எள்ளுப் பூ கனவும் ஸ்வெட்டர் அனிந்த வன தேவதையும்.


கனவெல்லாம் விரிகிறது எள்ளு பூ ஒன்று.முதலாய் அதை பார்த்த 
நேற்று கனவாகவும், கனவு நிஜமாகவும் மிதந்து 
கொண்டிருக்கிறது மஞ்சளில்.

மஞ்சள் தாண்டி நுழையும் அத்தி நிறைத்த ஆலம் விழுதும்,
ஊதா பூ மறைத்த சிவப்பு முள் செடியும், கனவிற்குள் காடு 
வளர்க்க தயாராகிறது.

குளம் வேடிக்கை பார்த்த தருணம், மிரட்டிய மலை மாடு 
ஒன்றிற்கு பயந்து திரும்பிய தாமரைகள், பயம் ஏற்படுத்துகிறது 
கனவு முழுவதும்.

கனகாம்பரமும், செவ்வந்தி பூவும் தேங்கிய குடிசை வீடொன்று, 
எப்போதோ பெய்த மழையை,உன்னை, நாம் அருந்திய மழை 
தேநீரை நினைவு படுத்துகிறது.

சாரல் உணரும் இன்னொடியில், கனவில் மழை பெய்யுமா என்று 
ஜினியா பூவொன்றிடம் கேட்டு செல்கிறார்கள் யாரோ.

சாரலும், எள்ளு பூவும் கொஞ்சம் கையில் எடுத்து, மெஹ்ரூன்
ஸ்வெட்டர் அணிந்த வன தேவதையுடன் காடு பார்க்க செல்கிறேன், 
மஞ்சளும் ஊதாவும் சிவப்பும் பச்சையும் பின்தொடர.

-கவிதா சொர்ணவல்லி.

தப்பர்த்தம் கொள்ளாதே புணர்ச்சிக்கு அழைக்கிறேனென்று


“மரந்துளிர்ந்த சாலையோரம்
கைப்பற்றி என் கனவுகேள்.
மனமொடிந்த பொழுதெல்லாம்
திகட்டும் வரை
உன் தோள்கொடு.
விளக்கணைந்த பின்னிரவில்
இமைமீறும் என் கண்ணீரை
சுட்டுவிரலால் துடைத்துவிடு.
மறுதலித்த வாழ்க்கைக்கு
என் பிரதியென
உன்முகம் காட்டு.
இத்தனைக்கும் சம்மதமெனில்
தயவுசெய்து
தப்பர்த்தம் கொள்ளாதே
புணர்ச்சிக்கு
அழைக்கிறேனென்று’’
“வீட்டினில்
வலுவிழந்த கெடுபிடிகள்.
வெளிச்செல்கையில்
பார்வைகள் துரத்தாத நிம்மதி.
சலனத்தைத் தூண்டாத
அந்த மூன்று நாட்கள்.
விளம்பரம்
உள்ளாடைகளின்
அவசியம் புரியாத
அவயவங்கள்.
செளகரியம்தான்
நரையோடியும்
பூப்படையாமல் இருப்பது’’
“இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
வேடிக்கைப் பார்ப்பதாய்
பாவனை செய்யும் நீ
என்னிடம்
எதை எதிர்பார்க்கிறாய்
காதலையா?’’

உயிர்வாதைக்குப் பிறகு,
“இரத்தச் சகதியில்
மீண்டழுத குழந்தையின்
துணிவிலக்கி
பெண்ணென முகம் சுழிப்பவனே
அன்று
என்மீது பரவியபோது
மனம் களித்தவன் நீதானே?’’
-சுகிர்தராணி

நான் பரத்தைகளுள் ராணி


நஞ்சாய் காய்ந்திருந்த நிலா நாளொன்று

தீண்டலற்ற கொதிப்பில்
உடலின் குறுக்கு சால் ஓடையொன்று உடைந்து
கைகளில் குருதியின் சகதி
ஏன் என்று கேட்டான் அவன்
ஏறிட்டு
பார்த்த என் கண்களை
ஏற்கெனவே தெரியும் என்றான்

உறைய மறுத்த குருதியோடு போராடியபின்
உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்
சாரையை சுரக்க வைக்க வேண்டும் என்றேன்
வேர்களற்ற அவன் கால்களை என் கழுத்தில் சுற்றினேன்
வேட்கையின் நொதியை
பருகிய நொடிகளில்
வேறென்ன வேண்டும் என்றான்


பெண்களை வெறுப்பவனா நீ
அப்படி சொல்லிவிட முடியாது
ஆனால் யோனி மயிர்
ஏன்
கிருமிகள்
வெள்ளைப் பொய்கள்
குற்றங்கள் தண்டிக்கப் பட வேண்டியவை
சரிதான்
உனக்கு என்ன விலை வேண்டும் தருகிறேன்
என்னை நீ பார்க்க வேண்டும்
தொடுவது அவசியமில்லை
கண் கொட்டாமல்
எவ்வளவு நேரம் பார்க்கிறாயோ,அவ்வளவு விலை
சரி

என் படுக்கையறைக்கு வந்தான் அவன்
அம்மணம்
அவனுக்கு காட்சி
எனக்கு செயல்
எனக்கு காட்சி
அவனுக்கு செயல்
தவளை வாசனை
நனைந்த பறவைக் குஞ்சொன்றின் தலை
கசியும் ரகசியங்களின் வெளுப்பு
பொந்து
நனவிலி
நரகத்தின் வாசல்

வெளியேறினான்
ஆனால் மீண்டும் வந்தான்
பருத்த மின்னலொன்று தாக்குண்டவனாய்
அதன் ஒளிக்கு கட்டுண்டவனாய்
கன்னிமை என்பது கட்டுக்கதை என்றேன்
நீ நம்ப விருப்பப் படாதது என்றேன்
என் உடல் நினைவகம் அல்ல
மொழியுமல்ல
பேசுவேன்,
புரிந்துக் கொள்ள மாட்டேன்
அர்த்தம் அதிகாரம் என்றேன்
பார்க்க முடியாததை நோக்கி திரட்டப்பட்ட
மழுங்கிய முனையின் விறைப்பு
அவன் பார்வையை மங்கலாக்கியது

களைப்பாயிருக்கிறது
நாளை வருகிறேன்
அதிக விலை தருகிறேன்

என்னை அருகில் வந்து பார்
தூமையில் கெட்டித்திருந்த மயிர்
அவனின் நாக்கு ஒரு சிசுவினுடையதானது
பாலினம் மறந்தான்

அம்மா
அது ஆணின் நோய்
அப்பா என்ற சொல்லை பெருக்கிய தொற்று

நான் என்னையே பார்த்துக் கொள்ள சகியாமல் போகும்போதும்
உன் பார்வையை விலக்க கூடாது
என் மனதை பழக்கப் படுத்த முயற்சிக்காதே

ஆண்டையின் தந்திரம் அது
வெறுப்பு என்னை வசியம் செய்கிறது
வெறுப்பதை கைவிடாதே


மூன்றாவது இரவு

கதவை திறந்துப் போட்டிருக்கிறாய்
யாரும் வந்துவிட்டால் என்ன செய்வாய்



என் ரத்தம்
கெட்டுப் போகாது

உடைமையும் இழப்பும் நடக்க இங்கென்ன போரா நடக்கிறது?
ரத்த ஒழுக்கிற்கு எதுவும் தெரியாது
விடுதலையைத் தவிர
அதன் மைக்கருப்பு உனக்கு அச்சமூட்டுகிறதா?
என்னை நீ அவமதிக்க முடியாது
உன்னால் கருத்தரிக்க முடியாதென்பதால் துளிர்க்கும் ஒவ்வொரு புதிய உயிரும் உன் ஆளுகைக்கு உட்பட்டதல்ல அல்ல

மறைந்தாய்
நானும் மறைந்து போவேன்
பார்வைக்கு கட்டுப்படாமல்
பார்த்திருக்க இருக்க மறைந்துப் போவேன்
அதுவரை காத்திருப்பேன்
பரத்தை
அவன் வாய் முணுமுணுத்ததை
கவனிக்காமல் இல்லை
அசை போடும்போது திருத்திக் கொள்வான்
நான் பரத்தைகளுள் ராணி

இயக்குனர் காதரின் பிரேயிலிக்கு...........


லீனா மணிமேகலை

ஒரு கல் , ஒரு மழை-லீனா மணிமேகலை

விண்ணில் என் தோழிகளோடு முயங்கி கொண்டிருந்த காலம்
நிலா மரத்தின் நிழலில் எங்கள் புணர்குறிகளை வரைந்திருந்தோம்
விதைக்கவும் இல்லை அறுக்கவும் இல்லை
மண்ணில் இருந்த அவனுக்கு பொறாமை.
இரண்டு வாய்களாலும் உண்டு களித்திருந்த
அவள்களை அவனால் சகிக்க முடியவில்லை
கல் கொண்டு எறிந்தான்
அதை அன்பென்று கற்பனை செய்துக் கொண்ட நான் பருவம் எய்தினேன்.
மாதம் மழை பொழிந்தேன்
தன் உறுப்பைக் கீறிப் பார்த்தும்
நிலா அவனுக்கு கருணை காட்ட வில்லை.
சூரியனின் புத்திரனாயினும்
அவனால் பருகவே முடியாத வெள்ளத்தை
வாய்க்கால் கட்டி தன் நிலத்தில் பாய்ச்சினான்
காதல் என்றான்
நம்பினேன்
என் தோழிகள் தர முடியாதது என்று சவால் செய்து விந்துறைந்தான்
அவன் விதைகளின் பழுப்பு மணம் ஒரு போதும்
அவளின் நாக்கு தரும் ஆம்பல் பூக்களை ஈடு செய்யவில்லை
சூல் கொண்டேன்
அவனால் கருத்தரிக்க முடியவில்லை என்ற பயம்
மீண்டும் கல் எறிந்தான்
சிசுவை ரத்தப் பெருக்கினேன், அவன் பெயரையும்
முடிவில்லாமல் அதைக் கழுவத் தொடங்கினான் அவன்

-லீனா மணிமேகலை

கடலறைந்து பிளக்கும் காகமென் காமம்


என் முலைகளைப்

பிரித்து வைத்தவளைத்

தேடி கொண்டிருக்கிறேன்

நீ தானா அவள்

உன் இரண்டு கைகளுக்கும்

வேலை வேண்டுமென்றா செய்தாய்

இல்லை வாய் கொள்ளவில்லையென்றா

இரு குன்றுகளுக்கிடையே

தூளி கட்டி விளையாடுவது

உன் சிறுவயது கனவு

என் பிள்ளை பால் குடிப்பது கண்டு

பொறுக்காமல் தானே பாகம் பிரித்தாய்?

உன் பிள்ளைக்கு அறிவில்லை,

அது பால் அல்ல, தேன்

என்று வேறு சொல்கிறாய்

வாகை, சித்திரக்கனி, ஊமத்தை,

தாழம்பூ, தாமரை, அல்லி, கத்திரி

என்று தினம் ஒரு பெயரிட்டு

அழைத்து மயக்குகிறாய்

விரட்டவும் முடியவில்லை

உன் நாக்கின் வெப்பத்திற்கு

என் காம்புகள் கருவாச்சி தளிர்கள்

போல துளிர்க்கின்றன.

பல் தடங்கள் இணைத்து நீ வரையும்

சித்திரங்கள் பருவந்தோறும்

உயிர் பெறுகின்றன

அவற்றை ஒவ்வொரு நாளும்

ஒரு அகழ்வாராய்ச்சியாளன் வந்து

வாங்கி செல்கிறான்.

நீ கிழித்து வைத்திருக்கும்

ரவிக்கைகளை என்னடி செய்வது?







நீ அகன்ற

அந்தப் பொழுது

என் நிர்வாணத்தை உடைந்த கண்ணாடிக்கு வீசினேன்

காற்றின் அறைகளில் அமிலத்தை கொட்டினேன்

இருத்தலின் துண்டுகளை ஒன்று விடாமல் பொறுக்கித் தின்றேன்

கனவுகளை விற்கும் கலைஞர்களை நாடாப் புழுக்களைப் போல்

வல்லாங்கச் சொல்லி நிந்தித்தேன்

கவிதைகளின் புதிர்களை உருவி நாய்களுக்கு போட்டேன்



என் எலும்புகளில் வன்மம் ஏறுகிறது

நீல கரப்பான்

கடலறைந்து பிளக்கும் காகமென் காமம்

பெருமழையில் உன் விந்து நுரைப்பைத் தேடி நீந்துகிறேன்

அகப்படு


- லீனா மணிமேகலை

பரத்தைகளுள் ராணி


நஞ்சாய் காய்ந்திருந்த நிலா நாளொன்று

தீண்டலற்ற கொதிப்பில்
உடலின் குறுக்கு சால் ஓடையொன்று உடைந்து
கைகளில் குருதியின் சகதி
ஏன் என்று கேட்டான் அவன்
ஏறிட்டு
பார்த்த என் கண்களை
ஏற்கெனவே தெரியும் என்றான்

உறைய மறுத்த குருதியோடு போராடியபின்
உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்
சாரையை சுரக்க வைக்க வேண்டும் என்றேன்
வேர்களற்ற அவன் கால்களை என் கழுத்தில் சுற்றினேன்
வேட்கையின் நொதியை
பருகிய நொடிகளில்
வேறென்ன வேண்டும் என்றான்



பெண்களை வெறுப்பவனா நீ
அப்படி சொல்லிவிட முடியாது
ஆனால் யோனி மயிர்
ஏன்
கிருமிகள்
வெள்ளைப் பொய்கள்
குற்றங்கள் தண்டிக்கப் பட வேண்டியவை
சரிதான்
உனக்கு என்ன விலை வேண்டும் தருகிறேன்
என்னை நீ பார்க்க வேண்டும்
தொடுவது அவசியமில்லை
கண் கொட்டாமல்
எவ்வளவு நேரம் பார்க்கிறாயோ,அவ்வளவு விலை
சரி


என் படுக்கையறைக்கு வந்தான் அவன்
அம்மணம்
அவனுக்கு காட்சி
எனக்கு செயல்
எனக்கு காட்சி
அவனுக்கு செயல்
தவளை வாசனை
நனைந்த பறவைக் குஞ்சொன்றின் தலை
கசியும் ரகசியங்களின் வெளுப்பு
பொந்து
நனவிலி
நரகத்தின் வாசல்


வெளியேறினான்
ஆனால் மீண்டும் வந்தான்
பருத்த மின்னலொன்று தாக்குண்டவனாய்
அதன் ஒளிக்கு கட்டுண்டவனாய்
கன்னிமை என்பது கட்டுக்கதை என்றேன்
நீ நம்ப விருப்பப் படாதது என்றேன்
என் உடல் நினைவகம் அல்ல
மொழியுமல்ல
பேசுவேன்,
புரிந்துக் கொள்ள மாட்டேன்
அர்த்தம் அதிகாரம் என்றேன்
பார்க்க முடியாததை நோக்கி திரட்டப்பட்ட
மழுங்கிய முனையின் விறைப்பு
அவன் பார்வையை மங்கலாக்கியது


களைப்பாயிருக்கிறது
நாளை வருகிறேன்
அதிக விலை தருகிறேன்


என்னை அருகில் வந்து பார்
தூமையில் கெட்டித்திருந்த மயிர்
அவனின் நாக்கு ஒரு சிசுவினுடையதானது
பாலினம் மறந்தான்


அம்மா
அது ஆணின் நோய்
அப்பா என்ற சொல்லை பெருக்கிய தொற்று


நான் என்னையே பார்த்துக் கொள்ள சகியாமல் போகும்போதும்
உன் பார்வையை விலக்க கூடாது
என் மனதை பழக்கப் படுத்த முயற்சிக்காதே


ஆண்டையின் தந்திரம் அது
வெறுப்பு என்னை வசியம் செய்கிறது
வெறுப்பதை கைவிடாதே




மூன்றாவது இரவு


கதவை திறந்துப் போட்டிருக்கிறாய்
யாரும் வந்துவிட்டால் என்ன செய்வாய்



என் ரத்தம்
கெட்டுப் போகாது


உடைமையும் இழப்பும் நடக்க இங்கென்ன போரா நடக்கிறது?
ரத்த ஒழுக்கிற்கு எதுவும் தெரியாது
விடுதலையைத் தவிர
அதன் மைக்கருப்பு உனக்கு அச்சமூட்டுகிறதா?
என்னை நீ அவமதிக்க முடியாது
உன்னால் கருத்தரிக்க முடியாதென்பதால் துளிர்க்கும் ஒவ்வொரு புதிய உயிரும் உன் ஆளுகைக்கு உட்பட்டதல்ல அல்ல


மறைந்தாய்
நானும் மறைந்து போவேன்
பார்வைக்கு கட்டுப்படாமல்
பார்த்திருக்க இருக்க மறைந்துப் போவேன்
அதுவரை காத்திருப்பேன்
பரத்தை
அவன் வாய் முணுமுணுத்ததை
கவனிக்காமல் இல்லை
அசை போடும்போது திருத்திக் கொள்வான்
நான் பரத்தைகளுள் ராணி

-லீனா மணிமேகலை

நிலவு ஆமையைக் கருவுற்றிருந்தது


நிலத்தின் மீது சினம் கொண்ட நிலவு
கடலில்
தன்னை மாய்த்துக் கொள்ள
விழுந்தது

அன்னங்கள் தங்கள் அலகுகளில் அள்ளி
நிலவை ஆமையோட்டின் மேல் விட்டது

ஹிட்ச்காக்கின் கழிவறைகளில் கிடந்த
பாம்புகளுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை

கிரகணங்கள் நிகழாமல் உறைந்துப் போன
காலம்
கிம் கி டுக்கிடம் யாசித்து நிற்கிறது
அவரோ கள்ளக் காதலர்களைப் பிரிப்பது
முடியாத காரியம் என்கிறார்

காலம் திகைத்து நிற்பதைக் கண்ட
சூரியன்
குந்தியையும் கர்ணனையும் நினைத்துப் பார்த்து
கண்ணீர் விட்டது

காதரீன் பிரேயிலி
ஆமைக்கும் நிலவுக்குமான காமத்தை வைத்து
புதிய படத்திற்கான திரைக்கதையை எழுதுகிறார்

பாம்புகள் மூன்றாம் உலகப் போரினை அறிவிக்கின்றன

அமெரிக்காவுடனான பாம்புகளின் ஆயுத பேரத்தை மைக்கேல் மூர்
ஆவணப் படமெடுத்து அம்பலப் படுத்துகிறார்

காதல் பயங்கரவாதிகள் தடுப்பு சட்டத்தின் கீழ்
அண்டசராசரத்திலும்
ஆமைகளைக் கண்ட இடத்தில் சுடும்
அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது

கள்ளக் காதல் அடிப்படை மனித உரிமை
என்ற முழக்கத்தை முன்வைத்து
அருந்ததிராயும் நோம் சொம்ஸ்கியும்
போராட்டங்களில் இறங்குகிறார்கள்
ஆனந்த் பட்வர்த்தன் கிராமங்கள் தோறும்
கத்தாரின் எழுச்சிப் பாடல்கள் ஒலிக்க
எதிர்ப்பணியினரின் காட்சிகளை
திரையிடுகிறார்

பாம்புகளின் படை பலம் என்னவோ
வேதாந்தாவும், கோகோ கோலாவும், மேக்டோனால்டுமாய்
நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது
பான் கீ மூன் தலையிட்டும்
யுத்தத்தை தடுக்க முடியவில்லை

ஆமைகள் அழித்தொழிக்கப் படுகின்றன
அன்னங்கள் துரோகத்தின் சின்னங்களாக மாறின
நிலவு வானத்திற்கே துரத்தப்படுகிறது
கிரகணங்கள் நடந்தேருகின்றன

காலத்தின் முள்ளும் நகர்கிறது

நிலவு ஆமையைக் கருவுற்றிருந்தது