மலட்டுக் குறிகள்
மின்மினிப் பூச்சிகள் மிகுந்த அடர்வானின்
பச்சை வெளிச்சத்தில்
கூடல்ஒன்று நிகழவிருந்தது.
முன்னர் நிகழ்ந்தவை எல்லாம்
வெம்மையைக் கிளறிவிட்டுப் போகும்
பருவம் தப்பிய மழையின்
சாயலுடையதாகவே இருந்தன.
பருவச் சாற்றில் அரும்பிய மலரென
அவனுடல் மேலெழும்பி நுரைக்கிறது.
மகரந்த நெடி பரவியிருந்த
அவன் தேகம்
வெளுத்த பாளையாய் வசீகரிக்கிறது.
சுழலும் காற்றாடியைப் போல்
எனக்குள் அவனைச் சுழற்றத் தொடங்கினேன்
இறக்கைகளை இழந்து
புள்ளியில் மறைய ஆரம்பித்தோம்
காற்றாடி
வெளியின் நிறத்தொடு கட்டுண்டிருந்தது.
கூடலின் முதல் விதியை
அவனது உடல்குளத்தில் துவக்கினேன்
அவன் திகைத்து விலகி
ஏழுகடல் தாண்டி மரமொன்றின் உச்சியில்
மாட்டியிருந்த மலட்டுக் குறியை
எடுத்துவரக் கிளம்பினான்
பின் எப்போதும் அவன் வரவில்லை.
-சுகிர்தராணி