தோழிமார் நிலம்


ஊடல் நிலமெங்கும்
வளவி ஒலி சிதறக்
கொடியிலிருந்து உதிரும் மண்ணில்

நிலத்திற்குரிய தேவதைகளில்
ஒருத்தியாகிய உன் வாசமும்
காடெங்கும் கடலை வாசமும்
நிறைந்திருக்கும்

அந்தி சிவக்கும் வரை
தோழிமார் கதைகளில்
நீயும் கதை சொல்வாய்

உப்பு பூத்த உன் கழுத்து வியர்வை
என் உணர்நீட்சியில் சுவைநீட்சியின்மீது
தாகத்தை ஏவி விடும்
கறுத்த உன்உடம்பு கரிக்கும்

ஆய்ந்து முடித்து
பெண்டுகளோடு நீ சென்ற பிறகு

குறுக்கொடிய நீ
அமர்ந்த இடத்திற்கு வந்து பார்ப்பேன்

எனக்காகவே இனிக்கும் பிஞ்சுகளும்
உரித்துத் தின்ற கடலைத்தொளும்புகளும்
மிஞ்சிக் கிடக்கும்.

-மௌனன் "காலச்சுவடு"