சயனைடு கவிதை
வாடகைத் தாயின் மார்பில்
அனாதைக் குழந்தைகளாய்
அகதிகள்.
எரிக்கப்பட்ட கூட்டிலிருந்து
இரை தேடி வரும் ரணம் பூசிய
சிறகுகள்.
பனை மரங்கள்
துப்பாக்கிகளாய் வெடிக்க
தேயிலை புகையிலையாய் கசியும்.
சமாதானப் புறாவின்
சவத்தில்
சிவப்புக் கொடி.
கிரிக்கெட் ஆட்டம் நின்றுபோனால்
இன்னொரு நாள்
வைத்துக்கொள்ளலாம்.
கோயிலுக்குள் குண்டு வெடித்தால்
இன்னொரு கடவுள் சிலையை
வாங்கிக்கொள்ளலாம்.
வகுப்பறையில் குண்டு வெடித்தால்
எப்படி முளைக்கவைப்பது
இன்னொரு சீருடைச் செடியை?
ஊரே அழுகிறது
எதற்கு ஊரடங்கு?
ஒரு துளி நிலத்தில்
கடலளவு கல்லறைகள்.
மண்டை ஓடுகள்
எல்லைக் கோட்டை அழிக்கட்டும்.
பிணங்களின் கனவுமெய்ப்பட வேண்டும்.
ராமேஸ்வரத்தில் ஒதுங்கிய
தமிழர்கள்
தாய் மண்ணுக்குத் திரும்பும்போது
தேசியகீதம்தாய் மொழியாகட்டும்.
ரத்தத்தில் மூழ்கிய
பேனாவிலிருந்து
துளித் துளியாய்
கரைகிறது
6 comments:
சோகத்தின் வலி சொல்லும் கவிதை.
//ரத்தத்தில் மூழ்கிய
பேனாவிலிருந்து
துளித் துளியாய்
கரைகிறது
கவிதை.//
ரத்தக் கண்ணீர் துளிகளை தொட்டு தூரிகை வரைந்திருக்கிறது !
நெஞ்சை கசக்கிய கவிதை... நன்றி மகி, இங்கே கொண்டு வந்து பகிர்ந்து கொண்டமைக்கு.
// கிரிக்கெட் ஆட்டம் நின்றுபோனால்
இன்னொரு நாள்
வைத்துக்கொள்ளலாம். கோயிலுக்குள் குண்டு வெடித்தால்
இன்னொரு கடவுள் சிலையை
வாங்கிக்கொள்ளலாம்.
வகுப்பறையில் குண்டு வெடித்தால்
எப்படி முளைக்கவைப்பது
இன்னொரு சீருடைச் செடியை? //
இந்த வரிகள் மிகவும் தாக்கமாக உள்ளன -
கண்ணில் படவைத்து, பல நெஞ்சங்களை உருகவைத்துவிட்டீர்கள் மகி!
//எரிக்கப்பட்ட கூட்டிலிருந்து
இரை தேடி வரும் ரணம் பூசிய
சிறகுகள்.
//
வரும் சிறகுகளை வாஞ்சையும் தழுவி,உறவு வளர்ப்போம்!
நம் சகோதரர்களின் அவலம் சொல்லும் வரிகள் மகி!
அனைவரும் படிக்கும் வண்ணம் பதிவிட்டமைக்கு நன்றி!
அன்புடன்...
சரவணன்.
/*ராமேஸ்வரத்தில் ஒதுங்கிய
தமிழர்கள்
தாய் மண்ணுக்குத் திரும்பும்போது
தேசியகீதம்தாய் மொழியாகட்டும்.*/
கவிஞனின் கனவு நனவாக இறைஞ்சுகிறேன் இறைவா!எம்மக்களுக்கு அமைதியான விடியலை விரைவில் தா
/*ரத்தத்தில் மூழ்கிய
பேனாவிலிருந்து
துளித் துளியாய்
கரைகிறது கவிதை.*/
வலியுணர்த்தும் வரிகள்
பகிர்தலுக்கு நன்றி மகி (நான் பதிவிடலாம் என எண்ணி இருந்தேன் முந்திக் கொண்டீர்கள் :) பரவாயில்லை)
Post a Comment