சக்கரம் - தஸ்லிமா நஸ்ரின் கவிதை!


அவர்கள் சிவப்பு ஆடைகளை
அவளுக்குக் கொடுத்தார்கள்
ஏனெனில் சிவப்புதான்
கண்ணைப் பறிக்கும் நிறம்,
அவளின் கழுத்தில் தொண்டையில்
நெக்லஸ் போட்டிருக்கிறார்கள்,
கழுத்தில் சுற்றியுள்ள நெக்லஸ்
நாயின் கழுத்தில் போடப்படும்
வார்ப்பட்டையைப்போல இருந்தது.
அதை விருந்துகளுக்கும்
விழாக்களுக்கும் அணிந்துகொள்கிறார்கள்.
அவளின் காதுகளும், மூக்கும்
கூர்மையானவை.
காதிலும், மூக்கிலும்
அணிகலன்களைப் போட்டிருக்கிறார்கள்;
ஏனெனில் அவளே சிறிது ஒளிர்கிறாள்,
அணிகலன்கள் வரை வைடூர்யங்களாலும்
இன்னும் ஒளிர்கிறாள்
அவளுடைய மெருகு கூடுதலாகிறது.
அவளுடைய கரங்களுக்கு
வளையல் போட்டிருக்கிறார்கள்
அவை விலங்கின் வடிவத்திலமைந்து
கைகளை அசைக்க முடியாமல் செய்கின்றன
கணுக்கால்களுக்குக் கிணுகிணுக்கும்
காப்புகள் அணிவித்திருக்கிறார்கள்
இதனால் அவள் எங்கேயிருக்கிறாள்
என்பதை எளிதில் அறிய முடிகிறது.
முகத்தில் அழகுபடுத்தும் பொருள்களை
வண்ணப்பூச்சுகளைத் தடவிக்கொள்கிறாள்.
கண்களுக்கு, கழுத்திற்கு,
உதடுகளுக்குப் போன்ற இடங்களுக்கும்
மேலும் கூடுதலான பூச்சுகளைத்
தேவையான அளவிற்குப் போடுகிறாள்.
ஒரு விற்பனைச் சரக்கைப்போல மாறினாள்.
கிராமங்களில், நகரங்களில்
நடைபாதைகளில், தெருக்களில்
சேரிகளில், உயர்குடியினர் வகிக்குமிடங்களில்
உள்நாட்டில், வெளிநாட்டில்
எல்லா இடங்களிலும் அவள்
விற்பனைச் சரக்கானாள்.
பல்வேறு வழிகளில், பல விலைகளில்
அவள் விற்கப்படுகிறாள்.
அவள் தொடர்ந்து விற்கப்படுகிறாள்.
வெளிப்படையாக விற்கப்படுகிறாள்.
சில இடங்களில் விற்பனையை
நவீனமயமாக்கியிருக்கிறார்கள்.
பெண்ணின் வளர்ச்சியென்ற போர்வையில்
நவீனமயமாக்கப்பட்டதாகப் பாராட்டுவார்கள்.
பெரும்பாலான முட்டாள் பெண்கள்
சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள், தங்கள் ஆசைகளை
நிறைவேற்றிக்கொள்வதற்காக
விலங்குகளை மாட்டிக்கொள்கிறார்கள்.
இந்த விலங்குகளை உடைப்பதற்குச்
சிலர் உருவாகுகிறார்கள்;
அவர்களும்கூட இந்தச் சிக்கல்களில்
சில தடவைகள் வந்து
வலையில் சிக்கிக்கொள்கிறார்கள்
அல்லது சிலர்
வேறு வழியில் இந்தப்
பொறியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
-தஸ்லிமா நஸ்ரின்

0 comments: