அவள் நிர்வாணத்தை எறும்புகள் கடிக்கும்


தேசிய நெடுஞ்சாலை
சிக்னலுக்கு அருகில்
இரவு நேர கால்செண்டர்
பகலெல்லாம் தூங்குகிறது
அவள்வீட்டு சூரியன்.

தாயின் அகாலமரணத்தில்
அவளுக்காக ஒதுக்கப்பட்டது
இந்த அலுவலகத்தில்
தாயின் இருக்கை.
கேள்விகளுக்கு விடைதெரியாத
அவள் வினாத்தாள்களே
அவளுக்கு
இந்த வேலைக்கான
உத்தரவாதமானது.
நேர்முகத் தேர்வில்
மொழி தெரியாத அவள் முகம் கூட
வேலையில்லை என்றவளை
விரட்டவில்லை.

இந்த வேலையில்
அவளுக்கு வருத்தமில்லை.
ஆனால்-
எப்போதாவது அவள் நிர்வாணத்தை
எறும்புகள் கடிக்கும்
"இவனில் எவனாவது
அப்பனாக இருந்தால்.?."

-புதியமாதவி

0 comments: