வனதேவதை


பால்மேனிக் கொங்கைகள் பற்றியேறித்

தழுவி அணைக்கும் கொடிகள் உண்டு

ரகசியமாய் வெடித்துப் பரவி

ஈரமண்ணில் கருக்கொள்ளும் விதைகளுண்டு

ஏகாந்தமாய் அதிகாலை

உடலையே விரித்துப்போட்டு

ஒளியோடு புணரப் புணரச் சுவாசத்திலே

குழறி எழும் பறவைகளும் காண்பேன்

கள்ள மார்புகள் கூடிக்கழிக்க”

இரவின் மாயை

முதுமையிலும் புணரும் இச்சையில்

புடவையை மாற்றுவேன் வண்ணாத்திப் பூக்களாய்

என் புதருக்குள் நுழைந்தவனை

மீளவிடேன்

ஆணுறுப்பு மலையருவி

சொரிந்து நிறையவும் வழி தருவேன்

வனதேவதைக்குப் புருஷனில்லை

புரட்டிப் புரட்டிப் போகிக்க வழிப்போக்கர் எவருமுண்டு

உச்சியில் தீவிரமாய் ஒளி தேடி

நான் தரிக்க இலைகளின் மொழியுமுண்டு


-குட்டி ரேவதி

0 comments: