கடலறைந்து பிளக்கும் காகமென் காமம்
என் முலைகளைப்
பிரித்து வைத்தவளைத்
தேடி கொண்டிருக்கிறேன்
நீ தானா அவள்
உன் இரண்டு கைகளுக்கும்
வேலை வேண்டுமென்றா செய்தாய்
இல்லை வாய் கொள்ளவில்லையென்றா
இரு குன்றுகளுக்கிடையே
தூளி கட்டி விளையாடுவது
உன் சிறுவயது கனவு
என் பிள்ளை பால் குடிப்பது கண்டு
பொறுக்காமல் தானே பாகம் பிரித்தாய்?
உன் பிள்ளைக்கு அறிவில்லை,
அது பால் அல்ல, தேன்
என்று வேறு சொல்கிறாய்
வாகை, சித்திரக்கனி, ஊமத்தை,
தாழம்பூ, தாமரை, அல்லி, கத்திரி
என்று தினம் ஒரு பெயரிட்டு
அழைத்து மயக்குகிறாய்
விரட்டவும் முடியவில்லை
உன் நாக்கின் வெப்பத்திற்கு
என் காம்புகள் கருவாச்சி தளிர்கள்
போல துளிர்க்கின்றன.
பல் தடங்கள் இணைத்து நீ வரையும்
சித்திரங்கள் பருவந்தோறும்
உயிர் பெறுகின்றன
அவற்றை ஒவ்வொரு நாளும்
ஒரு அகழ்வாராய்ச்சியாளன் வந்து
வாங்கி செல்கிறான்.
நீ கிழித்து வைத்திருக்கும்
ரவிக்கைகளை என்னடி செய்வது?
நீ அகன்ற
அந்தப் பொழுது
என் நிர்வாணத்தை உடைந்த கண்ணாடிக்கு வீசினேன்
காற்றின் அறைகளில் அமிலத்தை கொட்டினேன்
இருத்தலின் துண்டுகளை ஒன்று விடாமல் பொறுக்கித் தின்றேன்
கனவுகளை விற்கும் கலைஞர்களை நாடாப் புழுக்களைப் போல்
வல்லாங்கச் சொல்லி நிந்தித்தேன்
கவிதைகளின் புதிர்களை உருவி நாய்களுக்கு போட்டேன்
என் எலும்புகளில் வன்மம் ஏறுகிறது
நீல கரப்பான்
கடலறைந்து பிளக்கும் காகமென் காமம்
பெருமழையில் உன் விந்து நுரைப்பைத் தேடி நீந்துகிறேன்
அகப்படு
- லீனா மணிமேகலை
0 comments:
Post a Comment