வேசியின் வீடு


உனது நிலைப்பாடுகளில் பருவமடைகிறது
எழுதப்படாதயென் காவியங்கள்
எனினும் புத்தம்புதிய ராகஸ்வரங்களைப் பரிசளிப்பேன்
பூமியாகி வெடித்தணைத்துக் கொல்லவும்
உடலெங்கும் காற்றாகி
ஊதி வெடிக்கச் செய்யவும்
ஆழி கவ்வும் உலகில் அந்தரமாக்கவும்
குறுக்கிடுகளற்று விளம்பினாய்
இந்த மாலைப்பொழுது ஒரு மரணத்தை
உரிஞ்சும் பளிங்கென
இலைகளிலும் கிளைவெளிகளிலும்
பூத்துக்கிடந்த சூரியன் நஞ்சுறவுகளாய்
சுவாசம் உதிர்க்கும் துர்ச்சகுணத்தில்
வழியும் கோழைகளில் காடெங்கும்
காமவாசம் வீச
தாய்மையடைந்தாள்
சிறகு வளர்ந்த வேர்கள்
நடுவாசலில் நின்று தேம்பியழுவதை
நோக்கும் கண்களுக்கப்பால் தெரிவது
இராப் பிச்சைக்காரியின் முனகல் அல்லது
அற்றைப் பரிசக்காரியின் இந்திரஜாலம்
பெயரிடப்படாத ராகஸ்வரங்களைத்
துய்த்துணர்ந்த வேசியன் வீடெங்கிலும்
புனையப்பட்டுள்ளவை
தாய்மையின் அடிவயிறுகள்
தொண்டைக்குழியில்
துருத்தி அடைத்து நகர்ந்தபோது
மீன் செதில்களெனத் தரையெங்கும் வெண்தூள்
மிதங்கிக்கொண்டிருந்தன
புற்றின் மேற்புற நீண்டுகிடக்கும்
வாய்மூடிய பாம்புகளைச் சிதைத்தெரிய
காய்ந்த மாட்டுத்தோலினைப் போல்
மயிர்களுதிர்ந்த மைதானம்
சௌகர்யமாயிற்று
வலிகளை வரித்துச்சொல்லி அழத்தெரியாத
கண்ணாடி தேவதையின் உறைந்த பாதரசம்
ஒரு வெற்றுத்தாளென
வெளியெங்கும் விரைத்து நிற்க
வாழ்தலின் அடிவயிற்றை
வருடிக்கொண்டிருந்த பீதாம்பரம்
உயிரினைக் குவித்து பிதுங்கி பீய்ச்சியடித்த
மாத்திரத்தில்
மாறுதலற்ற பருவமாகிய
பருவக்கோடையதைக் கடந்துகொண்டிருக்கிறாள்
கடவுளின் கன்னியாஸ்திரி.

-கு.உமாதேவி

0 comments: