கடவுளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்


ஒளியைத் தின்று பருக்கிறது
காந்தாரி வளர்க்கும் இருள்

தடவியறியும் பழைய பொருட்களின் ஞாபகங்கள்
அவள் மார்பில் இரகசியமாய்ச் சீறியடிக்கின்றன,
அவற்றின் கிளர்ச்சி தாளாமல்
கண்கட்டை யவிழ்த்து ஒரு முத்தம்
ஒளியை வணங்குதல் போலே

கணவன் அவ்வப்பொழுது வினவுகிறான்
தொலைவில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

உறங்க மாட்டாமல் தவிக்கின்றன
அவள் அறிந்த புல்வெளிகளும்,
தாமரைக் குளங்களும் நதியின் பயணங்களும்

உறக்கங்களின் பொழுது எழுந்து
கனவுகளின் அழுத்தத்தை
முடிச்சுகளை இளக்கி வெளியேறுகிறான்

தனது அரண்மனைத் தோட்டத்து மழை
விரகத்தில் புரள்கிறது என்பாள்

முந்தானையின் எல்லையில் தொங்கும்
அலங்காரக் குஞ்சம் கணவன், என நினைப்பாள்

இருளின் சதையைக் குறுவாளால் அரிந்து
பெருகும் குருதியே சூரியனின் இரத்தம்,
ஒரே கனவு அடிக்கடி

ஒரு நாள் கண்கட்டை யவிழ்த்துவிட்டு,
"கடவுளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்" என்றாள்.


-குட்டி ரேவதி

0 comments: