அவள்தான் மலைகளுக்கப்பால் என்னுயிரை வைத்திருக்கிறாளாம் !


ஆத்ம தோழி
புரவியின் மினுமினுப்போடு
என்னை முத்தமிட்டு எழுப்புவாள்

குளிப்பாட்டி என்னுடல் முழுக்க
அலங்காரப் பூச்சிடுவாள்
எங்கிருந்து வருகிறாள்
எங்குபோகிறாள் தெரியவில்லை

அவள்தான் மலைகளுக்கப்பால்
என்னுயிரை வைத்திருக்கிறாளாம்

அப்பள்ளத்தாக்குகளின் முரட்டுச்சுவர்களில்
பட்டுத்திரும்பும் குரல்
என்னுடையதாம்.

மலைப்பயணம் குறித்தான ஆவலை
வெளியிடும் போதெல்லாம்
ஆற்றங்கரை மண்மேடுகளையும்
கிளைகளில் தொங்கும் காற்றையும்
சொல்லித் திசைத் திருப்புவாள்

காலடியில் நழுவும் குழிகளும்
கெட்டித்துப் போன சொற்களும்
என் கேவலை அதிகரிக்கின்றன

தடித்தயென் துக்கம் தாளாது
தொலைவிலிருக்கும் மலைப்பாதையை
அடையாளம் காட்டுகிறாள்

ஒருவேளை
நீங்களிதைப் படித்து முடிக்கும்போது
என்னை நான் அடைந்திருக்கலாம்.

சுகிர்தராணி

1 comments:

said...

படம் அழகு. கவிதையும் தான்..