விதைகளைப் புணர்ந்த கதை


விரகத்தின் இழைகளால் நெய்யப்பட்ட
இரவாடையை நான் அணிந்திருக்கிறேன்

விபத்தொன்றில் கணவனை இழந்த
அபலையின் இசைப்பாடல்
முதல்புணர்வின் வலியருந்தி மிதந்து வருகிறது

வாயில் பாலொழுகும் குட்டிகள் தொடர
பருத்த முலைகளை வீசியபடி
தெருக்களில் அலைகிறது முதிர்நாயொன்று

கனியின் தோல்பிரித்து
விதைகளைப் புணர்ந்த கதையை
வெட்கமில்லாமல்
என்னிடம் பகிர்ந்து கொள்கிறது காற்று

வண்ணமற்ற ஒளியின் கட்டுறாத கைகள்
என் அடியாழங்களில் பயணிக்க
கோபத்தின் முலாம் பூசிய சொற்பறவைகள்
எங்கிருந்தோ பறந்து வருகின்றன.

நான் எழுத ஆரம்பிக்கிறேன்

அந்தரத்தில் தொங்கியவாறு
என்னைப் பரிகசிக்கிறது
சீம்பாலின் அடர்த்தியாய் திரண்ட மை

தூக்கம் தன் கண்களைத்
தழுவிக்கொள்ளும் அகாலத்தில்

இறுக மூடியிருந்த என் உள்ளங்கைப்பிரித்து
புன்னகைத்தபடி வெளியேறுகிறது தனிமை.



-சுகிர்தராணி