ஆதித் தாயின் கைரேகை


ஒளியூடல் கொண்ட அப்பிரதேசத்தில்
என்பெயர் அழைக்கப்பட்டவுடன்
முகத்திலறையும் காற்றைப்
பருகியபடி நுழைகிறேன்
பாம்புகள் இணைந்தடங்கும்
ஓசையினும்
மெலிந்துவிடுகிறது என்குரல்
ஆழ்கடலின் குளிர்நீரோட்டத்தை
ஒத்தாயிருக்கிறது
என் நடையின் சாயல்
ஆடைக்கிழிசலைக் கையால்
மறைக்க முயன்று தோற்கும்
சிறுவனின் மருட்கை
என் தோலில் படிந்திருக்கிறது
கொடிகள் பின்னிய வழி
முற்றுப்பெற நிமிர்ந்து பார்க்கிறேன்.
கல்லாய் சமைந்து நிற்கிறது
ஆசிர்வதிக்கப்பட்ட அவ்விருட்சம்
ஆயிரமாயிரம் காலஅழுத்தம்
அதன் கண்களில் வழிகிறது
உடல் முழுவதும்
காலொடிந்த குகை ஓவியங்கள்.
குறிப்பெடுத்துக் கொண்டு திரும்பும்
என் கைகளில் சிவந்த பழமொன்று.
அதில் அழுத்தமாய் படிந்திருந்தது
ஆதித்தாயின் கைரேகை.

-சுகிர்தராணி

0 comments: