கள் அபத்தங்கள்
பைசாசங்களாக மாறியதில்
இருளின் நடமாட்டம்
ஒரு நடனம் போல
முற்றத்தில்
காணக் கிடைக்கிறது

சுவர்களில் கீறியிருந்த சித்திரங்களில்
காளைகள் அம்பு உழவு ஏர்
க ங ச ஞ ட ண ர ச ல ழ ள
பைபிள் பருத்தி
எந்திரம் துப்பாக்கி
ஆப்பிள் E=mc2 101011
கணினி பங்கர்கள்
என
எல்லா வடிவங்களையும்
யோனி அச்சில்
வரைந்து வைத்ததால்
ஓவியனின் கண்கள் பறிக்கப்பட்ட கதை
நாட்டார் பாடல்களில்
பாடப்படுவதாக செவிவழிச் செய்தி

ஆண் பெண் அலி
அரசுகளின் பால் அச்சு பொறித்த
ஆடைகளை அணிய மறுத்த
கலைஞர்கள் மேல் ஏவப்பட்ட
சாபங்களும் நிந்தனைகளும்
விலக்கப்பட்ட கனிதரும் மரங்களாக
வளர்ந்திருந்தன
அதன் மகரந்தமற்ற சாம்பல் நிறப் பூக்களை உண்டால்
உலகத்தின் துயர் தீர்க்கும் தத்துவங்களை எழுதிவிடலாம்
என்ற வதந்திகளும் நாடெங்கும் பரவியிருந்தன

நூறாயிரம் ஆண்டுகளாக
அரங்கேறி வரும்
வறுமைச் சடங்குகளில்
கொழுந்துவிட்டெரியும் சாமத்தீயை
முலைப்பால் அணைத்துவிடும்
என்ற வரலாற்றின் சான்றை
நிறுவ முயன்றதாலேயே
படுகொலை செய்யப்பட்டேன்
வட்டெழுத்தில் இருந்த
அந்த ஆவணங்களை
என் குருதி தோய்த்து
இங்கே தான் புதைத்திருக்கிறார்கள்

அர்த்தங்களை உருவாக்குவதும அழிப்பதுமான
போர்களின் கபாலங்கள்
இந்த வீட்டை ஆட்சி செய்வதை
நான் எதிர்த்தேன்
என்னை "புரட்சி"யாளர்களும் எதிர்த்தார்கள்
குறி வளர்ந்த பெண்களும் காட்டிக் கொடுத்தார்கள்

மகள்களைப் புணர்ந்த நிண வாடை வீசும்
இதன் தாழ்வாரங்களில்
கொடுமணல் தாழியைக் கண்டெடுத்திருக்கிறார்கள்
அதில்
சமணி, பமித்தி, கந்தி, கவுந்தி,
கெளத்தி, நக்கன்
பெயர்கள் கிறுக்கப் பட்டிருந்தனவாம்

அவர்களும் இந்த வீட்டில் தான்
இறந்திருக்கக் கூடும்

-லீனா மணிமேகலை

0 comments: